Skip to content
எபிரெயர் 7:1-10

எபிரெயர் 7:1-10

1
இந்த மெல்கிசேதேக்கு, சாலேமின் அரசனும், மகா உன்னதமான இறைவனின் ஆசாரியனுமாயிருந்தான். ஆபிரகாம் அரசர்களைத் தோற்கடித்து திரும்பிவந்து கொண்டிருந்தபோது, இவன் ஆபிரகாமைச் சந்தித்து ஆசீர்வதித்தான்.
2
ஆபிரகாம் எல்லாவற்றிலும் பத்தில் ஒரு பங்கை மெல்கிசேதேக்குக்குக் கொடுத்தான். மெல்கிசேதேக்கினுடைய முதற்பெயரின் பொருள், “நீதியின் அரசன்” எனப்படுகிறது. அத்துடன், “சாலேமின் அரசன்” என்றால், “சமாதானத்தின் அரசன்” என்ற அர்த்தமும் இருக்கிறது.
3
தந்தையோ, தாயோ, வம்சவரலாறோ மெல்கிசேதேக்கிற்கு இல்லை. வாழ்நாட்களின் தொடக்கமோ, முடிவோ இல்லாத இவன், இறைவனுடைய மகனைப்போல், என்றென்றும் ஒரு ஆசாரியனாய் நிலைத்திருக்கிறான்.
4
மெல்கிசேதேக்கு எவ்வளவு பெரியவனாயிருந்தான் என்று யோசித்துப் பாருங்கள்: நம்முடைய முற்பிதாவாகிய ஆபிரகாம்கூட தான் போர்க்களத்தில் கைப்பற்றிய எல்லாவற்றிலும் பத்தில் ஒரு பங்கை இவனுக்குக் கொடுத்தானே.
5
லேவியின் தலைமுறையினர்களில் ஆசாரியர்களாகிறவர்கள், மக்களிடமிருந்து பத்தில் ஒரு பங்கைப் பெற்றுக்கொள்ளும்படி, மோசேயின் சட்டம் வலியுறுத்துகிறது. அவர்கள் ஆபிரகாமின் சந்ததிகளும், லேவியர்களின் சகோதரர்களாயிருந்தும், இப்படிக் கட்டளை கொடுக்கப்பட்டிருந்தது.
6
ஆனால், இந்த மெல்கிசேதேக்கோ லேவியின் சந்ததிகள் அல்ல. அப்படியிருந்தும், ஆபிரகாமிடமிருந்து பத்தில் ஒரு பங்கைப் பெற்றுக்கொண்டு, இறைவனிடமிருந்து வாக்குத்தத்தங்களைப் பெற்றிருந்த ஆபிரகாமை இவன் ஆசீர்வதித்தான்.
7
உயர்ந்த நிலையில் உள்ளவனே தாழ்ந்த நிலையில் உள்ளவனை ஆசீர்வதிக்க வேண்டும். அதில் சந்தேகமேயில்லை.
8
ஆசாரியர்களைப் பொறுத்தவரையில், இவர்கள் இறந்துபோகிறவர்களாக இருந்தும், பத்தில் ஒரு பங்கைப் பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால் மெல்கிசேதேக்கைப் பொறுத்தவரையிலோ, இவன் என்றும் வாழ்கிறவன் என அறிவிக்கப்பட்டு, பத்தில் ஒரு பங்கைப் பெற்றுக்கொண்டான்.
9
ஒரு வகையில் பத்தில் ஒரு பங்கைப் பெற்றுக்கொள்கிற லேவியும்கூட ஆபிரகாமின் மூலமாய், பத்தில் ஒரு பங்கை மெல்கிசேதேக்குக்கு கொடுத்தான் என்று சொல்லலாம்.
10
ஏனெனில் மெல்கிசேதேக்கு ஆபிரகாமைச் சந்தித்தபோது, லேவி தன்னுடைய முற்பிதாவான ஆபிரகாமின் உடலுக்குள் இருந்தார் என்று எடுத்துக்கொள்ளலாம்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options