எசேக்கியேல் 36:1-12
1
“மனுபுத்திரனே, நீ இஸ்ரயேல் மலைகளுக்கு இறைவாக்கு உரைத்துச் சொல்லவேண்டியதாவது, ‘இஸ்ரயேலின் மலைகளே! யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள்.
2
ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. “ஆகா, முற்காலத்து உயர்ந்த மலைகள் எங்கள் உடைமைகளாயிற்றே என்று பகைவர்கள் உங்களைப் பார்த்துச் சொன்னார்களல்லவோ?” ’
3
ஆகவே மனுபுத்திரனே நீ இஸ்ரயேல் மலைகளுக்கு இறைவாக்கு உரைத்துச் சொல்லவேண்டியதாவது, ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. உங்கள் பகைவர்கள் உங்களைக் கொள்ளையடித்து, ஒவ்வொரு திசைகளிலுமிருந்து உங்களைப் பின்தொடர்ந்து துரத்தியபடியால், நீங்கள் மற்ற நாடுகளின் உடைமையாகி, மக்களின் தீங்கான பேச்சுக்கும் அவதூறுக்கும் ஆளானீர்கள்.
4
ஆகையால் இஸ்ரயேலின் மலைகளே, ஆண்டவராகிய யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள். மலைகள், குன்றுகள், கணவாய்கள், பள்ளத்தாக்குகள், இடிபாடுகள் ஆகியவற்றிற்கும் உங்களைச் சுற்றிலும் இருக்கிற நாடுகளால் கொள்ளையடிக்கப்பட்டு, கேலிக்கிடமாக்கப்பட்ட, பட்டணங்களுக்கும் ஆண்டவராகிய யெகோவா கூறுகிறார்.
5
ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: நான் என் பற்றியெரியும் வைராக்கியத்தில் மீதியான நாடுகளுக்கும், முழு ஏதோமுக்கும் விரோதமாகப் பேசினேன். ஏனெனில், என் நாட்டிலுள்ள மேய்ச்சல் நிலங்களைக் கொள்ளையிடுவதற்காக அவர்கள் மகிழ்வோடும், கர்வத்தோடும் என் நாட்டைத் தங்கள் உரிமையாக்கிக்கொண்டார்கள்.’
6
ஆகவே நீ இஸ்ரயேல் நாட்டைக்குறித்து இறைவாக்குரைத்து, மலைகளுக்கும், குன்றுகளுக்கும், ஆறுகளுக்கும், பள்ளத்தாக்குகளுக்கும் சொல்லவேண்டியதாவது, ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: நீங்கள் பிறநாட்டினரின் அவமானத்தைச் சுமந்தபடியினால், நான் எனது வைராக்கியத்தினாலும், கடுங்கோபத்தினாலும் பேசுகிறேன்.
7
ஆகவே, ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: உண்மையாகவே உங்களைச் சுற்றிலும் இருக்கும் பல நாடுகளும் தங்களுடைய அவமானத்தை நிச்சயமாய் சுமப்பார்கள் என நான் என் உயர்த்திய கரத்தால் ஆணையிடுகிறேன்.
8
“ ‘ஆனால், இஸ்ரயேலின் மலைகளே, நீங்களோ என் மக்களாகிய இஸ்ரயேலருக்குக் கிளைகளைப் பரப்பி, பழங்களையும் விளைவிப்பீர்கள். ஏனெனில் அவர்கள் சீக்கிரமாக வீடுதிரும்புவார்கள்.
9
பாருங்கள்! நான் உங்களில் அக்கறைகொண்டுள்ளேன். நான் உங்களுக்கு உதவிசெய்ய வருவேன். உங்கள் நிலங்களும் உழப்பட்டு விதைக்கப்படும்.
10
மேலும் நான் உங்களிலுள்ள மக்களையும், முழு இஸ்ரயேல் குடும்பத்தாரையும் ஏராளமாகப் பெருகப்பண்ணுவேன். நகரங்கள் குடியிருப்பாகும். இடிபாடுகள் மீண்டும் கட்டப்படும்.
11
உங்களிலுள்ள மனிதர்களையும், மிருகங்களையும் எண்ணிக்கையில் பெருகப்பண்ணுவேன். அவர்கள் விருத்தியுள்ளவர்களாய்ப் பெருகுவார்கள். மிருகங்களும் பெருகும். முன்பு இருந்ததுபோலவே மக்களை உங்களில் குடியிருக்கப்பண்ணி, உங்களை முந்தின சிறப்பைவிட செழிப்புள்ளவர்களாக்குவேன். அப்பொழுது நானே யெகோவா என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
12
மக்களை, என் மக்களாகிய இஸ்ரயேலரை உங்கள் மேலாக நடக்கும்படி செய்வேன். அவர்கள் உங்களை உரிமையாக்கிக்கொள்வார்கள். நீங்கள் அவர்களின் உரிமைச் சொத்தாவீர்கள். இனியொருபோதும் நீங்கள் அவர்களைப் பிள்ளையற்றவர்களாக்க மாட்டீர்கள்.
Settings