2 நாளாகமம் 25:5-10
5
அமத்சியா யூதாவின் மக்களை ஒன்றுகூட்டி முழு யூதாவுக்கும், பென்யமீனுக்குமான அவர்களின் குடும்பங்களின்படி ஆயிரம்பேரின் தளபதிகளையும், நூறுபேரின் தளபதிகளையும் நியமித்தான். அதன்பின் அவன் இருபது வயதும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களை ஒன்றுதிரட்டினான். அவர்களில் ஈட்டியும், கேடயமும் பயன்படுத்தத் தெரிந்தவர்களான, இராணுவ பணிக்கு ஆயத்தமான 3,00,000 மனிதர் இருப்பதைக் கண்டான்.
6
அத்துடன் அவன் இஸ்ரயேலில் இருந்தும் 1,00,000 இராணுவவீரர்களை நூறு தாலந்து வெள்ளி கொடுத்து கூலிக்கு அமர்த்தினான்.
7
ஆனால் இறைவனின் மனிதன் ஒருவன் அவனிடம் வந்து சொன்னதாவது: “அரசனே, இஸ்ரயேலின் இந்தப் படை உன்னோடு யுத்தத்திற்கு வரவே கூடாது. ஏனெனில் யெகோவா இஸ்ரயேலரோடு இல்லை. எப்பிராயீம் மக்கள் யாருடனும் இல்லை.
8
நீ யுத்தத்திற்கு போய், தைரியமாய் சண்டையிட்டாலும்கூட, இறைவனோ உங்கள் பகைவர்களுக்கு முன்பாக உங்களை முறியடிப்பார். ஏனெனில் உதவிசெய்யவும், தோற்கடிக்கவும் இறைவனுக்கு வல்லமை உண்டு” என்றான்.
9
அதற்கு அமத்சியா இறைவனின் மனிதனிடம், “இந்த இஸ்ரயேல் படைக்கு நான் செலுத்திய நூறு தாலந்து வெள்ளி என்னாவது?” என்று கேட்டான். அதற்கு இறைவனின் மனிதன், “யெகோவாவினால் இதற்கும் அதிகமாகக் கொடுக்கமுடியும்” என்றான்.
10
எனவே அமத்சியா தன்னிடம் எப்பிராயீமிலிருந்து வந்த படையை வெளியேற்றி அவர்கள் வீடுகளுக்கு அனுப்பிவிட்டான். அவர்கள் யூதாவின்மேல் கடுங்கோபத்துடனும், மிக ஆத்திரத்துடனும் அவ்விடத்தைவிட்டு தங்கள் வீடுகளுக்குப் போனார்கள்.
Settings