1 நாளாகமம் 17:16-27
16
அப்பொழுது தாவீது அரசன் உள்ளே போய், யெகோவாவுக்கு முன்னால் உட்கார்ந்து சொன்னதாவது: “யெகோவாவாகிய இறைவனே, இதுவரைக்கும் நீர் என்னை வழிநடத்துவதற்கு நான் யார்? எனது குடும்பத்திற்கு என்ன அருகதை உண்டு?
17
இறைவனே, உமது பார்வையில் இதுவும் போதாதென்று அடியவனின் குடும்பத்தின் எதிர்காலத்தைப்பற்றியும் பேசியிருக்கிறீர். யெகோவாவாகிய இறைவனே, எல்லா மனிதரிலும் மேன்மையுள்ளவனாக என்னைக் கணித்தீரே.
18
“இவ்வாறு உமது அடியவனைக் கனப்படுத்தியதற்கு இதைவிட வேறு எதை தாவீது உமக்குச் சொல்வான்? உமது அடியவனைப்பற்றி உமக்கே தெரியும்.
19
யெகோவாவே, உமது அடியவனுக்காக உமது திட்டத்தின்படி இப்பெரிய செயலைச் செய்து, இந்த எல்லா மேன்மையான வாக்குத்தத்தங்களையும் தெரியப்படுத்தியிருக்கிறீர்.
20
“யெகோவாவே, நாங்கள் எங்கள் சொந்த காதுகளால் கேட்டவற்றின்படி உமக்கு இணையானவர் யாரும் இல்லை. உம்மைத்தவிர வேறொரு இறைவனும் இல்லை.
21
உமது மக்களாகிய இஸ்ரயேலரைப்போல வேறு யாரும் உண்டோ? இறைவனாகிய நீர், பூமியில் உமக்காக மீட்டுக்கொண்ட இந்த நாட்டைப்போல், வேறு ஒரு நாடு உண்டோ? இந்த மக்களை உமக்கு உரியவர்களாகவும் உமக்கு பெயர் உண்டாகும்படியும் நீர் எகிப்திலிருந்து மீட்டுக்கொண்டு வந்தீர். உமது மக்களுக்கு முன்பாக பிற நாடுகளை வெளியே துரத்தி, ஆச்சரியமும் பயங்கரமுமான அதிசயங்களைச் செய்தீரே.
22
நீர் உமது மக்களாகிய இஸ்ரயேலரை என்றென்றும் உமக்குச் சொந்த மக்களாக ஏற்படுத்தினீர். யெகோவாவே! நீரே அவர்களின் இறைவனானீர்.
23
“இப்பொழுது யெகோவாவே, உம்முடைய அடியானையும், அவன் குடும்பத்தையும் குறித்து நீர் கொடுத்த வாக்குறுதி என்றென்றைக்கும் நிலைப்பதாக. நீர் வாக்களித்தபடியே செய்யும்.
24
அதனால் அது உறுதிப்பட்டு, உமது பெயர் என்றென்றும் மேன்மை அடைந்திருக்கும். அப்பொழுது மனிதர்கள், ‘இஸ்ரயேலின்மேல் இறைவனாயிருக்கிற சேனைகளின் யெகோவாவே இஸ்ரயேலின் இறைவன்!’ என்று சொல்வார்கள். உமக்கு முன்பாக உமது அடியவனாகிய தாவீதின் குடும்பமும் நிலைநிறுத்தப்பட்டிருக்கும்.
25
“என் இறைவனே, நீரே உமது அடியவனாகிய என்னிடம் ஒரு வீட்டைக் கட்டுவதாக வெளிப்படுத்தினீர். எனவே உமது அடியவன் உம்மிடம் விண்ணப்பம் செய்ய துணிவு கிடைத்தது.
26
யெகோவாவே, நீரே இறைவன். நீர் உமது அடியவனுக்கு இந்த நல்ல செயல்களை வாக்களிக்கிறீர்.
27
இப்பொழுதும் உமது அடியவனின் குடும்பத்தை ஆசீர்வதிக்க நீர் விருப்பங்கொண்டீர். அதனால் உமது பார்வையில் அது தொடர்ந்து இருக்கும். யெகோவாவே இந்த வீட்டை நீர் ஆசீர்வதித்ததால், அது என்றென்றும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்” என தாவீது விண்ணப்பித்தான்.
Settings