Skip to content
எசேக்கியேல் 23:22-35

எசேக்கியேல் 23:22-35

22
“ஆகையால் ஒகோலிபாளே, ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. நீ வெறுப்பினால் விட்டுத் திரும்பிய உன் காதலர்களை நான் உனக்கு விரோதமாய் எழுப்புவேன். எல்லாப் பக்கங்களிலிருந்தும் அவர்களை உனக்கெதிராய்க் கொண்டுவருவேன்.
23
பாபிலோனியரையும், எல்லாக் கல்தேயரையும், பேகோட், ஷோவா, கோவா மனிதரையும், அசீரியர் அனைவரையும், திடகாத்திரமான வாலிபரையும் கொண்டுவருவேன். அவர்கள் அனைவருமே ஆளுநர்களும், அதிகாரிகளும், தேர் வீரர்களும், உயர்பதவியிலுள்ள மனிதர்களும், குதிரைகளில் ஏறிச் செல்லுகிறவர்களுமாய் இருக்கிறார்கள்.
24
அவர்கள் படைக்கலங்களோடும், தேர்களோடும், வண்டிகளோடும், ஏராளமான மக்களோடும் உனக்கு விரோதமாய் வருவார்கள். அவர்கள் பெரிதும் சிறிதுமான கேடயங்களோடும், தலைக்கவசங்களோடும், எல்லாத் திசைகளிலும் உனக்கு விரோதமாய் எதிர்த்து நிற்பார்கள். நீ தண்டிக்கப்படுவதற்காக நான் உன்னை அவர்களிடம் ஒப்படைப்பேன். அவர்கள் தங்களுடைய விதிமுறைப்படி உனக்குத் தண்டனை வழங்குவார்கள்.
25
நான் என் எரிச்சலின் கோபத்தை உனக்கு விரோதமாய்த் திருப்புவேன். அவர்கள் உன்னை ஆவேசத்துடன் நடத்துவார்கள். உன் மூக்கையும் காதுகளையும் அறுத்துவிடுவார்கள். உன்னில் எஞ்சியிருப்போர் வாளினால் மடிவார்கள். அவர்கள் உன் மகன்களையும் மகள்களையும் கைதிகளாகக் கொண்டுபோவார்கள். இன்னும் உன்னில் எஞ்சியிருப்போர் நெருப்பினால் சுட்டெரிக்கப்படுவார்கள்.
26
அவர்கள் உன் ஆடைகளை கழற்றி, உனது சிறப்பான நகைகளையும் பறித்துக்கொள்வார்கள்.
27
இவ்விதமாய் உன் இழிவான செயல்களுக்கும், எகிப்தில் நீ ஆரம்பித்த விபசாரத்திற்கும் நான் முடிவைக் கொண்டுவருவேன். இனிமேல் நீ எகிப்தை நினைக்கவோ, இக்காரியங்களை ஆவலோடு விரும்பவோ மாட்டாய்.
28
“ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. நீ பகைக்கிறவர்களின் கையிலும், உன்னுடைய மனம் விட்டுப் பிரிந்தவர்களின் கையிலும் உன்னை நான் ஒப்புக்கொடுக்கப்போகிறேன்.
29
அவர்கள் உன்னை வெறுப்புடன் நடத்தி, நீ முயற்சித்துத் தேடிய அனைத்தையும் எடுத்துக்கொள்வார்கள். அவர்கள் உன்னை நிர்வாணமும், வெறுமையுமாக்கி விடுவார்கள். உன் வேசித்தனத்தின் வெட்கம் வெளிக்காட்டப்படும். உன் இழிவான நடத்தையும் உன் கட்டுப்பாடற்ற தன்மையுமே இதை உனக்கு வருவித்தன.
30
ஏனெனில், நீ பல நாடுகளையும் மோகித்து, அவர்களுடைய சிலைகளினால் உன்னை கறைப்படுத்திக்கொண்டாய்.
31
நீயும் உன் சகோதரியின் வழியிலேயே போயிருக்கிறாய். ஆதலால், நான் அவளது தண்டனையின் பாத்திரத்தை உனது கையில் வைப்பேன்.
32
“ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: “நீ உன் சகோதரியின் பாத்திரத்திலே குடிப்பாய், அது அகலமும், ஆழமுமானது. அது அதிகமாய்க் கொள்கிற பாத்திரமானதால் அது ஏளனத்தையும் நகைப்பையும் கொண்டுவரும்.
33
நீ கவலை மிகுதியினால் மதுபோதையினால் நிரப்பப்பட்டவனைப் போலாவாய். அது உன் சகோதரியாகிய சமாரியாவிற்கு ஏற்பட்ட அழிவும் பாழும் நிறைந்த பாத்திரம் போலிருக்கும்.
34
நீ அதைக் குடித்து வெறுமையாக்குவாய். அதை நீ துண்டுகளாக்கி உன் மார்பகங்களையே கிழித்துக் கொள்ளுவாய். நானே இதைச் சொன்னேன், என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
35
“ஆகையால் ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: நீ என்னை மறந்து, என்னைப் புறக்கணித்துவிட்டபடியால் உன் இழிவான செயல்களினாலும், வேசித்தனத்தினாலும் உன் பலனை நீ அனுபவிக்கவேண்டும்.”
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options