Kalo te përmbajtja
எசேக்கியேல் 20:1-27

எசேக்கியேல் 20:1-27

1
அரசன் யோயாக்கீன் சிறைப்பிடிக்கப்பட்ட ஏழாம் வருடத்தின் ஐந்தாம் மாதம், பத்தாம் தேதியிலே இஸ்ரயேலின் முதியோர் சிலர் யெகோவாவினிடத்தில் விசாரித்து அறியும்படி என்னிடம் வந்து, என் முன்னால் உட்கார்ந்தார்கள்.
2
அப்பொழுது, யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது:
3
“மனுபுத்திரனே, இஸ்ரயேலின் முதியோரிடம் நீ பேசி அவர்களுக்குச் சொல்லவேண்டியதாவது: ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே, நீங்கள் என்னிடம் ஆலோசனை கேட்க வந்தீர்களோ? நான் வாழ்வது நிச்சயம்போலவே, நீங்கள் என்னிடம் ஆலோசனை கேட்க நான் இடமளிக்கமாட்டேன் என்பதும் நிச்சயம்’ என்று ஆண்டவராகிய யெகோவா கூறுகிறார்.
4
“நீ அவர்களை நியாயந்தீர்பாயோ? மனுபுத்திரனே! நீ அவர்களை நியாயந்தீர்பாயோ? அப்படியானால் நீ அவர்கள் தந்தையருடைய அருவருப்பான பழக்கங்களை அவர்களுக்கு எடுத்துக்காட்டி
5
அவர்களிடம் சொல்லவேண்டியதாவது; ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே; நான் இஸ்ரயேலைத் தெரிந்தெடுத்த நாளிலே, நான் என் உயர்த்திய கையுடன் யாக்கோபின் சந்ததிகளுக்கு ஆணையிட்டு, எகிப்திலே என்னை அவர்களுக்கு வெளிப்படுத்தினேன். நான் என் உயர்த்திய கையுடன், “நானே உங்கள் இறைவனாகிய யெகோவா” என்று சொன்னேன்.
6
அந்த நாளிலே நான் அவர்களை, எகிப்திலிருந்து அவர்களுக்கென நான் தெரிந்துகொண்ட நாட்டிற்கு கொண்டுவருவேன் என்று ஆணையிட்டேன். அது நாடுகளிலெல்லாம் அழகானதும், பாலும் தேனும் வழிந்தோடுகிறதுமான நாடு.
7
அவர்களிடம், “நீங்கள் ஒவ்வொருவரும் உங்களைக் கவர்ந்த இழிவான உருவச்சிலைகளை விலக்கிவிடுங்கள். எகிப்தின் விக்கிரகங்களால் உங்களை கறைப்படுத்தாதிருங்கள். உங்கள் ஆண்டவராகிய யெகோவா நானே” என்றும் கூறினேன்.
8
“ ‘ஆனால், அவர்களோ எனக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி,’ எனக்குச் செவிகொடுக்க மறுத்தார்கள். தங்களைக் கவர்ந்த இழிவான உருவச்சிலைகளை விலக்கவுமில்லை. எகிப்தின் விக்கிரகங்களை கைவிடவுமில்லை. ஆதலால் நான் என் கோபத்தை அவர்கள்மேல் ஊற்றி, அவர்கள்மீது எனக்குள்ள கோபத்தை எகிப்தில் தீர்த்துக்கொள்வேன் என்று சொன்னேன்.
9
ஆனாலும் இஸ்ரயேல் சேர்ந்து வாழ்ந்த பிறநாடுகள், அவர்களுடைய இறைவனால் தாம் வாக்குக் கொடுத்தபடி தமது மக்களை மீட்டுக்கொள்ள முடியவில்லையே என்று நினைப்பார்கள். அப்படி அவர்கள் பார்வையில் என் பெயர் தூய்மைக்கேடாகாதபடியே நான் என் கரத்தை அவர்கள்மேல் நீட்டாமல் இருக்கிறேன்.
10
ஆகவே நான் அவர்களை எகிப்திலிருந்து வழிநடத்தி அங்கிருந்து பாலைவனத்திற்குக் கொண்டுவந்தேன்.
11
நான் என் விதிமுறைகளை அவர்களுக்குக் கொடுத்து, என் சட்டங்களை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன். ஏனெனில் அவைகளுக்குக் கீழப்படிகிறவன் அவைகளால் வாழ்வான்.
12
மேலும் எங்களுக்கு இடையில் ஒரு அடையாளமாக இருப்பதற்கு எனது ஓய்வுநாட்களையும் அவர்களுக்குக் கொடுத்தேன். இவ்விதம் தங்களைப் பரிசுத்தமாக்கிய யெகோவா நானே என்பதையும் அவர்கள் அறிந்துகொள்வார்கள் என்று எண்ணினேன்.
13
“ ‘ஆனாலும் இஸ்ரயேலர் பாலைவனத்திலே எனக்கு விரோதமாகக் கலகம் பண்ணினார்கள். எனது விதிமுறைகளுக்குக் கீழ்ப்படிகிற மனிதன் அவைகளால் வாழ்வான் என்றிருந்தபோதிலும், அவர்கள் அவைகளைப் பின்பற்றாமல், என் சட்டங்களை புறக்கணித்தார்கள். அத்துடன் அவர்கள் என் ஓய்வுநாட்களின் தூய்மையை முழுவதும் கெடுத்தார்கள். எனவே நான் என் கோபத்தை அவர்கள்மேல் ஊற்றி, பாலைவனத்தில் அவர்களை தண்டிப்பேன் என்றேன்.
14
ஆனாலும் இஸ்ரயேல் சேர்ந்து வாழ்ந்த நாடுகள், அவர்களுடைய இறைவனால் தாம் வாக்குக் கொடுத்தபடி, தமது மக்களை மீட்டுக்கொள்ள முடியவில்லையே என்று நினைப்பார்கள். அப்படி அவர்கள் பார்வையில் என் பெயர் தூய்மைக்கேடாகாதபடியே நான் என் கரத்தை அவர்கள்மேல் நீட்டாமல் இருக்கிறேன்.
15
அத்துடன் அவர்களுக்கு நான் கொடுத்திருந்த பாலும் தேனும் வழிந்தோடுகிறதும், எல்லா நாடுகளிலும் மிக அழகு வாய்ந்ததுமான அந்த நாட்டிற்கு அவர்களைக் கொண்டுவரமாட்டேன் என பாலைவனத்தில் என் உயர்த்திய கையினால் ஆணையிட்டேன்.
16
ஏனெனில் அவர்கள் என் சட்டங்களை புறக்கணித்தார்கள். அவர்கள் என் விதிமுறைகளைப் பின்பற்றவில்லை. என் ஓய்வுநாட்களைத் தூய்மைக்கேடாக்கினார்கள். அவர்களின் இருதயங்களோ விக்கிரகங்களையே சார்ந்திருந்தன.
17
அப்படியிருந்தும் நான் அவர்களை தயவுடன் கண்ணோக்கினேன். நான் அவர்களை அழிக்கவுமில்லை, பாலைவனத்திலே அவர்களுக்கு முடிவுண்டாக்கவுமில்லை.
18
பாலைவனத்தில் நான் அவர்களின் பிள்ளைகளிடம், நீங்கள் உங்கள் முற்பிதாக்களின் விதிமுறைகளைப் பின்பற்றவோ, அவர்களுடைய சட்டங்களைக் கடைப்பிடிக்கவோ, “அவர்களுடைய விக்கிரகங்களால் உங்களைக் கறைப்படுத்திக்கொள்ளவோ வேண்டாம்.
19
உங்கள் இறைவனாகிய யெகோவா நானே; என் விதிமுறைகளைப் பின்பற்றி என் சட்டங்களைக் கைக்கொள்ளக் கவனமாயிருங்கள்.
20
எனது ஓய்வுநாட்கள் எனக்கும் உங்களுக்கும் நடுவே ஒரு அடையாளமாயிருக்கும்படி, அவைகளைப் பரிசுத்தமாய்க் கடைப்பிடியுங்கள். அப்பொழுது உங்கள் இறைவனாகிய யெகோவா நானே என்று நீங்கள் அறிந்துகொள்வீர்கள்” என்றேன்.
21
“ ‘ஆயினும் அவர்களுடைய பிள்ளைகளும் எனக்கு விரோதமாய்க் கலகம் செய்தார்கள், “அவைகளுக்குக் கீழ்ப்படிகிற மனிதன் அவைகளால் வாழ்வான்; என்றிருந்தபோதிலும் அவர்கள் என் நியமங்களைக் கைக்கொள்ளவுமில்லை, எனது சட்டங்களைக் கைக்கொள்ள கவனம் எடுக்கவுமில்லை. அத்துடன் அவர்கள் என்னுடைய ஓய்வுநாட்களைத் தூய்மைக்கேடாக்கினார்கள். ஆகையால் நான் என் கடுங்கோபத்தை அவர்கள்மேல் ஊற்றி, பாலைவனத்தில் எனது கோபத்தை அவர்கள்மேல் தீர்த்துக்கொள்ளுவேன்” என்றேன்.
22
ஆனாலும் இஸ்ரயேல் சேர்ந்து வாழ்ந்த பிறநாடுகள், அவர்களுடைய இறைவனால் தாம் வாக்குக் கொடுத்தபடி தமது மக்களை மீட்டுக்கொள்ள முடியவில்லையே என்று நினைப்பார்கள். அப்படி அவர்கள் பார்வையில் என் பெயர் தூய்மைக்கேடாகாதபடியே நான் என் கரத்தை அவர்கள்மேல் நீட்டாமல் இருக்கிறேன்.
23
மேலும் நான் அவர்களைப் பல நாடுகளுக்குள் சிதறடித்து, தேசங்களுக்குள்ளே பரவவிடுவேன் என்று, என் உயர்த்திய கையுடன் பாலைவனத்தில் நானே அவர்களுக்கு ஆணையிட்டேன்.
24
ஏனெனில் அவர்கள் என் சட்டங்களுக்குக் கீழ்ப்படியாமல், என் விதிமுறைகளைப் புறக்கணித்து, என் ஓய்வுநாட்களைத் தூய்மைக்கேடாக்கினார்கள். அவர்களுடைய கண்கள் அவர்களுடைய தந்தையர் வழிபட்ட உருவச்சிலைகளை இச்சித்தன.
25
மேலும் நான் அவர்களைப் பலவித நல்லதல்லாத விதிமுறைகளுக்கும், வாழ்க்கையில் கைக்கொள்ள முடியாத சட்டங்களுக்கும் ஒப்புக்கொடுத்தேன்.
26
தங்கள் முதற்பேறுகள் ஒவ்வொருவரையும் பலியாகக் கொடுப்பதன் மூலம், தாங்கள் தங்களையே கறைப்படுத்த நான் இடமளித்தேன். இவ்விதம் நான் அவர்களைப் பயங்கரத்தால் நிரப்பினேன். இவ்வாறு நானே யெகோவா என்பதை அவர்கள் அறிந்துகொள்ளும்படி செய்தேன்.’
27
“ஆகையால், மனுபுத்திரனே, இஸ்ரயேல் மக்களிடம் நீ சொல்லவேண்டியதாவது, ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே; உங்கள் தந்தையர் தொடர்ந்து என்னைக் கைவிட்டு என்னை நிந்தித்தார்கள்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options