2 சாமுயேல் 5:1-10
1
இஸ்ரயேலின் கோத்திரங்கள் அனைத்தும் எப்ரோனிலிருந்த தாவீதிடம் வந்து, “நாங்கள் உமது எலும்பும் உமது சதையுமாயிருக்கிறோம்.
2
கடந்த நாட்களில் சவுல் எங்களுக்கு அரசனாயிருந்தபோது, இஸ்ரயேலின் இராணுவ நடவடிக்கைக்கு தலைமை வகித்து வழிநடத்தியவர் நீரே; அன்றியும் யெகோவா உம்மிடம், ‘நீ இஸ்ரயேல் மக்களுக்கு மேய்ப்பனாகி அவர்களுக்கு ஆளுநனாவாய்’ என்றும் சொல்லியிருக்கிறாரே” என்றனர்.
3
இஸ்ரயேலின் முதியவர்கள் அனைவரும் எப்ரோனிலிருந்த தாவீது அரசனிடம் வந்தார்கள்; தாவீது அரசன் எப்ரோனில் யெகோவா முன்னிலையில் அவர்களுடன் ஒரு உடன்படிக்கையைச் செய்துகொண்டபின், அவர்கள் தாவீதை இஸ்ரயேலுக்கு அரசனாக அபிஷேகம் செய்தார்கள்.
4
தாவீது அரசனானபோது முப்பது வயதுடையவனாயிருந்தான். அவன் நாற்பது வருடங்கள் அரசாண்டான்.
5
அவன் எப்ரோனில் யூதாவை ஏழு வருடம் ஆறு மாதமும், எருசலேமில் இஸ்ரயேலர் அனைவரையும், யூதாவையும் முப்பத்துமூன்று வருடங்களும் அரசாண்டான்.
6
அரசர் தன் மனிதருடன் படையெடுத்து எருசலேமுக்குப் போய் அங்கே குடியிருந்த எபூசியரை தாக்குவதற்குச் சென்றான். எபூசியர் தாவீதிடம், “உன்னால் இங்கு உள்ளே வரமுடியாது. இங்குள்ள குருடரும், முடவரும் உன்னைத் துரத்திவிடுவார்கள்” என்றார்கள். தாவீதினால் உள்ளே வரமுடியாது என அவர்கள் நினைத்தார்கள்.
7
ஆனாலும் தாவீதின் நகரமான சீயோன் கோட்டையை தாவீது கைப்பற்றினான்.
8
அன்றையதினம் தாவீது, “எபூசியரை முறியடிப்பவன் எவனும் தாவீதின் பகைவர்களான குருடரையும், முடவரையும் எதிர்ப்பதற்கு நீர்க்குழாய் வழியாக ஏறிப்போகவேண்டும்” எனச் சொல்லியிருந்தான். இதனால்தான் குருடரும், முடவரும் அரண்மனைக்குள்ளே போகக்கூடாது என்பார்கள்.
9
பின்பு தாவீது அந்த கோட்டையில் வாழ்ந்து, அதைத் தாவீதின் நகரம் என அழைத்தான். அவன் அதைச் சுற்றிலும் மில்லோவிலிருந்து உட்புறமாக மதிலைக் கட்டினான்.
10
சேனைகளின் இறைவனாகிய யெகோவா தாவீதோடு இருந்தபடியால் அவன் மென்மேலும் வலிமையடைந்தான்.
Settings