Skip to content
எபிரெயர் 7:1-17

எபிரெயர் 7:1-17

1
இந்த மெல்கிசேதேக்கு, சாலேமின் அரசனும், மகா உன்னதமான இறைவனின் ஆசாரியனுமாயிருந்தான். ஆபிரகாம் அரசர்களைத் தோற்கடித்து திரும்பிவந்து கொண்டிருந்தபோது, இவன் ஆபிரகாமைச் சந்தித்து ஆசீர்வதித்தான்.
2
ஆபிரகாம் எல்லாவற்றிலும் பத்தில் ஒரு பங்கை மெல்கிசேதேக்குக்குக் கொடுத்தான். மெல்கிசேதேக்கினுடைய முதற்பெயரின் பொருள், “நீதியின் அரசன்” எனப்படுகிறது. அத்துடன், “சாலேமின் அரசன்” என்றால், “சமாதானத்தின் அரசன்” என்ற அர்த்தமும் இருக்கிறது.
3
தந்தையோ, தாயோ, வம்சவரலாறோ மெல்கிசேதேக்கிற்கு இல்லை. வாழ்நாட்களின் தொடக்கமோ, முடிவோ இல்லாத இவன், இறைவனுடைய மகனைப்போல், என்றென்றும் ஒரு ஆசாரியனாய் நிலைத்திருக்கிறான்.
4
மெல்கிசேதேக்கு எவ்வளவு பெரியவனாயிருந்தான் என்று யோசித்துப் பாருங்கள்: நம்முடைய முற்பிதாவாகிய ஆபிரகாம்கூட தான் போர்க்களத்தில் கைப்பற்றிய எல்லாவற்றிலும் பத்தில் ஒரு பங்கை இவனுக்குக் கொடுத்தானே.
5
லேவியின் தலைமுறையினர்களில் ஆசாரியர்களாகிறவர்கள், மக்களிடமிருந்து பத்தில் ஒரு பங்கைப் பெற்றுக்கொள்ளும்படி, மோசேயின் சட்டம் வலியுறுத்துகிறது. அவர்கள் ஆபிரகாமின் சந்ததிகளும், லேவியர்களின் சகோதரர்களாயிருந்தும், இப்படிக் கட்டளை கொடுக்கப்பட்டிருந்தது.
6
ஆனால், இந்த மெல்கிசேதேக்கோ லேவியின் சந்ததிகள் அல்ல. அப்படியிருந்தும், ஆபிரகாமிடமிருந்து பத்தில் ஒரு பங்கைப் பெற்றுக்கொண்டு, இறைவனிடமிருந்து வாக்குத்தத்தங்களைப் பெற்றிருந்த ஆபிரகாமை இவன் ஆசீர்வதித்தான்.
7
உயர்ந்த நிலையில் உள்ளவனே தாழ்ந்த நிலையில் உள்ளவனை ஆசீர்வதிக்க வேண்டும். அதில் சந்தேகமேயில்லை.
8
ஆசாரியர்களைப் பொறுத்தவரையில், இவர்கள் இறந்துபோகிறவர்களாக இருந்தும், பத்தில் ஒரு பங்கைப் பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால் மெல்கிசேதேக்கைப் பொறுத்தவரையிலோ, இவன் என்றும் வாழ்கிறவன் என அறிவிக்கப்பட்டு, பத்தில் ஒரு பங்கைப் பெற்றுக்கொண்டான்.
9
ஒரு வகையில் பத்தில் ஒரு பங்கைப் பெற்றுக்கொள்கிற லேவியும்கூட ஆபிரகாமின் மூலமாய், பத்தில் ஒரு பங்கை மெல்கிசேதேக்குக்கு கொடுத்தான் என்று சொல்லலாம்.
10
ஏனெனில் மெல்கிசேதேக்கு ஆபிரகாமைச் சந்தித்தபோது, லேவி தன்னுடைய முற்பிதாவான ஆபிரகாமின் உடலுக்குள் இருந்தார் என்று எடுத்துக்கொள்ளலாம்.
11
லேவியரின் ஆசாரிய முறையின் அடிப்படையிலேயே, மோசேயின் சட்டம் இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுக்கப்பட்டது. லேவிய ஆசாரியன் முறையின் மூலமாகவே பூரண நிலையை அடையக்கூடியதாக இருந்திருந்தால், வேறொரு ஆசாரியன் வரவேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது? ஆரோனுடைய முறையில் இல்லாது, மெல்கிசேதேக்கின் முறையின்படி, ஒரு ஆசாரியமுறை ஏன் ஏற்படுத்தப்பட்டது?
12
ஆசாரிய முறையே மாற்றப்படுகிறபோது, மோசேயின் சட்டத்திலும் மாற்றம் ஏற்படவேண்டியதாயிருக்கிறது.
13
இவையெல்லாம் கிறிஸ்துவைக்குறித்தே சொல்லப்படுகின்றன. அவரோ வேறு ஒரு கோத்திரத்தைச் சேர்ந்தவர், அந்த கோத்திரத்தைச் சேர்ந்த யாருமே பலிபீடத்தில் பணியாற்றவில்லை.
14
நம்முடைய கர்த்தர் யூதாவின் கோத்திரத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிந்ததே. மோசே ஆசாரியர்களைக் குறித்துப் பேசியபொழுது, இந்தக் கோத்திரத்தைக் குறித்து எதுவுமே சொல்லவில்லை.
15
மெல்கிசேதேக்குக்கு ஒப்பான வேறொரு ஆசாரியர் தோன்றியபடியால், இந்தக் காரியத்தில் இன்னும் அதிக தெளிவாகின்றது.
16
அப்படியே சந்ததியைப் பொறுத்தமட்டில், மனிதருடைய விதிமுறைகளுக்கு இணங்க ஆசாரியர் ஏற்படுத்தப்படவில்லை. ஆனால் முடிவில்லாத வாழ்வின் வல்லமையின்படியே கிறிஸ்து ஆசாரியனாய் ஏற்படுத்தப்பட்டார்.
17
ஏனெனில், “மெல்கிசேதேக்கின் முறையின்படி, நீர் என்றென்றைக்கும் ஆசாரியனாய் இருக்கிறீர்” என்று அவரைக்குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options