Skip to content
அப்போஸ்தலர் 21:20-26

அப்போஸ்தலர் 21:20-26

20
அவர்கள் இதைக் கேட்டபோது, இறைவனைத் துதித்தார்கள். பின்பு அவர்கள் பவுலிடம்: “சகோதரனே, யூதருக்குள் ஆயிரக்கணக்கானோர் விசுவாசித்திருக்கிறார்கள் என்று நீ காண்கிறாயே. அவர்கள் அனைவரும் மோசேயின் சட்டத்தைக்குறித்து ஆர்வம் உள்ளவர்களாய் இருக்கிறார்கள்.
21
யூதரல்லாதவர்களின் மத்தியில் வாழும் யூதருக்கும், அவர்கள் மோசேயின் சட்டத்தைக் கைக்கொள்வதை விட்டுவிட வேண்டும் என்று நீ போதிக்கிறதாக இங்குள்ள யூதருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்னும், அவர்களுடைய பிள்ளைகளுக்கு விருத்தசேதனம் செய்யக்கூடாது என்றும், யூத முறைகளைக் கைக்கொள்ளக்கூடாது என்றும் நீ போதிக்கிறதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
22
ஆகவே நாம் செய்யக்கூடியது என்ன? நீ இங்கே வந்திருப்பதை அவர்கள் நிச்சயமாய் கேள்விப்படுவார்கள்.
23
எனவே, நாங்கள் உனக்குச் சொல்வதைச் செய். இங்கே நேர்த்திக்கடன் செய்திருக்கிற நான்குபேர் எங்களிடம் இருக்கிறார்கள்.
24
இவர்களைக் கூட்டிக்கொண்டுபோய், இவர்கள் செய்யும் பாரம்பரிய சுத்திகரிப்பு முறைமைகளில் நீயும் சேர்ந்துகொள்; இவர்கள் மொட்டையடிப்பதற்கான செலவை நீ செலுத்து. அப்பொழுது அனைவரும் உன்னைப்பற்றித் தங்களுக்கு அறிவிக்கப்பட்ட காரியங்களில் எவ்வித உண்மையும் இல்லையென்றும், நீயும் மோசேயின் சட்டத்திற்குக் கீழ்ப்படிந்தே வாழ்கிறாய் என்றும் அறிந்துகொள்வார்கள்.
25
யூதரல்லாத விசுவாசிகளைக் குறித்தோ, நாங்கள் எங்கள் தீர்மானத்தை அவர்களுக்கு எழுதியிருக்கிறோம்; அவர்கள் இறைவன் அல்லாதவைகளுக்குப் பலியிடப்பட்ட உணவையும் இரத்தத்தையும் நெரிக்கப்பட்ட மிருகத்தின் இறைச்சியையும் தவிர்க்கவேண்டும் என்றும், முறைகேடான பாலுறவுகளில் ஈடுபடக்கூடாது என்றும் எழுதியிருக்கிறோம்” என்றார்கள்.
26
மறுநாள் பவுல் அவர்களைக் கூட்டிக்கொண்டுபோய், அவர்களுடனே தானும் பாரம்பரிய முறைப்படி தன்னைச் சுத்திகரித்துக் கொண்டான். பின்பு அவன் சுத்திகரிப்புக்கான நாட்கள் எப்பொழுது முடிவடையும் என்றும், அவர்கள் ஒவ்வொருவருக்குமான காணிக்கை எப்பொழுது செலுத்தப்படும் என்றும் அறிவிப்பதற்கு ஆலயத்திற்குப் போனான்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options