Skip to content
2 சாமுயேல் 5:17-25

2 சாமுயேல் 5:17-25

17
தாவீது இஸ்ரயேலரின் அரசனாக அபிஷேகம் செய்யப்பட்டதை பெலிஸ்தியர் கேள்விப்பட்டபோது, அவர்கள் அனைவரும் தங்கள் எல்லா படைப்பலத்தோடும் அவனைத் தேடிச்சென்றார்கள். அதைக் கேள்விப்பட்ட தாவீதோ அரணான இடத்திற்குப் போனான்.
18
பெலிஸ்தியரோ ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே வந்து, அங்கே பரவி இருந்தார்கள்.
19
அப்பொழுது தாவீது யெகோவாவிடம், “நான் பெலிஸ்தியரை எதிர்க்கப் போகலாமா? அவர்களை எனது கையில் ஒப்புக்கொடுப்பீரா?” என்று கேட்டான். அதற்கு யெகோவா, “நீ போ, நிச்சயமாக நான் பெலிஸ்தியரை உன் கையில் ஒப்படைப்பேன்” என்றார்.
20
எனவே தாவீது பாகால் பிராசீமுக்குப்போய் பெலிஸ்தியரை அங்கே தோற்கடித்தான். அப்பொழுது அவன், “தண்ணீர் மடை திறந்தோடுவதுபோல, யெகோவா என் பகைவரை எனக்கு முன்பாக முறிந்தோடப்பண்ணினார்” என்றான். எனவே அந்த இடம் பாகால் பிராசீம் என அழைக்கப்பட்டது.
21
அப்பொழுது பெலிஸ்தியர் தங்கள் விக்கிரகங்களைக் கைவிட்டார்கள். அவற்றைத் தாவீதும் அவன் மனிதர்களும் எடுத்துச் சென்றார்கள்.
22
பெலிஸ்தியர் மீண்டும் வந்து ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பரந்து காத்திருந்தார்கள்.
23
எனவே தாவீது யெகோவாவிடம் விசாரித்தபோது, அதற்கு அவர், “நீ அவர்களை நேருக்குநேராக தாக்காமல், அவர்களுக்குப் பின்னாகச் சுற்றிப்போய் குங்கிலிய மரங்களுக்கு முன்னிருந்து தாக்கு;
24
குங்கிலிய மரங்களின் உச்சியில் சலசலக்கும் இரைச்சலைக் கேட்கும்போது விரைவாகச் செல்வாயாக. ஏனெனில், இதுவே பெலிஸ்தியரின் படையைத் தாக்குவதற்கு யெகோவா உனக்குமுன் போயிருக்கிறார் என்பதற்கு அடையாளம்” என்றார்.
25
எனவே யெகோவா கட்டளையிட்டபடியே தாவீது செய்தான், பெலிஸ்தியரை கிபியோன் தொடங்கி கேசேர் எல்லைவரை துரத்தி முறியடித்தான்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options