எஸ்றா 7:11-20
11
இஸ்ரயேலுக்கான யெகோவாவின் கட்டளைகளையும், விதிமுறைகளையும் குறித்த விஷயங்களைக் கற்றறிந்தவனும், ஆசாரியனும், வேதபாரகனுமாகிய எஸ்றாவுக்கு அர்தசஷ்டா அரசன் கொடுத்திருந்த கடிதத்தின் பிரதி இதுவே:
12
பரலோகத்தின் இறைவனுடைய சட்ட ஆசிரியனான எஸ்றா என்னும் ஆசாரியனுக்கு, அரசர்களுக்கு அரசனான அர்தசஷ்டா வாழ்த்துதல் கூறி எழுதுகிறதாவது,
13
எனது ஆட்சிக்குட்பட்டிருக்கும் இஸ்ரயேல் மக்களுடன், ஆசாரியர்கள், லேவியர்கள் உட்பட யார் எருசலேமுக்கு உன்னுடன் போக விரும்புகிறார்களோ அவர்கள் உன்னுடன் போகலாம் எனக் கட்டளையிடுகிறேன்.
14
உன் கையில் இருக்கிற உன் இறைவனின் சட்டத்தின்படி யூதாவையும், எருசலேமையும் விசாரிப்பதற்காக நீ அனுப்பப்படுகிறாய். நீ அரசனாலும் அவருடைய ஏழு ஆலோசகர்களாலும் அனுப்பப்படுகிறாய்.
15
மேலும், நீ அரசனும் அவனுடைய ஆலோசகர்களும் எருசலேமில் வாழ்கின்ற இஸ்ரயேலின் இறைவனுக்குத் தாராளமாய்க் கொடுத்த வெள்ளியையும், தங்கத்தையும் உன்னுடன் எடுத்துச்செல்ல வேண்டும்.
16
பாபிலோன் நாட்டிலிருந்து உனக்குக் கிடைக்கக்கூடிய எல்லா வெள்ளியையும், தங்கத்தையும் கொண்டுபோ. அத்துடன் எருசலேமில் இருக்கிற தங்கள் இறைவனுக்கென மக்களும், ஆசாரியரும் கொடுத்திருக்கிற சுயவிருப்பக் காணிக்கை யாவையும் எடுத்துச்செல்ல வேண்டும்.
17
இப்பணத்தைக் கொண்டு காளைகளையும், ஆட்டுக்கடாக்களையும், ஆட்டுக்குட்டிகளையும் அவற்றுடன் அவற்றுக்கான தானிய காணிக்கைகளையும், பானகாணிக்கைகளையும் வாங்கக் கவனமாயிரு. அவற்றை எருசலேமில் இருக்கிற உன் இறைவனின் ஆலயத்தின் பலிபீடத்தில் பலியிடு.
18
மிகுதியான வெள்ளியையும், தங்கத்தையும் கொண்டு இறைவனின் திட்டப்படி நீயும் உன் சகோதர யூதர்களும் நலமாய்த் தோன்றும் எதையும் செய்யலாம்.
19
உனது இறைவனுடைய ஆலயத்தின் வழிபாட்டுக்காக உன்னிடம் ஒப்புக்கொடுக்கப்பட்ட எல்லாப் பொருட்களையும் எருசலேமின் இறைவனிடத்தில் ஒப்புவி.
20
அத்துடன் உன்னுடைய இறைவனின் ஆலயத்தில் வேறு ஏதாவது கொடுக்கவேண்டிய தேவை ஏற்பட்டால், அரச திரவிய களஞ்சியத்திலிருந்து அது உனக்குக் கொடுக்கப்படும்.
Settings