ஆதியாகமம் 38:12-23
12
அநேக நாட்களுக்குப்பின் சூவாவின் மகளான யூதாவின் மனைவி இறந்துபோனாள். யூதா அவளுக்காகத் துக்கம் அனுசரித்து முடித்தபின், திம்னாவில் தன்னுடைய செம்மறியாடுகளுக்கு மயிர் கத்தரிக்கும் மனிதரிடம் போனான், அதுல்லாமியனாகிய அவனுடைய சிநேகிதன் ஈராவும் அவனுடன் போனான்.
13
“தன் செம்மறியாடுகளுக்கு மயிர் கத்தரிப்பதற்காக உன் மாமனார் திம்னாவுக்குப் போகிறார்” என தாமாருக்கு அறிவிக்கப்பட்டது.
14
சேலா பெரியவனாகியும், தான் அவனுக்கு மனைவியாகக் கொடுக்கப்படவில்லை என்பதை அவள் அறிந்தாள். எனவே அவள் விதவைக்குரிய தன் உடைகளைக் களைந்து, தன்னை மறைப்பதற்காக முகத்திரையினால் தன்னை மூடிக்கொண்டு, திம்னாவுக்குப் போகிற வழியில் உள்ள ஏனாயீம் ஊர்வாசலிலே உட்கார்ந்திருந்தாள்.
15
யூதா அவளைக் கண்டபோது, அவள் ஒரு வேசி என எண்ணினான்; ஏனெனில் அவள் தன் முகத்தை மூடியிருந்தாள்.
16
அவளைத் தன் மருமகள் என அறியாத யூதா வீதியோரமாய் இருந்த அவளிடம் போய், “நீ என்னுடன் உறவுகொள்ள வா” என்றான். அதற்கு அவள், “நான் உம்முடன் வந்தால் நீர் எனக்கு என்ன தருவீர்?” என்று கேட்டாள்.
17
அதற்கு அவன், “என் மந்தையிலிருந்து ஒரு வெள்ளாட்டுக்குட்டியை அனுப்புவேன்” என்றான். அவளோ, “அதை அனுப்பும்வரை ஏதாவதொரு பொருளை அடைமானமாகத் தருவீரா?” என்று கேட்டாள்.
18
அதற்கு யூதா, “உனக்கு அடைமானமாக நான் என்ன தரவேண்டும்?” என்று கேட்டான். அதற்குத் தாமார், “உம்முடைய முத்திரை மோதிரத்தையும், அதன் கயிற்றையும், உமது கையிலிருக்கும் கோலையும் தாரும்” என்றாள். அவன் அவற்றைக் கொடுத்து, அவளுடன் உறவுகொண்டான்; அவனால் அவள் கர்ப்பவதியானாள்.
19
அவள் அவ்விடத்தை விட்டுப்போய், தன் முகத்திரையைக் கழற்றிவிட்டு, மறுபடியும் தனது விதவைக்குரிய உடைகளை உடுத்திக்கொண்டாள்.
20
அதேவேளை யூதா அதுல்லாம் ஊரானாகிய தன் சிநேகிதனிடம் ஒரு வெள்ளாட்டுக்குட்டியைக் கொடுத்து, தான் அப்பெண்ணிடம் அடைமானமாகக் கொடுத்திருந்த பொருட்களை வாங்கிவரும்படி அனுப்பினான்; ஆனால் அவனால் அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
21
அவன் அங்குள்ள மனிதரிடம், “ஏனாயீம் வழியருகே இருந்த கோயில் வேசி எங்கே?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “அப்படியொரு கோயில் வேசி இங்கே இல்லை” என்றார்கள்.
22
ஆகவே, அவன் யூதாவிடம், “திரும்பிப்போய், நான் அவளைக் காணவில்லை; அதுவுமல்லாமல் அங்குள்ள மனிதரும், ‘அப்படியொரு கோயில் வேசி அங்கிருக்கவில்லை’ என்று சொன்னார்கள்” என்றான்.
23
யூதா அவனிடம், “அவளிடம் இருப்பதை அவளே வைத்துக்கொள்ளட்டும்; திரும்பிப் போனால் நாம் கேலிப் பொருளாவோம். எப்படியும் நான் இந்த ஆட்டுக்குட்டியை அவளிடம் அனுப்பினேன், ஆனால் நீயோ அவளைக் காண முடியவில்லை” என்றான்.
Settings