சங்கீதம் 35:19-28
19
காரணமின்றி என்னைப் பகைக்கிறவர்கள் என்னைப் பழித்து மகிழாமலும், காரணமின்றி என்னை வெறுக்கிறவர்கள் தவறான நோக்கத்தோடு கண் சிமிட்டாமலும் இருக்கட்டும்.
20
அவர்கள் சமாதானமாய்ப் பேசுவதில்லை; நாட்டில் அமைதியாய் வாழ்கிறவர்களுக்கு எதிராய் வஞ்சகமாய்த் திட்டமிடுகிறார்கள்.
21
அவர்கள் தங்கள் வாயை விரிவாய்த் திறந்து சொல்கிறதாவது: “ஆ! ஆ! எங்கள் கண்களாலேயே நாங்கள் இதைக் கண்டிருக்கிறோம்.”
22
யெகோவாவே, நீர் இதைக் கண்டிருக்கிறீர்; மவுனமாயிராதேயும். யெகோவாவே, என்னைவிட்டுத் தூரமாயிராதேயும்.
23
விழித்தெழும், எழுந்து எனக்காக வழக்காடும்; என் இறைவனே, யெகோவாவே, எனக்காகப் போராடும்.
24
என் இறைவனாகிய யெகோவாவே, உமது நீதியின் நிமித்தம் என்னை நியாயம் விசாரியும்; அவர்கள் என்னைப் பழித்து மகிழவிடாதேயும்.
25
“ஆ! நாங்கள் விரும்பியதே நடந்துவிட்டது!” என்று அவர்கள் சிந்திக்க விடாதேயும் அல்லது “நாங்கள் அவனை விழுங்கிவிட்டோம்” என்று அவர்கள் சொல்லவிடாதேயும்.
26
என் துன்பத்தைக் குறித்து என்னைப் பழித்து மகிழ்கிறவர்கள் எல்லோரும் வெட்கமடைந்து கலங்குவார்களாக; எனக்கு மேலாகத் தங்களை உயர்த்துகிறவர்கள் எல்லோரும் வெட்கத்தாலும் அவமானத்தாலும் மூடப்படுவார்களாக.
27
என் நீதி நிலைநிறுத்தப்படுவதை விரும்புகிறவர்கள், சந்தோஷத்தினாலும் மகிழ்ச்சியினாலும் ஆர்ப்பரிப்பார்களாக. “தனது பணியாளனின் நலனை விரும்புகிற யெகோவா உயர்த்தப்படுவாராக” என்று அவர்கள் எப்பொழுதும் சொல்லட்டும்.
28
எனது நாவு உமது நீதியை அறிவிக்கும், நாள்முழுவதும் உம்மைத் துதிக்கும்.
Settings