ஏசாயா 10:5-19
5
“எனது கோபத்தின் கோலாய் இருக்கிற அசீரியனுக்கு ஐயோ கேடு! அவனுடைய கையில் எனது கடுங்கோபத்தின் தண்டாயுதம் இருக்கிறது.
6
நான் அவனை இறைவனை மறுதலிக்கிற ஒரு நாட்டுக்கு விரோதமாக அனுப்பி, எனக்குக் கோபமூட்டும் மக்களைக் கொள்ளையிட்டு சூறையாடி, பறித்து, தெருவிலுள்ள சேற்றை மிதிப்பதுபோல் அவர்களை மிதித்துப் போடவும் நான் அவனுக்கு கட்டளை கொடுக்கிறேன்.
7
ஆனால் அசீரிய அரசன் எண்ணுவது இதுவல்ல; அவனுடைய மனதில் இருப்பதும் இதுவல்ல, பல நாடுகளை அழித்து அவர்களுக்கு ஒரு முடிவைக் கொண்டுவருவதே அவனுடைய நோக்கம்.
8
அவன் சொல்கிறதாவது, ‘எனது தளபதிகள் எல்லோருமே அரசர்கள் அல்லவா?
9
கல்னோ பட்டணம் கர்கேமிஷைப்போல் ஆகவில்லையா? ஆமாத் அர்பாத்தைப்போல் ஆகவில்லையா? சமாரியா தமஸ்குவைப்போல் ஆகவில்லையா?
10
எருசலேமிலும், சமாரியாவிலும் உள்ள உருவச்சிலைகளைவிட சிறந்த உருவச்சிலைகளின் அரசுகளை நான் கைப்பற்றினேன்.
11
சமாரியாவுக்கும் அதன் விக்கிரகங்களுக்கும் செய்ததுபோல, எருசலேமுக்கும், அதன் விக்கிரகங்களுக்கும் செய்யமாட்டேனோ?’ ”
12
யெகோவா சீயோன் மலைக்கும் எருசலேமுக்கும் விரோதமாக தனது செயல்கள் அனைத்தையும் செய்துமுடித்ததும், “நான் அசீரிய அரசனின் இருதய மேட்டிமைக்கும், அவனுடைய கண்களின் அகங்காரத்துக்கும் அவனைத் தண்டிப்பேன்” என்பார்.
13
ஏனெனில் அவன் சொல்கிறதாவது: “ ‘எனது கரத்தின் வல்லமையாலும், எனது ஞானத்தினாலும் அறிவினாலும் நான் இதைச் செய்தேன், நான் பல நாடுகளின் எல்லைகளை அகற்றினேன், அவர்களுடைய செல்வங்களைச் சூறையாடினேன், பெரும் வல்லவனைப்போல் அவர்களின் அரசர்களை அடக்கிக் கீழ்ப்படுத்தினேன்.
14
ஒருவன் பறவைகளின் கூட்டிற்குள் எட்டிக் கைவிடுவதுபோல், நாடுகளின் செல்வத்தை எடுப்பதற்கு என் கை நீட்டப்பட்டது. கைவிடப்பட்ட முட்டைகளை மனிதர் சேர்ப்பதுபோல், எல்லா நாடுகளையும் நான் ஒன்றாகச் சேர்த்தேன். ஒன்றாவது சிறகை அடிக்கவுமில்லை, கூச்சலிடுவதற்காக வாயைத் திறக்கவுமில்லை.’ ”
15
கோடரி தன்னைத் தூக்குபவனைவிட மேலானதோ? வாள் தன்னை உபயோகிக்கிறவனுக்கு மேலாகத் தற்பெருமை கொள்ளுமோ? அப்படியானால், வீசி அடிப்பதற்காக ஒருவன் ஒரு தடியை எடுக்க, அந்தத் தடியோ தன்னை எடுத்தவனையே தூக்கி சுழற்றுவதுபோல் இருக்குமே. மரத்தாலான தண்டாயுதம், தானாகவே எழுந்து நின்று, மரமல்லாத மனிதனைத் தூக்கி சுழற்றுவதுபோல் இருக்குமே.
16
ஆகையால் யெகோவா, சேனைகளின் யெகோவா அவனுடைய பலமுள்ள இராணுவவீரர்களுக்குள் உருக்கும் நோயை அனுப்புவார். அவனுடைய பகட்டான ஆடம்பரத்தின்கீழ் எரியும் சுவாலை போன்ற தீயை மூட்டுவார்.
17
இஸ்ரயேலின் ஒளியானவர், நெருப்பாகவும், அவர்களுடைய பரிசுத்தர் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பாகவும் வருவார். அவர் அவனுடைய முட்செடிகளையும், அவனுடைய நெருஞ்சில் செடிகளையும் ஒரே நாளில் எரித்துப்போடுவார்.
18
நோயுற்ற ஒருவன் நலிந்துபோவது போல, அவனுடைய காடுகளிலும் வளமுள்ள வயல்களிலும் உள்ள செழிப்பு முற்றிலும் அழிந்துவிடும்.
19
அவனுடைய காடுகளில் மீதமிருக்கும் மரங்களின் தொகை, ஒரு சிறுபிள்ளைகூட எண்ணக்கூடியதாய் குறைந்திருக்கும்.
Settings