எசேக்கியேல் 36:1-7
1
“மனுபுத்திரனே, நீ இஸ்ரயேல் மலைகளுக்கு இறைவாக்கு உரைத்துச் சொல்லவேண்டியதாவது, ‘இஸ்ரயேலின் மலைகளே! யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள்.
2
ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. “ஆகா, முற்காலத்து உயர்ந்த மலைகள் எங்கள் உடைமைகளாயிற்றே என்று பகைவர்கள் உங்களைப் பார்த்துச் சொன்னார்களல்லவோ?” ’
3
ஆகவே மனுபுத்திரனே நீ இஸ்ரயேல் மலைகளுக்கு இறைவாக்கு உரைத்துச் சொல்லவேண்டியதாவது, ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. உங்கள் பகைவர்கள் உங்களைக் கொள்ளையடித்து, ஒவ்வொரு திசைகளிலுமிருந்து உங்களைப் பின்தொடர்ந்து துரத்தியபடியால், நீங்கள் மற்ற நாடுகளின் உடைமையாகி, மக்களின் தீங்கான பேச்சுக்கும் அவதூறுக்கும் ஆளானீர்கள்.
4
ஆகையால் இஸ்ரயேலின் மலைகளே, ஆண்டவராகிய யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள். மலைகள், குன்றுகள், கணவாய்கள், பள்ளத்தாக்குகள், இடிபாடுகள் ஆகியவற்றிற்கும் உங்களைச் சுற்றிலும் இருக்கிற நாடுகளால் கொள்ளையடிக்கப்பட்டு, கேலிக்கிடமாக்கப்பட்ட, பட்டணங்களுக்கும் ஆண்டவராகிய யெகோவா கூறுகிறார்.
5
ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: நான் என் பற்றியெரியும் வைராக்கியத்தில் மீதியான நாடுகளுக்கும், முழு ஏதோமுக்கும் விரோதமாகப் பேசினேன். ஏனெனில், என் நாட்டிலுள்ள மேய்ச்சல் நிலங்களைக் கொள்ளையிடுவதற்காக அவர்கள் மகிழ்வோடும், கர்வத்தோடும் என் நாட்டைத் தங்கள் உரிமையாக்கிக்கொண்டார்கள்.’
6
ஆகவே நீ இஸ்ரயேல் நாட்டைக்குறித்து இறைவாக்குரைத்து, மலைகளுக்கும், குன்றுகளுக்கும், ஆறுகளுக்கும், பள்ளத்தாக்குகளுக்கும் சொல்லவேண்டியதாவது, ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: நீங்கள் பிறநாட்டினரின் அவமானத்தைச் சுமந்தபடியினால், நான் எனது வைராக்கியத்தினாலும், கடுங்கோபத்தினாலும் பேசுகிறேன்.
7
ஆகவே, ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: உண்மையாகவே உங்களைச் சுற்றிலும் இருக்கும் பல நாடுகளும் தங்களுடைய அவமானத்தை நிச்சயமாய் சுமப்பார்கள் என நான் என் உயர்த்திய கரத்தால் ஆணையிடுகிறேன்.
Settings