எரேமியா 51:25-33
25
அழிக்கும் மலையே! முழு பூமியையும் அழிக்கும் மலையே! நான் உனக்கு விரோதமாகவே இருக்கிறேன் என்று யெகோவா அறிவிக்கிறார். என் கரத்தை உனக்கு விரோதமாய் நீட்டி, கற்பாறை வெடிப்புகளிலிருந்து உன்னை உருட்டிவிடுவேன்; நான் உன்னை ஒரு எரிந்து முடிந்த மலையாக ஆக்குவேன்.
26
மூலைக் கல்லுக்காக பாறாங்கல்லோ, அஸ்திபாரத்துக்காக வேறெந்தக் கல்லோ உன்னிலிருந்து எடுக்கப்படமாட்டாது. நீ என்றென்றைக்கும் பாழாகவே கிடப்பாய் என்று யெகோவா அறிவிக்கிறார்.
27
போர்க் கொடியை உயர்த்துங்கள். நாடுகளின் நடுவே எக்காளங்களை ஊதுங்கள். நாடுகளை பாபிலோனுக்கு விரோதமாகப் போருக்கு ஆயத்தப்படுத்துங்கள். அரராத், மின்னி, அஸ்கெனாஸ் ஆகிய அரசுகளை அவளுக்கு விரோதமாய் அழைப்பியுங்கள். அவளுக்கு விரோதமாக ஒரு தளபதியையும் நியமியுங்கள். வெட்டுக்கிளிகளின் கூட்டம்போல் குதிரைகளை அனுப்புங்கள்.
28
நாடுகளை அவளுக்கு விரோதமாகப் போருக்கு ஆயத்தப்படுத்துங்கள். மேதியா நாட்டின் அரசர்களையும், ஆளுநர்களையும், அதிகாரிகளையும், அவர்களுடைய ஆட்சியின் கீழிருக்கும் எல்லா நாடுகளையும் அவளுக்கு விரோதமாக ஆயத்தப்படுத்துங்கள்.
29
நாடானது நடுங்கித் துடிக்கிறது. ஏனெனில் யெகோவாவின் நோக்கங்கள் பாபிலோனுக்கெதிராய் நிலைநிற்கின்றன. ஒருவரும் அங்கு குடியிருக்க முடியாதபடி, பாபிலோன் பாழாக்கப்படும்
30
பாபிலோனின் இராணுவவீரர் போரிடுவதை நிறுத்திவிட்டு, அரண்களுக்குள்ளேயே தங்கியிருக்கிறார்கள். அவர்களின் பெலன் குன்றிப் போயிற்று. அவர்கள் பெண்களைப் போலாகிவிட்டார்கள். அவளின் குடியிருப்புகள் எரிக்கப்பட்டன. கதவுகளின் தாழ்ப்பாள்களும் உடைக்கப்பட்டன.
31
பட்டணம் முழுவதும் கைப்பற்றப்பட்டுவிட்டதை, பாபிலோன் அரசனுக்கு அறிவிப்பதற்காக, தூதுவனுக்குப் பின் தூதுவனும், அஞ்சற்காரனுக்குப் பின் அஞ்சற்காரனும் தொடர்ந்து செல்கிறார்கள்.
32
ஆற்றின் துறைமுகங்களும் பிடிக்கப்பட்டன. புதர்களுக்கும் நெருப்பு வைக்கப்பட்டன. போர்வீரரும் திகிலடைந்தார்கள்.
33
இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: பாபிலோன் மகள் சூடடிக்கும் காலத்தில் மிதிக்கப்படும் களத்துக்கு ஒப்பாயிருக்கிறாள். அவளை அறுவடை செய்யும் காலம் விரைவில் வரும்.
Settings