யாத்திராகமம்24
Listen to this chapter
0:00
0:00
மலைக்கு அழைப்பு
1
மேலும் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது: “நீயும், ஆரோனும், நாதாபும், அபியூவும், இஸ்ரயேலின் சபைத்தலைவர்கள் எழுபது பேரும் யெகோவாவிடம் மேலே வாருங்கள். நீங்கள் தூரத்திலிருந்தே வழிபடவேண்டும்.
2
ஆனால் மோசே மட்டுமே யெகோவாவுக்கு அருகில் வரவேண்டும். மற்றவர்கள் அருகில் வரக்கூடாது. இஸ்ரயேல் மக்களும் மோசேயுடன் வரக்கூடாது.”
உடன்படிக்கையை வாசித்து முத்திரையிடுதல்
3
மோசே மக்களிடம்போய் யெகோவாவினுடைய எல்லா வார்த்தைகளையும், சட்டங்களையும் அவர்களுக்குச் சொன்னான். அவர்கள் அனைவரும் ஒரே குரலில், “யெகோவா சொன்ன எல்லாவற்றையும் நாங்கள் செய்வோம்” என்றார்கள்.
4
அப்பொழுது யெகோவா சொன்ன எல்லாவற்றையும் மோசே எழுதிவைத்தான். மறுநாள் அதிகாலையில் அவன் எழுந்து, மலையடிவாரத்தில் ஒரு பலிபீடத்தைக் கட்டி, இஸ்ரயேலின் பன்னிரண்டு கோத்திரங்களைக் குறிக்கும் விதமாக பன்னிரண்டு கல் தூண்களை நிறுத்தினான்.
5
அதன்பின் அவன் இஸ்ரயேலில் இளைஞர்களை அனுப்பினான். அவர்கள் தகன காணிக்கைகளைச் செலுத்தி, சமாதான காணிக்கையாக இளங்காளைகளை யெகோவாவுக்குப் பலியிட்டார்கள்.
6
அப்பொழுது மோசே இரத்தத்தில் அரைப்பங்கை எடுத்துக் கிண்ணங்களில் வைத்தான். மற்ற அரைப்பங்கைப் பலிபீடத்தின்மேல் தெளித்தான்.
7
பின்பு மோசே உடன்படிக்கைப் புத்தகத்தை எடுத்து மக்கள் கேட்கும்படி வாசித்தான். அவர்கள் அதைக்கேட்டு, “யெகோவா சொன்னபடியெல்லாம் நாங்கள் செய்வோம்; நாங்கள் கீழ்ப்படிவோம்” என்றார்கள்.
8
அப்பொழுது மோசே இரத்தத்தை எடுத்து மக்கள்மேல் தெளித்து அவர்களிடம், “இந்த எல்லா வார்த்தைகளுக்கும் இணங்க யெகோவா உங்களோடு செய்துகொண்ட உடன்படிக்கையின் இரத்தம் இதுவே” என்றான்.
தரிசனமும் உடன்படிக்கை விருந்தும்
9
அதன்பின், ஆரோனும், நாதாபும், அபியூவும், இஸ்ரயேலரின் சபைத்தலைவர்களில் எழுபது பேரும் மோசேயுடன் ஏறிப்போனார்கள்.
10
அவர்கள் இஸ்ரயேலரின் இறைவனை அங்கே கண்டார்கள். அவருடைய பாதத்தின்கீழ் ஆகாயத்தைப்போல் தெளிவான நீலக்கல்லினால் அமைக்கப்பட்ட நடைபாதை போன்ற ஒன்று இருந்தது.
11
அவர்கள் இறைவனைக் கண்டார்கள். அப்படியிருந்தும் இறைவன் இஸ்ரயேலின் தலைவர்களுக்கு விரோதமாகத் தன் கரத்தை உயர்த்தவில்லை. அவர்கள் இறைவன் முன்னிலையில் சாப்பிட்டுக் குடித்தார்கள்.
கற்பலகைகளைப் பெற மோசே மலைமேல் ஏறுதல்
12
அப்பொழுது யெகோவா மோசேயிடம், “நீ மலையின்மேல் என்னிடத்திற்கு ஏறி வந்து இங்கேயே இரு. நான் அவர்களுடைய அறிவுறுத்தலுக்காக எழுதிய சட்டமும், கட்டளைகளும் அடங்கிய கற்பலகைகளை உனக்குக் கொடுப்பேன்” என்றார்.
13
பின்பு மோசே தன் உதவியாளனான யோசுவாவுடன் புறப்பட்டான். மோசே இறைவனுடைய மலைக்கு ஏறிப்போனான்.
14
அப்பொழுது மோசே இஸ்ரயேலின் சபைத்தலைவர்களிடம், “நாங்கள் மறுபடியும் உங்களிடம் திரும்பி வரும்வரை நீங்கள் இங்கேயே காத்திருங்கள். ஆரோனும், ஊரும் உங்களோடு இருக்கிறார்கள். யாராவது ஒரு வழக்கில் ஈடுபட்டால் அவன் அவர்களிடம் போகலாம்” என்றான்.
15
மோசே மலையின்மேல் ஏறிப்போனான். அப்பொழுது மேகம் மலையை மூடிற்று.
16
யெகோவாவின் மகிமையும், சீனாய் மலையின்மேல் தங்கியிருந்தது. மேகம் மலையை ஆறு நாட்களுக்கு மூடியிருந்தது. ஏழாம்நாள் யெகோவா மேகத்துக்குள் இருந்து மோசேயைக் கூப்பிட்டார்.
17
மலையின் உச்சியில் காணப்பட்ட யெகோவாவினுடைய மகிமை இஸ்ரயேலருக்கு பட்சிக்கும் நெருப்பைப்போல் தெரிந்தது.
18
திரும்பவும் மோசே மலையின்மேல் ஏறிப்போகும்போது மேகத்திற்குள் புகுந்தான். அந்த மலையிலே அவன் நாற்பது பகலும் நாற்பது இரவும் தங்கியிருந்தான்.
Use ← → arrow keys to navigate
Settings
Reading Style
Typeface
Font Size px
Reading Width chars
Options
Study Note