எரேமியா 5:10-19
10
“திராட்சைத் தோட்ட மதில்கள் மேலேறிப்போய் அவைகளைப் பாழ்படுத்து, ஆனாலும் அவைகளை முற்றிலும் அழிக்கவேண்டாம். அவைகளின் கிளைகளை வெட்டிவிடு. ஏனெனில் இந்த மக்கள் யெகோவாவுக்கு உரியவர்களல்ல.
11
இஸ்ரயேல் குடும்பமும், யூதா குடும்பமும் முழுவதும் எனக்கு உண்மையற்றவர்களாய் இருந்தார்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
12
அவர்கள் யெகோவாவைப் பற்றிப் பொய் உரைத்தார்கள்; அவர்கள், “அவர் எங்களுக்கு ஒன்றும் செய்யமாட்டார். எங்களுக்கு ஒரு தீங்கும் வராது; நாங்கள் வாளையோ பஞ்சத்தையோ ஒருபோதும் காணமாட்டோம்.
13
இறைவாக்கினர் வெறும் காற்றுதானே, அவர்களிடத்தில் இறைவனின் வார்த்தை இல்லை; ஆகவே அவர்கள் சொல்வதெதுவோ அது அவர்களுக்கே செய்யப்படட்டும்” என்று சொன்னார்கள்.
14
ஆகையால் சேனைகளின் இறைவனாகிய யெகோவா சொல்வதாவது: “இவர்கள் இந்த வார்த்தைகளைப் பேசியபடியால், உன் வாயில் உள்ள என் வார்த்தைகளை நெருப்பாக்குவேன். இந்த மக்களை அந்த நெருப்பு எரித்துப்போடும் விறகாக்குவேன்.
15
இஸ்ரயேல் குடும்பமே, உங்களுக்கெதிராக தூரத்திலிருந்து ஒரு தேசத்தாரைக் கொண்டுவருகிறேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். அவர்கள் முற்காலத்திலிருந்து அழியாது நிலைத்து வாழுகின்ற ஒரு நாடு. அவர்கள் நீங்கள் அறியாத மொழியையும், நீங்கள் விளங்கிக்கொள்ளாத பேச்சையும் பேசுகிறவர்கள்.
16
அவர்களுடைய அம்புக்கூடுகள் திறந்த சவக்குழியைப் போன்றவை. அவர்கள் யாவரும் வலிமைமிக்க போர்வீரர்கள்.
17
அவர்கள் உங்களுடைய அறுவடைகளையும், உணவையும் விழுங்குவார்கள். உங்கள் மகன்களையும், மகள்களையும் விழுங்குவார்கள். அவர்கள் உங்கள் ஆட்டு மந்தைகளையும், மாட்டு மந்தைகளையும் விழுங்குவார்கள். உங்கள் திராட்சைக் கொடிகளையும், அத்திமரங்களையும் விழுங்குவார்கள். நீங்கள் நம்பிக்கை வைத்திருக்கிற அரணான பட்டணங்களையும் வாளினால் அழிப்பார்கள்.
18
ஆயினும் அந்த நாட்களில் உங்களை முற்றிலும் அழிக்கமாட்டேன் என்று யெகோவா அறிவிக்கிறார்.
19
மேலும், “எங்கள் இறைவனாகிய யெகோவா எங்களுக்கு ஏன் இவைகளை எல்லாம் செய்தார்” என்று, நீங்கள் கேட்கும்போது, “நீங்கள் என்னைக் கைவிட்டு உங்கள் சொந்த நாட்டிலே அந்நிய தெய்வங்களுக்குப் பணிசெய்தீர்கள். ஆகவே நீங்கள் இப்பொழுது உங்களுக்குரியதல்லாத நாட்டில் அந்நியருக்குப் பணிசெய்வீர்கள் என்று அவர்களுக்குச் சொல்.
Settings