Skip to content
1 சாமுயேல் 14:27-45

1 சாமுயேல் 14:27-45

27
யோனத்தானோ தன் தகப்பன் யுத்த வீரருக்கு ஆணையிட்டு மக்களைக் கட்டுப்படுத்தியிருந்ததை அறியவில்லை. அதனால் அவன் தன் கையிலிருந்த கோலை நீட்டித் தேனில் தோய்த்து அதிலிருந்து வழிந்த தேனைத் தன் கையில் எடுத்து வாய்க்குள் வைத்தான். உடனே அவன் பெலனடைந்தான்.
28
அப்பொழுது போர்வீரரில் ஒருவன் அவனிடம், “இன்று உணவு சாப்பிடும் மனிதன் சபிக்கப்பட்டவன் என உம் தகப்பன் ஒரு கடும் ஆணையிட்டு வீரர்களைக் கட்டுப்படுத்தியிருக்கிறார். இதனால்தான் போர்வீரர் பசியினால் சோர்ந்து இருக்கிறார்கள்” என்றான்.
29
இதைக் கேட்ட யோனத்தான் அவனிடம், “என் தகப்பனார் நாட்டிற்கு எப்படிப்பட்ட கஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறார். சிறிது தேனை சாப்பிட்டதால் நான் எவ்வளவு பெலனடைந்திருக்கிறேன்.
30
இன்றைய தினம் தங்களுக்கு அகப்பட்ட பகைவர்களின் கொள்ளைப்பொருட்களில் சிலவற்றைச் சாப்பிட்டிருந்தால் எவ்வளவு நலமாயிருந்திருக்கும். பெலிஸ்தியரில் கொலையுண்டோர் இன்னும் அதிகமானோராய் இருந்திருப்பார்களே” என்றான்.
31
அன்று இஸ்ரயேலர் மிக்மாசிலிருந்து ஆயலோன் மட்டும் பெலிஸ்தியரை வெட்டி வீழ்த்தியபின் அவர்கள் களைப்படைந்திருந்தார்கள்.
32
அவர்கள் கொள்ளையடித்த பொருட்களின்மேல் பாய்ந்து, செம்மறியாடுகளையும், எருதுகளையும், கன்றுக்குட்டிகளையும் தரையின்மேல் போட்டுக் கொன்று, இரத்தத்துடன் அவற்றைச் சாப்பிட்டார்கள்.
33
அப்பொழுது, “இதோ போர்வீரர் இரத்தத்துடன் இறைச்சியைச் சாப்பிட்டு யெகோவாவுக்கு விரோதமாய்ப் பாவம் செய்கிறார்கள்” என்று ஒருவன் சவுலுக்குச் சொன்னான். அதற்கு சவுல் அவர்களிடம், “நீங்கள் யெகோவாவுக்கு எதிராக நம்பிக்கைத் துரோகம் செய்தீர்கள். எனவே இப்பொழுதே உடனே ஒரு பெரிய கல்லை என்னிடம் உருட்டிக்கொண்டு வாருங்கள்” என்றான்.
34
பின்பு சவுல், “நீங்கள் மனிதர் மத்தியில் சென்று அவர்களிடம், ‘நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் மாடுகளையும், செம்மறியாடுகளையும் இங்கு கொண்டுவந்து அவற்றை இங்கே கொன்று சாப்பிடவேண்டும். நீங்கள் இரத்தத்தோடு இறைச்சியைச் சாப்பிட்டு யெகோவாவுக்கு விரோதமாய்ப் பாவம் செய்யவேண்டாம் என்று சொல்லுங்கள்’ ” என்றான். அவ்வாறே இஸ்ரயேலர் ஒவ்வொருவரும் அன்றிரவே தங்கள் மாடுகளைக் கொண்டுவந்து அங்கே வெட்டினார்கள்.
35
அதன்பின் சவுல் யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான். அவன் இவ்விதம் செய்தது இதுவே முதல் முறையாகும்.
36
அதன்பின் சவுல் மக்களிடம், “நாம் இன்றிரவே பெலிஸ்தியரைத் தொடர்ந்துபோய் விடியும்வரை அவர்களைக் கொள்ளையிட்டு, அவர்களில் ஒருவரையும் உயிருடன் தப்பவிடாமல் தாக்குவோம்” என்றான். அதற்கு அவர்கள், “உமக்கு எது நல்லதாய்த் தோன்றுகிறதோ அதன்படி செய்யும்” என்றார்கள். ஆனால் ஆசாரியனோ சவுலிடம், “நாம் இங்கே முதலில் இறைவனிடம் போய் விசாரிப்போம்” என்றான்.
37
அப்பொழுது சவுல் இறைவனிடம், “நான் பெலிஸ்தியரைத் தொடர்ந்து போகலாமா? அவர்களை இஸ்ரயேலரின் கையில் ஒப்புக்கொடுப்பீரா?” என்று கேட்டான். ஆனால் இறைவன் அன்று அவனுக்கு பதிலளிக்கவில்லை.
38
அதனால் சவுல் தன் படைத் தலைவர்களிடம், “நீங்கள் அனைவரும் இங்கே வாருங்கள். இன்று என்ன பாவம் இங்கு செய்யப்பட்டுள்ளது என்பதை கண்டுபிடிப்போம்.
39
அந்த பாவத்தைச் செய்தவன் என் மகன் யோனத்தானாயிருந்தாலும் அவனும் சாகவேண்டும். இஸ்ரயேலரை தப்புவிக்கிற யெகோவா இருப்பது நிச்சயமெனில், அவன் சாகவேண்டும் என்பதும் நிச்சயம்” என்றான். ஆனால் மனிதரில் ஒருவனும் ஒரு வார்த்தையும் பேசவில்லை.
40
அப்பொழுது சவுல் இஸ்ரயேலர் எல்லோரிடமும், “நீங்கள் அங்கே நில்லுங்கள். நானும் என் மகன் யோனத்தானும் இங்கே நிற்போம்” என்றான். அதற்கு அவர்கள் சவுலிடம், “நீர் சரியென்று நினைப்பதைச் செய்யும்” என்றார்கள்.
41
எனவே சவுல் இஸ்ரயேலரின் இறைவனாகிய யெகோவாவிடம், “யெகோவாவே சரியான பதிலை எனக்குத் தாரும்” என்று மன்றாடினான். சீட்டு சவுலின்மேலும், யோனத்தான்மேலும் விழுந்தது. மக்கள் நீங்கலாக்கப்பட்டார்கள்.
42
அப்பொழுது சவுல் மக்களிடம், “எனக்கும் என் மகன் யோனத்தானுக்குமிடையே சீட்டுப் போடுங்கள்” என்றான். யோனத்தானே குறிப்பிடப்பட்டான்.
43
எனவே சவுல் யோனத்தானிடம், “நீ என்ன குற்றம் செய்தாய்? எனக்குச் சொல்” என்று கேட்டான். அதற்கு யோனத்தான், “என்னுடைய கையிலிருந்த கோலின் நுனியால் கொஞ்சம் தேன் எடுத்துச் சுவைத்துப் பார்த்தேன். இப்பொழுது நான் சாகவேண்டுமோ?” என்று கேட்டான்.
44
அதற்கு சவுல், “யோனத்தானே, நீ சாகாவிட்டால் இறைவன் என்னை எவ்வளவு கடுமையாகவும் தண்டிக்கட்டும்” என்றான்.
45
ஆனால் மனிதர் சவுலிடம், “யோனத்தான் சாகவேண்டுமோ? அவனல்லவோ இஸ்ரயேலருக்கு இப்பெரிய விடுதலையைக் கொண்டுவந்தான். வேண்டாம்! யெகோவா இருப்பது நிச்சயமெனில் அவன் தலையிலுள்ள ஒரு மயிரும் கீழே விழக்கூடாது. ஏனெனில் அவன் இறைவனின் உதவியுடனே இதை இன்று செய்தான்” என்றார்கள். இவ்விதம் மனிதர் யோனத்தானை விடுவித்ததினால் அவன் கொல்லப்படவில்லை.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options