ஏசாயா 19:1-15
1
இது எகிப்தைப் பற்றிய ஒரு இறைவாக்கு: இதோ, யெகோவா விரைந்து செல்லும் மேகமொன்றில் ஏறி எகிப்திற்கு வருகிறார். எகிப்திய விக்கிரகங்கள் அவர்முன் நடுங்குகின்றன; எகிப்தியரின் இருதயங்கள் அவர்களுக்குள்ளேயே உருகுகின்றன.
2
“எகிப்தியனை எகிப்தியனுக்கு விரோதமாக நான் எழுப்பிவிடுவேன்; சகோதரன் சகோதரனுக்கு விரோதமாகச் சண்டையிடுவான். அயலான் அயலானை எதிர்ப்பான், பட்டணம் பட்டணத்தை எதிர்க்கும், அரசு அரசை எதிர்க்கும்.
3
அதனால் எகிப்தியர் இருதயத்தில் சோர்ந்துபோவார்கள்; நான் அவர்களுடைய திட்டங்களை நிறைவேறாதபடி செய்வேன். அவர்கள் விக்கிரகங்களிடமும், இறந்தோரின் ஆவிகளிடமும், குறிசொல்வோரிடமும், ஆவியுலகத் தொடர்புடையோரிடமும் ஆலோசனை கேட்பார்கள்.
4
நான் எகிப்தியரை கொடிய தலைவன் ஒருவனது வல்லமைக்கு ஒப்புக்கொடுப்பேன். அவர்களை கொடூரமான அரசன் ஒருவன் ஆளுவான்” என்று யெகோவா, சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார்.
5
ஆற்றின் வெள்ளம் வற்றிவிடும், ஆற்றின் அடித்தரை காய்ந்து வறண்டுவிடும்.
6
வாய்க்கால்கள் நாறும்; எகிப்தின் நீரோடைகள் வற்றி வறண்டுபோகும். கோரையும் நாணலும் வாடிவிடும்.
7
ஆற்றின் முகத்துவாரத்தில், நைல் நதியின் ஓரத்தில் வளரும் தாவரங்களும் வாடிவிடும். நதியோரம் விதைக்கப்பட்ட உலர்ந்து, பறந்து இல்லாமல் போகும்.
8
மீனவர்கள் புலம்புவார்கள், நைல் நதியில் தூண்டில்போடும் யாவரும் அழுவார்கள்; தண்ணீருள் வலை வீசுகிறவர்களும் கவலையால் வாடிப்போவார்கள்.
9
சணற்பட்டுத் தொழில் செய்வோரும் வெண்பருத்தி நூலினால் நெசவு செய்வோரும் வெட்கமடைவார்கள்.
10
துணி நெசவு செய்வோர் அனைவருமே சோர்வடைவார்கள்; கூலிக்கு வேலைசெய்யும் யாவரும் மனமுடைந்து போவார்கள்.
11
சோவானின் அதிகாரிகள் புத்தியீனரேயன்றி வேறு யாருமல்லர்; பார்வோனின் ஞானமுள்ள ஆலோசகர் அர்த்தமற்ற ஆலோசனை வழங்குகிறார்கள். “நான் ஞானிகளில் ஒருவன்; பூர்வகால அரசர்களின் வழிவந்தவன்” என்று நீங்கள் ஒவ்வொருவரும் எப்படி பார்வோனுக்குச் சொல்வீர்கள்?
12
இப்பொழுது உன் ஞானிகள் எங்கே? சேனைகளின் யெகோவா எகிப்திற்கு விரோதமாகத் திட்டமிட்டிருப்பதை, அவர்கள் உனக்கு வெளிப்படுத்திக் காட்டட்டும்.
13
சோவானின் அதிகாரிகள் புத்தியீனரானார்கள்; மெம்பிஸ் பட்டணத்தின் தலைவர்கள் ஏமாந்துபோனார்கள். மக்கள் கூட்டங்களின் மூலைக் கற்களாய் இருந்த அவர்கள் எகிப்தை வழிதவறிப் போகச் செய்தார்கள்.
14
யெகோவா அவர்களுக்குள் மயக்கத்தின் ஆவியை ஊற்றியிருக்கிறார். மதுபோதையில் தனது வாந்தியைச் சுற்றி தள்ளாடுபவனைப் போல், அவர்கள் எகிப்தை அதன் செயல்கள் அனைத்திலும் தள்ளாடப் பண்ணுகிறார்கள்.
15
அப்பொழுது எகிப்தின் தலையினாலோ, வாலினாலோ, ஓலையினாலோ, நாணலினாலோ செய்யக்கூடியது எதுவுமேயில்லை.
Settings