Skip to content
எசேக்கியேல் 44:1-8

எசேக்கியேல் 44:1-8

1
மீண்டும் அந்த மனிதன் என்னை ஆலயத்தின் கிழக்கு நோக்கியிருந்த வெளிவாசலுக்குக் கொண்டுவந்தான். அது பூட்டப்பட்டிருந்தது.
2
யெகோவா என்னிடம், “இந்த வாசல் திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருக்கும். இது திறக்கப்படலாகாது. இதின் வழியாக யாரும் உட்செல்லவும் கூடாது. இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா இதின் வழியாகவே வந்தார். ஆகவே இது பூட்டப்பட்டே இருக்கும்.
3
இந்த நுழைவு வாசலின் உட்புறத்தில் யெகோவாவுக்குமுன் சாப்பிடுவதற்கு இளவரசன் மட்டுமே உட்காரலாம். அவன் புகுமுக மண்டபத்தின் நுழைவாசல் உட்சென்று அதே வழியாக வெளியேறவேண்டும் என்றார்.”
4
பின்பு அம்மனிதன் என்னை ஆலயத்துக்கு முன்னாலிருக்கும் வடக்கு வாசல்வழியால் அழைத்து வந்தான். நான் பார்த்தேன் அப்பொழுது யெகோவாவினுடைய மகிமை யெகோவாவினுடைய ஆலயத்தை நிரப்புவதைக் கண்டேன், நான் உடனே முகங்குப்புற விழுந்தேன்.
5
யெகோவா என்னிடம், “மனுபுத்திரனே, கவனமாகப் பார், கவனித்துக் கேள், யெகோவாவினுடைய ஆலயத்தைப் பற்றிய எல்லா ஒழுங்குவிதிகளையும் பற்றி, நான் கூறும் ஒவ்வொன்றையும் கருத்தாய் கவனித்துக்கொள். ஆலயத்தின் புகுமுக வாசலையும் பரிசுத்த இடத்தின் வெளியேறும் எல்லா வாசல்களையும் குறித்துக் கவனம் செலுத்து.
6
கலகக்காரராகிய இஸ்ரயேல் குடும்பத்தாரிடம் நீ சொல்லவேண்டியதாவது, ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. இஸ்ரயேல் குடும்பத்தாரே, வெறுக்கத்தக்க உங்கள் செயல்கள் போதும்.
7
உங்கள் வெறுக்கத்தக்க எல்லா பழக்கவழக்கங்களுடனும் அயல் நாட்டினரையும் என் பரிசுத்த ஆலயத்திற்குள் கொண்டுவந்தீர்கள். அவர்களோ இருதயத்திலும் மாம்சத்திலும் விருத்தசேதனம் இல்லாதவர்கள். என் ஆலய தூய்மையைக் கெடுத்தீர்கள். ஆகாரத்தையும் கொழுப்பையும் இரத்தத்ததையும் எனக்கு காணிக்கையாகச் செலுத்தியபோதிலும் என் உடன்படிக்கையை மீறினீர்கள்.
8
என் பரிசுத்த காரியங்களில் உங்களுடைய கடமைகளைச் செய்வதற்குப் பதிலாக, என் பரிசுத்த ஆலயத்தையே மற்றவர்களின் பொறுப்பில் விட்டீர்கள்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options