உபாகமம் 4:25-31
25
வருங்காலத்தில் நீங்கள் பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளையும் பெற்று அந்த நாட்டில் அதிக நாட்கள் வாழ்வீர்கள். அப்போது நீங்கள் சீர்கெட்டு எந்தவித விக்கிரகத்தையும் உருவாக்கி உங்கள் இறைவனாகிய யெகோவாவின் பார்வையில் தீமையானதைச் செய்து, கோபமூட்டினால்,
26
நீங்கள் யோர்தானைக் கடந்து உரிமையாக்கிக்கொள்ளப்போகும் நாட்டிலே மிகவிரைவில் அழிந்துபோவீர்கள் என்பதற்கு வானத்தையும் பூமியையும் உங்களுக்கு விரோதமான சாட்சிகளாக வைக்கிறேன். நீங்கள் அங்கு நீண்டகாலம் வாழமாட்டீர்கள், நிச்சயமாய் அழிக்கப்படுவீர்கள்.
27
யெகோவா உங்களை மக்கள் கூட்டங்களுக்குள்ளே சிதறப்பண்ணுவார். உங்களில் சிலர் மட்டுமே யெகோவா உங்களைத் துரத்திவிடுகிற அந்த நாடுகளின் மத்தியில் தப்பியிருப்பீர்கள்.
28
அங்கே நீங்கள் மரத்தினாலும் கல்லினாலும் மனிதன் செய்த தெய்வங்களை வணங்குவீர்கள். அவற்றால் பார்க்கவோ, கேட்கவோ, உண்ணவோ, முகர்ந்தறியவோ முடியாது.
29
ஆனால் அங்கிருந்தும் உங்கள் இறைவனாகிய யெகோவாவைத் தேடுவீர்கள்; உங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் நீங்கள் அவரைத் தேடினால் அவரைக் காண்பீர்கள்.
30
அக்காலங்களில் நீங்கள் துன்பப்பட இவைகளெல்லாம் உங்களுக்கு நிகழும். இவற்றின் பின்பு வரப்போகும் கடைசி நாட்களில் நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் திரும்பி அவருக்குக் கீழ்ப்படிவீர்கள்.
31
ஏனெனில் உங்கள் இறைவனாகிய யெகோவா இரக்கம் நிறைந்த இறைவனாய் இருக்கிறார்; அவர் உங்களைக் கைவிடவோ, அழிக்கவோமாட்டார். அவர் உங்களுடைய முற்பிதாக்களுக்கு ஆணையிட்டு உறுதிப்படுத்தி, அவர்களுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை மறக்கவுமாட்டார்.
Settings