எரேமியா 29:15-23
15
“யெகோவா எங்களுக்குப் பாபிலோனிலும் இறைவாக்கு உரைப்போரை எழுப்பியிருக்கிறார்” என்று நீங்கள் சொல்லலாம்.
16
ஆனால் யெகோவா கூறுவதாவது: தாவீதின் அரியணையிலிருக்கிற அரசனைக் குறித்தும், உங்களுடன் நாடுகடத்தப்படாமல் இந்த பட்டணத்திலேயே தங்கியிருக்கும் உங்கள் நாட்டினரான எல்லா மக்களைக் குறித்தும்
17
சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: “ஆம், நான் வாளையும், பஞ்சத்தையும், கொள்ளைநோயையும் அவர்களுக்கு விரோதமாக அனுப்புவேன்; அத்துடன் சாப்பிட முடியாத அளவுக்கு அழுகிப்போன கெட்ட அத்திப்பழங்களைப் போலவே அவர்களை ஆக்குவேன்.
18
நான் அவர்களைப் பிடிப்பதற்கு வாளுடனும், பஞ்சத்துடனும், கொள்ளைநோயுடனும் பின்தொடர்வேன். அவர்களை பூமியின் எல்லா அரசுகளுக்கும் அருவருப்பாகும்படி செய்வேன். மேலும் நான் அவர்களைத் துரத்துகிற எல்லா நாடுகளின் மத்தியிலும் அவர்களை சாபத்திற்கும், பயங்கரத்திற்கும், பழிக்கும், நிந்தைக்கும் உள்ளாக்குவேன்.
19
ஏனெனில் அவர்கள் என் வார்த்தைகளுக்குச் செவிகொடுக்கவில்லை” என்று யெகோவா அறிவிக்கிறார். “நான் என் ஊழியக்காரர்களான இறைவாக்கினர்மூலம் திரும்பத்திரும்ப அவர்களுக்கு அனுப்பிய வார்த்தைகளுக்கு அவர்கள் செவிகொடுக்கவில்லை. நாடுகடத்தப்பட்டவர்களாகிய நீங்களுங்கூட, அதற்குச் செவிகொடுக்கவில்லை” என்று யெகோவா அறிவிக்கிறார்.
20
ஆகையால் எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு என்னால் நாடுகடத்தப்பட்ட நீங்கள் எல்லோரும், யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள்.
21
கோலாயாவின் மகன் ஆகாபைக் குறித்தும், மாசெயாவின் மகன் சிதேக்கியாவைக் குறித்தும் இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: “இவர்கள் என் பெயரில் உங்களுக்குப் பொய்களை இறைவாக்காகச் சொல்கிறார்கள். நான் அவர்களைப் பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரிடம் ஒப்புக்கொடுப்பேன். அவன் அவர்களை உங்கள் கண்களுக்கு முன்பாகக் கொன்றுபோடுவான்.
22
இந்தப் பயங்கர செயலின் நிமித்தம் யூதாவிலிருந்து நாடுகடத்தப்பட்டு, பாபிலோனில் வசிப்போர், ‘பாபிலோன் அரசன் நெருப்பிலே சுட்டெரித்த சிதேக்கியாவைப்போலவும், ஆகாபைப்போலவும் யெகோவா உங்களை நடத்தட்டும்’ என்று சாபமான வார்த்தையாகச் சொல்வார்கள்.
23
ஏனெனில் இந்த மனிதர் இஸ்ரயேலில் மோசமான காரியங்களைச் செய்திருக்கிறார்கள்; தங்கள் அயலவரின் மனைவியருடன் விபசாரம் செய்திருக்கிறார்கள். நான் அவர்களுக்குச் செய்யும்படி சொல்லாதவற்றை, என் பெயரினால் பொய்களாகப் பேசியிருக்கிறார்கள். நான் அதை அறிவேன். அதற்கு நானே சாட்சி” என்று யெகோவா அறிவிக்கிறார்.
Settings