சங்கீதம் 35:1-10
1
தாவீதின் சங்கீதம். யெகோவாவே, என்னோடு வழக்காடுகிறவர்களோடு வழக்காடி, என்னோடு போராடுகிறவர்களுடன் நீர் போராடும்.
2
கேடயத்தையும் கவசத்தையும் எடுத்துக்கொள்ளும்; எனக்கு உதவிசெய்ய எழுந்து வாரும்.
3
என்னைத் துரத்துகிறவர்களுக்கு எதிராக ஈட்டியையும் எறிவேலையும் நீட்டி இப்படி சொல்லும்: நீர் என் ஆத்துமாவுக்கு, “நானே உனது இரட்சிப்பு.”
4
எனது உயிரை வாங்கத் தேடுகிறவர்கள் அவமானம் அடைந்து வெட்கப்படுவார்களாக; என்னை அழிக்கச் சதிசெய்கிறவர்கள் மனம் தளர்ந்து பின்வாங்கிப் போவார்களாக.
5
யெகோவாவினுடைய தூதன் அவர்களைத் துரத்துவதால் காற்றிலே பறந்து போகிற பதரைப்போல் இருப்பார்களாக;
6
யெகோவாவினுடைய தூதன் அவர்களைப் பின்தொடர்வதால், அவர்களுடைய பாதை இருளாகவும், சறுக்குகிறதாகவும் இருப்பதாக.
7
காரணமின்றி அவர்கள் எனக்காக வலையை மறைத்து வைத்திருப்பதனாலும், காரணமின்றி அவர்கள் எனக்காக குழிதோண்டி இருப்பதனாலும்,
8
அழிவு திடீரென அவர்கள்மேல் வருவதாக; அவர்கள் மறைத்துவைத்த வலை அவர்களையே சிக்கவைப்பதாக; அந்தக் குழிக்குள் அவர்களே விழுந்து அழிந்துபோவார்களாக.
9
அப்பொழுது என் ஆத்துமா யெகோவாவிடம் சந்தோஷப்பட்டு, அவருடைய இரட்சிப்பில் மகிழ்ச்சியடையும்.
10
“யெகோவாவே, உம்மைப்போல் யாருண்டு? நீர் ஏழைகளை ஒடுக்குகிற வலிமையானவர்களிடம் இருந்தும், ஏழைகளையும் குறைவுள்ளோரையும் கொள்ளையிடுகிறவர்களிடம் இருந்தும் விடுவிக்கிறீர்” என்று என் முழு உள்ளமும் வியப்புடன் சொல்லும்.
Settings