எண்ணாகமம் 3:1-43
1
யெகோவா சீனாய் மலையின்மேல் மோசேயுடன் பேசிய காலத்திலிருந்த, ஆரோன் மோசே ஆகியோரின் குடும்ப வம்சவரலாறு:
2
ஆரோனின் மகன்களின் பெயர்களாவன: மூத்த மகனான நாதாப், பின்பு அபியூ, எலெயாசார், இத்தாமார் ஆகியோர்.
3
இவர்கள் எல்லோரும் ஆசாரியர்களாகப் பணிசெய்வதற்கு நியமிக்கப்பட்டு, அபிஷேகம் பண்ணப்பட்ட ஆரோனின் மகன்கள்.
4
ஆனால் நாதாபும், அபியூவும் சீனாய் பாலைவனத்தில் யெகோவாவுக்கு முன்பாக அங்கீகரிக்கப்படாத நெருப்பினால், காணிக்கையைச் செலுத்தியபோது, அவருக்கு முன்னால் செத்து விழுந்தார்கள். அவர்களுக்கு மகன்கள் இல்லை. அதனால் எலெயாசாரும், இத்தாமாரும் மட்டுமே தங்கள் தந்தையான ஆரோனின் வாழ்நாட்களில் ஆசாரியர்களாகப் பணிசெய்து வந்தார்கள்.
5
யெகோவா மோசேயிடம் சொன்னதாவது,
6
“ஆசாரியன் ஆரோனுக்கு உதவிசெய்யும்படி லேவி கோத்திரத்தாரை அவனுக்கு முன் அழைத்து வா.
7
அவர்கள் சபைக் கூடாரத்தில், இறைசமுகக் கூடாரத்தின் வேலைகளைச் செய்து, அவனுக்காகவும், முழு சமுதாயத்திற்காகவும் கடமைகளைச் செய்யவேண்டும்.
8
அவர்கள் சபைக் கூடாரத்தின் பொருட்கள் எல்லாவற்றையும் பராமரித்து, இறைசமுகக் கூடாரத்தின் வேலைகளைச் செய்வதினால் இஸ்ரயேலின் கடமைகளையும் நிறைவேற்றவேண்டும்.
9
ஆரோனுக்கும், அவன் மகன்களுக்கும் உதவியாக லேவியரைக் கொடுக்கவேண்டும். அவனுக்கு அர்ப்பணமாய்க் கொடுக்கப்படவேண்டிய இஸ்ரயேலர்கள் இவர்களே.
10
ஆரோனையும், அவன் மகன்களையும் குருத்துவப் பணிசெய்யும்படி நியமிக்கவேண்டும். பரிசுத்த இடத்தை நெருங்கும் வேறு எவனும் கொல்லப்படவேண்டும்” என்றார்.
11
மேலும் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது,
12
“ஒவ்வொரு இஸ்ரயேல் பெண்களுக்கும் கர்ப்பந்திறந்து பிறக்கும் மூத்த ஆண்பிள்ளைக்குப் பதிலாக இஸ்ரயேலருக்குள் இருந்து நான் லேவியரைத் தெரிந்துகொண்டேன். இந்த லேவியர் எனக்குரியவர்கள்.
13
ஏனெனில் முதற்பேறுகள் எல்லாம் என்னுடையவை. எகிப்தில் எல்லா முதற்பேறுகளையும் அழித்தபோது, நான் இஸ்ரயேலின் முதற்பேறான மனிதர்களையும், மிருகங்களின் தலையீற்றுகளையும் எனக்காகப் பிரித்தெடுத்தேன். அவை என்னுடையதாய் இருக்கவேண்டும். நான் யெகோவா” என்றார்.
14
சீனாய் பாலைவனத்தில் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது,
15
“நீ லேவியரைக் குடும்பங்களாகவும், வம்சங்களாகவும் கணக்கிடு. ஒரு மாதமும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய ஒவ்வொரு ஆணையும் கணக்கிடு” என்றார்.
16
யெகோவாவின் வார்த்தையினால் கட்டளையிடப்பட்டபடியே மோசே அவர்களைக் கணக்கிட்டான்.
17
லேவியின் மகன்களின் பெயர்களாவன: கெர்சோன், கோகாத், மெராரி,
18
கெர்சோன் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் லிப்னி, சீமேயி என்பவர்கள் ஆவர்.
19
கோகாத் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள் ஆவர்.
20
மெராரி வம்சத்தைச் சேர்ந்தவர்கள் மகேலி, மூஷி என்பவர்கள் ஆவர். தங்களுடைய குடும்பங்களின்படி லேவிய வம்சத்தினர் இவர்களே.
21
லிப்னீ வம்சமும், சீமேயி வம்சமும் கெர்சோனுக்கு உரியவர்கள். இவர்கள் கெர்சோனிய வம்சத்தினர்.
22
ஒரு மாதமும் அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எண்ணப்பட்ட ஆண்களின் தொகை 7,500 பேர்கள்.
23
கெர்சோனிய வம்சங்கள் இறைசமுகக் கூடாரத்திற்குப் பின்னே மேற்குப் பக்கத்தில் முகாமிட வேண்டியதாயிருந்தது.
24
லாயேலின் மகன் எலியாசாப் கெர்சோனிய குடும்பங்களின் தலைவனாய் இருந்தான்.
25
சபைக் கூடாரத்தில், இறைசமுகக் கூடாரத்திற்கும், அதன் கூடாரத்திற்கும், அதன் மூடு திரைகளுக்கும், சபைக்கூடார வாசல் திரைக்கும் கெர்சோனியரே பொறுப்பாயிருந்தார்கள்.
26
முற்றத்தின் திரைகளுக்கும், இறைசமுகக் கூடாரத்தையும், பலிபீடத்தையும் சுற்றியிருந்த முற்றத்தின் வாசல் திரைகளுக்கும், கயிறுகளுக்கும், அதன் பயன்பாட்டோடு சம்பந்தப்பட்ட எல்லாவற்றிற்கும் அவர்களே பொறுப்பாயிருந்தார்கள்.
27
அம்ராமிய வம்சமும், இத்சேயார் வம்சமும், எப்ரோனின் வம்சமும், ஊசியேலின் வம்சமும் கோகாத்திற்கு உரியவர்கள். இவர்கள் கோகாத்திய வம்சத்தினர் ஆவர்.
28
ஒரு மாதமும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய ஆண்களின் தொகை 8,600 பேர்கள். பரிசுத்த இடத்தின் பராமரிப்புக்கு கோகாத்தியர் பொறுப்பாயிருந்தார்கள்.
29
இறைசமுகக் கூடாரத்திற்குத் தெற்கு பக்கத்தில், கோகாத்திய வம்சங்கள் முகாமிட வேண்டியதாயிருந்தது.
30
ஊசியேலின் மகன் எலிசாபான், கோகாத்திய வம்சங்களின் தலைவனாய் இருந்தான்.
31
சாட்சிப்பெட்டி, மேஜை, விளக்குத்தாங்கி, பலிபீடங்கள், குருத்துவப் பணிக்கு பரிசுத்த இடத்தில் பயன்படுத்தும் பொருட்கள், திரை மற்றும் அவற்றின் பயன்பாட்டிற்குச் சம்பந்தப்பட்ட பொருட்கள் எல்லாவற்றிற்கும் அவர்களே பொறுப்பாயிருந்தார்கள்.
32
ஆசாரியனான ஆரோனின் மகன் எலெயாசார் லேவியரின் பிரதான தலைவனாக இருந்தான். பரிசுத்த இடத்தின் பராமரிப்புக்குப் பொறுப்பாயிருந்தவர்களுக்கு மேற்பார்வை செய்ய அவன் நியமிக்கப்பட்டான்.
33
மகேலிய வம்சமும், மூசிய வம்சமும் மெராரிக்கு உரியவர்கள். மெராரி வம்சத்தினர் இவர்களே.
34
ஒரு மாதமும் அதற்கு மேற்பட்டதுமான கணக்கிடப்பட்ட எல்லா ஆண்களின் தொகை 6,200 பேர்கள்.
35
அபியாயேலின் மகன் சூரியேல், மெராரி வம்சங்களின் குடும்பங்களுக்குத் தலைவனாயிருந்தான். இறைசமுகக் கூடாரத்தின் வடபகுதியில் அவர்கள் முகாமிட வேண்டியிருந்தது.
36
இறைசமுகக் கூடாரத்தின் சட்டப்பலகைகள், குறுக்குச் சட்டங்கள், கம்பங்கள், அடித்தளங்கள், அதற்குரிய எல்லா உபகரணங்களும், அதன் பயன்பாட்டோடு சம்பந்தப்பட்ட எல்லாவற்றின் பராமரிப்புக்காக மெராரியர் நியமிக்கப்பட்டார்கள்.
37
அதேபோல், அதைச் சுற்றியிருந்த முற்றத்தின் கம்பங்கள், அடித்தளங்கள், கூடார முளைகள், கயிறுகள் ஆகியவற்றின் பராமரிப்புக்காகவும் அவர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள்.
38
மோசேயும், ஆரோனும், அவன் மகன்களும், கூடாரத்தின் கிழக்கே சபைக் கூடாரத்தின் முன்னே, சூரிய உதயத்தை நோக்கி முகாமிட வேண்டியிருந்தது. இஸ்ரயேலரின் சார்பாகப் பரிசுத்த இடத்தின் பராமரிப்புக்கு அவர்களே பொறுப்பாய் இருந்தார்கள். பரிசுத்த இடத்தை நெருங்கும் வேறு எவனும் கொல்லப்படவேண்டும்.
39
யெகோவாவின் கட்டளைப்படியே மோசேயும், ஆரோனும் லேவியரைக் கணக்கிட்டார்கள். அவ்வாறு கணக்கிட்ட அவர்களுடைய வம்சங்களின்படி ஒரு மாதமும் அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய ஒவ்வொரு ஆண்களும் உட்பட மொத்தம் 22,000 பேர்கள்.
40
யெகோவா மோசேயிடம் சொன்னதாவது, “ஒரு மாதமும் அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய முதற்பேறான இஸ்ரயேலின் ஆண்கள் எல்லோரையும் கணக்கிட்டு, அவர்களின் பெயர்கள் அடங்கிய ஒரு பட்டியலை தயார்செய்ய வேண்டும்.
41
இஸ்ரயேலரின் முதற்பேறானவர்களுக்குப் பதிலாக லேவியரை எனக்காக எடுத்துக்கொள்ளவேண்டும். இஸ்ரயேலரின் கால்நடைகளின் தலையீற்றுகளுக்குப் பதிலாக லேவியரின் வளர்ப்பு மிருகங்களின் தலையீற்றுகளை எடுத்துக்கொள்ளவேண்டும். நான் யெகோவா” என்றார்.
42
யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே இஸ்ரயேலரின் முதற்பேறுகளைக் கணக்கிட்டான்.
43
பெயர் பதிவு செய்யப்பட்ட ஒரு மாதமும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய முதற்பேறான ஆண்களின் மொத்தத்தொகை 22,273 பேர்கள்.
Settings