2 இராஜாக்கள் 14:1-7
1
இஸ்ரயேலின் அரசன் யோவாகாசின் மகன், யோவாஸ் அரசாண்ட இரண்டாம் வருடத்தில், யூதாவின் அரசன் யோவாஸின் மகன் அமத்சியா யூதாவில் அரசாளத் தொடங்கினான்.
2
அவன் அரசனானபோது இருபத்தைந்து வயதுள்ளவனாயிருந்தான். அவன் எருசலேமில் இருபத்தொன்பது வருடங்கள் ஆட்சிசெய்தான். அவனுடைய தாயின் பெயர் யொவதானாள். அவள் எருசலேமைச் சேர்ந்தவள்.
3
அமத்சியா யெகோவாவின் பார்வையில் சரியானதையே செய்தான். ஆனாலும், தன் தந்தையான தாவீதைப்போல் செய்யவில்லை. எல்லாவற்றிலும் தன் தகப்பனான யோவாஸின் முன்மாதிரியையே பின்பற்றினான்.
4
ஆனால் உயர்ந்த மேடைகளோ அகற்றப்படவில்லை. மக்கள் தொடர்ந்து அந்த மேடைகளில் பலிகளைச் செலுத்தியும், தூபங்காட்டியும் வந்தனர்.
5
அரசாட்சி அவனுடைய கையின் கட்டுப்பாட்டிற்குள் உறுதியாக்கப்பட்டபோது, அவன் தன் தகப்பனாகிய அரசனைக் கொன்ற அதிகாரிகளைக் கொன்றுபோட்டான்.
6
ஆனாலும் யெகோவாவின் கட்டளைப்படி மோசேயின் சட்ட புத்தகத்தில் எழுதியிருந்ததற்கு ஏற்றவாறு கொலைசெய்தவர்களின் மகன்களை அவன் கொல்லவில்லை. மோசேயின் சட்ட புத்தகத்தில், “பிள்ளைகளுடைய பாவங்களுக்காக பெற்றோரோ, பெற்றோரின் பாவங்களுக்காக பிள்ளைகளோ கொல்லப்படக்கூடாது. ஒவ்வொருவரும் தனது சொந்தப் பாவங்களுக்காகவே கொல்லப்படவேண்டும்” என்று எழுதப்பட்டிருக்கிறது.
7
அரசன் அமத்சியாவே உப்புப் பள்ளத்தாக்கில் பத்தாயிரம் ஏதோமியரைத் தோற்கடித்து, தலைநகரான சேலா பட்டணத்தைக் கைப்பற்றி அதன் பெயரையும் யொக்தியேல் என்று மாற்றியவன். இன்று மட்டும் அந்த நகரம் அப்பெயராலேயே அழைக்கப்படுகிறது.
Settings