உபாகமம் 4:15-24
15
யெகோவா ஓரேப் மலையில் நெருப்பின் நடுவிலிருந்து உங்களுடன் பேசிய அந்த நாளிலே, நீங்கள் எந்தவித ஒரு உருவத்தையுமே காணவில்லை. ஆகையால் உங்களைக்குறித்து மிகக் கவனமாயிருங்கள்.
16
நீங்கள் சீர்கெட்டவர்களாகி உங்களுக்காக ஒரு விக்கிரகத்தையும் செய்யவேண்டாம். ஒரு ஆணின் உருவத்திலோ, பெண்ணின் உருவத்திலோ,
17
அல்லது பூமியிலுள்ள எந்தவொரு மிருகத்தின் உருவத்திலோ, ஆகாயத்தில் பறக்கும் எந்தவொரு பறவையின் உருவத்திலோ,
18
நிலத்தில் ஊர்ந்து செல்லும் எந்தவொரு உயிரினத்தின் உருவத்திலோ, கீழே தண்ணீரில் வாழும் எந்தவொரு மச்சத்தின் உருவத்திலோ எந்தவொரு உருவச்சிலையையும் செய்யவேண்டாம்.
19
நீங்கள் ஆகாயத்தைப் பார்த்து, வானத்தில் அணிவகுத்திருக்கிற சூரியனையும் சந்திரனையும் நட்சத்திரங்களையும் காணும்போது, அவற்றை வணங்கும்படி அவற்றால் கவரப்படவேண்டாம். உங்கள் இறைவனாகிய யெகோவா அவற்றை வானத்தின் கீழுள்ள எல்லா நாடுகளுக்குமென வைத்திருக்கிறபடியால், நீங்கள் அவற்றை வணங்கவேண்டாம்.
20
ஆனால் உங்களை, நீங்கள் இப்பொழுது இருக்கிறதுபோல, இரும்பு உருக்கும் சூளையான எகிப்திலிருந்து யெகோவா தமது உரிமைச்சொத்தான மக்களாய் இருக்கும்படி வெளியே கொண்டுவந்திருக்கிறார்.
21
உங்கள் நிமித்தம் யெகோவா என்னுடன் கோபங்கொண்டார். அதனால் யோர்தானைக் கடந்து, உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு உரிமையாகக் கொடுக்கிற அந்த நாட்டிற்கு நான் போவதில்லை என எனக்குக் கடுமையாய் ஆணையிட்டுக் கூறினார்.
22
ஆகவே, நான் இந்த நாட்டிலேயே இறப்பேன்; யோர்தானைக் கடக்கமாட்டேன். ஆனால் நீங்கள் கடந்துபோய், அந்த நல்ல நாட்டை உரிமையாக்கிக்கொள்வீர்கள்.
23
உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுடன் செய்த அவருடைய உடன்படிக்கையை மறவாதபடி நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள்; உங்கள் இறைவனாகிய யெகோவா தடைசெய்திருக்கிற எந்த உருவத்திலும் உங்களுக்காக விக்கிரகங்களைச் செய்யவேண்டாம்.
24
ஏனெனில் உங்கள் இறைவனாகிய யெகோவா சுட்டெரிக்கும் நெருப்பு, அவர் தமக்குரிய வழிபாட்டைக் குறித்து வைராக்கியமுள்ள இறைவனாயும் இருக்கிறார்.
Settings