Skip to content
ஏசாயா 45:18-25

ஏசாயா 45:18-25

18
யெகோவா கூறுவதாவது: அவர் வானங்களை உருவாக்கினார், அவரே இறைவன்; அவர் பூமியை உருவமைத்துப் படைத்தார்; அவரே அதை அமைத்தார். அது வெறுமையாயிருக்க அவர் படைக்கவில்லை, குடியிருப்புக்காகவே அதை உருவாக்கினார். அவர் கூறுவதாவது: “நானே யெகோவா, என்னையன்றி வேறொருவருமில்லை.
19
இருளின் நாட்டில் எங்கேயாகிலும் இருந்து நான் இரகசியமாய்ப் பேசவில்லை, ‘வீணாக என்னைத் தேடுங்கள்’ என்று நான் யாக்கோபின் வழித்தோன்றல்களுக்குச் சொல்லவுமில்லை; நான் யெகோவா, உண்மையையே பேசுகிறவர்; சரியானதையே நான் அறிவிக்கிறேன்.
20
“ஒன்றுசேர்ந்து வாருங்கள்; பிற நாடுகளிலிருந்து வந்த அகதிகளே, ஒன்றுகூடுங்கள். மரச்சிலைகளைச் சுமந்து செல்வோரும், இரட்சிக்க முடியாத தெய்வங்களிடம் மன்றாடுகிறவர்களும் அறிவீனர்.
21
நடக்கப்போவது என்ன? சொல்லுங்கள்; ஒன்றுகூடி ஆலோசித்து அதை அறிவியுங்கள். வெகுகாலத்திற்குமுன் இதை முன்னறிவித்தவர் யார்? ஆதியிலிருந்தே அதை அறிவித்தவர் யார்? அது யெகோவாவாகிய நான் அல்லவோ! என்னையன்றி வேறே இறைவன் இல்லை. நீதியான ஒரு இறைவன், ஒரு இரட்சகர்; என்னையன்றி வேறொருவரில்லை.
22
“பூமியின் எல்லைகளிலுள்ளவர்களே, நீங்கள் எல்லோரும் என்னிடமாகத் திரும்பி இரட்சிப்படையுங்கள். ஏனெனில், நானே இறைவன், வேறு ஒருவரும் இல்லை.
23
என்னைக்கொண்டே நான் ஆணையிட்டேன், இதை உத்தமத்தோடு எனது வாய் பேசியிருக்கிறது. அந்த வார்த்தை ஒருபோதும் மாறாது: ஒவ்வொரு முழங்காலும் எனக்கு முன்பாக முடங்கும்; ஒவ்வொரு நாவும் என் பெயரிலேயே ஆணையிடும்.
24
‘யெகோவாவிடம் மட்டுமே நீதியும் வல்லமையும் இருக்கிறது’ என்று என்னைப்பற்றி அவர்கள் சொல்வார்கள்.” அவருக்கு எதிராக எழுந்த அனைவரும் அவரிடம் வந்து வெட்கத்திற்கு உட்படுத்தப்படுவார்கள்.
25
ஆனால் இஸ்ரயேலின் வழித்தோன்றல்கள் யாவரும் யெகோவாவிடம் நீதியானவர்களாகக் காணப்பட்டு மேன்மையடைவார்கள்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options