ஆதியாகமம் 30:1-13
1
யாக்கோபுக்கு ராகேல் பிள்ளைகள் எதையும் பெறாததினால், ராகேல் தன் சகோதரியின்மேல் பொறாமை கொண்டாள். எனவே அவள் யாக்கோபிடம், “நீர் எனக்கு பிள்ளைகளைக் கொடும்; இல்லாவிட்டால் நான் சாகப்போகிறேன்” என்றாள்.
2
அப்பொழுது யாக்கோபு ராகேலின்மேல் கோபங்கொண்டு, “நான் என்ன இறைவனா? அவர் அல்லவா உன்னைப் பிள்ளைப்பேறு அற்றவளாக்கி இருக்கிறார்!” என்றான்.
3
அதற்கு அவள், “இதோ என் பணிப்பெண் பில்காள் இருக்கிறாள், அவளுடன் உறவுகொள்ளும். அவள் எனக்காகப் பிள்ளைகளைப் பெறட்டும், அவள் மூலம் நானும் ஒரு குடும்பத்தைக் கட்டலாமே” என்றாள்.
4
அப்படியே அவள் தன் பணிப்பெண் பில்காளை யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்தாள். யாக்கோபு அவளுடன் உறவுகொண்டான்.
5
பில்காள் கருத்தரித்து, அவனுக்கு ஒரு மகனைப் பெற்றாள்.
6
அப்பொழுது ராகேல், “இறைவன் எனக்கு நியாயம் செய்து, என் வேண்டுதலைக் கேட்டு, எனக்கொரு மகனைத் தந்தார்” என்றாள். அதனால் அவனுக்கு, தாண் என்று பெயரிட்டாள்.
7
மறுபடியும் ராகேலின் பணிப்பெண் பில்காள் கருத்தரித்து, யாக்கோபுக்கு இரண்டாவது மகனைப் பெற்றாள்.
8
அப்பொழுது ராகேல், “என் சகோதரியுடன் எனக்கிருந்த பெரிய போராட்டத்தில் நான் வெற்றியடைந்தேன்” என்று சொல்லி, அவனுக்கு நப்தலி எனப் பெயரிட்டாள்.
9
லேயாள் தனக்குப் பிள்ளைப்பேறு நின்றுபோனதைக் கண்டு, தன் பணிப்பெண் சில்பாளை யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்தாள்.
10
லேயாளின் பணிப்பெண் சில்பாள் யாக்கோபுக்கு ஒரு மகனைப் பெற்றாள்.
11
அப்பொழுது லேயாள், “நான் எவ்வளவு அதிர்ஷ்டசாலி” என்று சொல்லி அவனுக்கு காத் என்று பெயரிட்டாள்.
12
லேயாளின் பணிப்பெண் சில்பாள் யாக்கோபுக்கு இரண்டாவது மகனையும் பெற்றாள்.
13
அப்பொழுது லேயாள், “நான் எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கிறேன்! பெண்கள் எல்லாரும் என்னை, மகிழ்ச்சி உள்ளவள் என அழைப்பார்கள்” என்றாள். அதனால் அவனுக்கு ஆசேர் என்று பெயரிட்டாள்.
Settings