எரேமியா 32:1-8
1
யூதாவின் அரசன் சிதேக்கியா ஆட்சி செய்த பத்தாம் வருடம், எரேமியாவுக்கு யெகோவாவின் வார்த்தை வந்தது: இது நேபுகாத்நேச்சாரின் பதினெட்டாம் வருடமாய் இருந்தது.
2
அவ்வேளையில் பாபிலோன் அரசனுடைய படை எருசலேமை முற்றுகையிட்டுக் கொண்டிருந்தது. இறைவாக்கினன் எரேமியா யூதா அரசர்களின் அரண்மனையிலிருந்த காவற்கூட முற்றத்தில் சிறைவைக்கப்பட்டிருந்தான்.
3
அவ்வேளையில் யூதாவின் அரசனாகிய சிதேக்கியா எரேமியாவை சிறையில் அடைத்துச் சொன்னதாவது. “நீ ஏன் இவ்வாறு இறைவாக்கு உரைக்கிறாய்? யெகோவா சொல்வது இதுவே: நான் இப்பட்டணத்தைப் பாபிலோன் அரசனின் கையில் கொடுக்கப்போகிறேன்; அவன் அதைக் கைப்பற்றுவான்.
4
யூதாவின் அரசன் சிதேக்கியா பாபிலோனியருடைய கையிலிருந்து தப்பிப்போகமாட்டான். பாபிலோனின் அரசனிடம் நிச்சயம் ஒப்படைக்கப்படுவான். சிதேக்கியா பாபிலோன் அரசனுடன் நேர்முகமாகப் பேசி தன் கண்களால் அவனைக் காண்பான்.
5
அவன் சிதேக்கியாவை பாபிலோனுக்குக் கொண்டுபோவான்; நான் அவனுக்கு நடவடிக்கை எடுக்கும்வரை அங்கேயே தங்கியிருப்பான். எனவே நீயோ பாபிலோனியருடன் போரிட்டால் நிச்சயம் வெற்றிபெறவே மாட்டாய் என்று யெகோவா சொல்கிறார் என்கிறாயே” என்றான்.
6
சிறையிருந்த காலத்தில் எரேமியா சொன்னதாவது, “யெகோவாவினுடைய வார்த்தை எனக்கு வந்தது.
7
அவர் என்னிடம், சல்லூமின் மகனான உனது ஒன்றுவிட்ட சகோதரன் அனாமெயேல் உன்னிடம் வரப்போகிறான். அவன் வந்து, ‘ஆனதோத்திலிருக்கும் என் வயலை நீ உனக்கு வாங்கிக்கொள். நீ நெருங்கிய உறவினனானபடியால் அதை வாங்கும் உரிமையும், கடமையும் உன்னுடையதே’ என்று சொல்வான் என்று சொன்னார்” என்றான்.
8
“பின்பு யெகோவா கூறியபடியே, என் ஒன்றுவிட்ட சகோதரன் அனாமெயேல் காவல் முற்றத்திற்கு என்னிடம் வந்து, ‘பென்யமீன் நாட்டிலிருக்கும் ஆனதோத்திலுள்ள என்னுடைய வயலை நீ வாங்கு. அதை வைத்துக்கொள்ளவும், மீட்டுக்கொள்ளவும் உனக்கே உரிமையுண்டு. அதனால் உனக்காக வாங்கிக்கொள்’ என்றான். “அப்பொழுது அது யெகோவாவின் வார்த்தை என்பதை நான் அறிந்துகொண்டேன்.
Settings