Skip to content
எரேமியா 27:16-22

எரேமியா 27:16-22

16
அதன்பின் நான் ஆசாரியர்களிடமும், இந்த எல்லா மக்களிடமும் சொன்னதாவது, “யெகோவா சொல்வது இதுவே: யெகோவாவின் ஆலயத்திற்குரிய பொருட்கள் திரும்பவும் பாபிலோனிலிருந்து விரைவில் கொண்டுவரப்படும் என்று சொல்கிற உங்கள் இறைவாக்கினருக்குச் செவிகொடுக்க வேண்டாம். அவர்கள் உங்களுக்குப் பொய்யையே இறைவாக்காக உரைக்கிறார்கள்.
17
அவர்களுக்குச் செவிகொடுக்க வேண்டாம். பாபிலோன் அரசனுக்குப் பணிசெய்யுங்கள். அப்பொழுது உயிர் வாழ்வீர்கள். இந்தப் பட்டணம் ஏன் பாழடைய வேண்டும்?
18
ஆனால் அந்த இறைவாக்கு உரைப்போர் உண்மையான இறைவாக்கினராய் இருந்து, யெகோவாவின் வார்த்தை அவர்களுடன் இருந்தால், அவர்கள் சேனைகளின் யெகோவாவிடம் கெஞ்சிக் கேட்கட்டும். அவர்கள் யெகோவாவின் ஆலயத்திலும், யூதா அரசர்களின் அரண்மனையிலும், எருசலேமிலும் மீதியான பணிப்பொருட்கள் பாபிலோனுக்குப் போகாமலிருக்க மன்றாடட்டும்.
19
ஏனெனில் அந்தத் தூண்கள், கடல் தொட்டி, அசையும் ஆதாரங்கள், பட்டணத்தில் விடப்பட்ட மற்ற பணிப்பொருட்கள் யாவற்றையும் குறித்துச் சேனைகளின் யெகோவா இப்படிச் சொல்கிறார்:
20
இவற்றைப் பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சார் பாபிலோனுக்குக் கொண்டுபோகவில்லை. யூதாவின் அரசன் யோயாக்கீமின் மகன் எகொனியாவுடன் யூதாவிலும், எருசலேமிலும் இருந்த உயர் அதிகாரிகளையும் பாபிலோனுக்கு நாடுகடத்தியபோது இவற்றைக் கொண்டுபோகவில்லை.
21
ஆகவே இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா, ஆலயத்திலும் யூதா அரசனின் அரண்மனையிலும் எருசலேமிலும் விடப்பட்ட பொருட்களைக் குறித்துச் சொல்வது இதுவே:
22
அவை பாபிலோனுக்கு எடுத்துச் செல்லப்படும். நான் அவைகளை விசாரிக்கும் நாள்வரைக்கும் அவைகள் அங்கேயே தொடர்ந்து இருக்கும்; நான் அவைகளைத் திரும்பவும் கொண்டுவந்து எருசலேமில் மீண்டும் வைப்பேன் என்று யெகோவா அறிவிக்கிறார்.”
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options