मुख्य मजकुरावर जा
லேவியராகமம் 8:22-29

லேவியராகமம் 8:22-29

22
பின்பு மோசே அர்ப்பணிப்புக்கான மற்ற செம்மறியாட்டுக் கடாவைக் கொண்டுவந்து ஒப்படைத்தான். ஆரோனும் அவன் மகன்களும் அதன் தலையின்மேல் தங்கள் கைகளை வைத்தார்கள்.
23
மோசே அந்த செம்மறியாட்டுக் கடாவை வெட்டிக்கொன்று, அதன் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆரோனின் வலது காது மடலிலும், வலதுகை பெருவிரலிலும், வலதுகால் பெருவிரலிலும் பூசினான்.
24
ஆரோனுடைய மகன்களையும் மோசே முன்பாக அழைத்துவந்து, இரத்தத்தில் கொஞ்சத்தை எடுத்து அவர்களின் வலது காது மடல்களிலும், வலதுகை பெருவிரல்களிலும், வலதுகால் பெருவிரல்களிலும் பூசினான். பின்பு இரத்தத்தைப் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளித்தான்.
25
மோசே கொழுப்பையும், கொழுத்த வாலையும், உள்ளுறுப்புகளைச் சுற்றியுள்ள கொழுப்பு முழுவதையும், ஈரலை மூடியுள்ள கொழுப்பையும், இரண்டு சிறுநீரகங்களையும் அவற்றின் கொழுப்பையும் வலது தொடையையும் எடுத்தான்.
26
பின்பு அவன் யெகோவா முன்வைக்கப்பட்ட புளிப்பில்லாத அப்பங்களுள்ள கூடையிலிருந்து, ஒரு அடை அப்பத்தையும், எண்ணெய் சேர்த்துச் சுடப்பட்ட ஒரு அடை அப்பத்தையும், ஒரு அதிரசத்தையும் எடுத்து, அக்கொழுப்புகளின்மேலும், வலது தொடையின்மேலும் வைத்தான்.
27
அவை எல்லாவற்றையும் ஆரோனின் கைகளிலும், அவனுடைய மகன்களின் கைகளிலும் கொடுத்து யெகோவாவுக்கு முன்பாக அசைவாட்டும் காணிக்கையாக அசைவாட்டினான்.
28
மோசே அவைகளை அவர்களின் கைகளிலிருந்து எடுத்து, பலிபீடத்தில் இருந்த காணிக்கையின்மேல் அதை அர்ப்பணிப்பு காணிக்கையாக எரித்தான். அது யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக நெருப்பினால் செலுத்தப்பட்ட ஒரு காணிக்கையாக இருந்தது.
29
அர்ப்பணிப்பு காணிக்கைக்கான செம்மறியாட்டுக் கடாவில், மோசே தன் பங்கான நெஞ்சுப்பகுதியை எடுத்து, அதை யெகோவாவுக்கு முன்பாக அசைவாட்டும் காணிக்கையாக அசைவாட்டினான். இவற்றை யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே செய்தான்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options