எரேமியா 2:29-37
29
“எனக்கெதிராக ஏன் குற்றம் சுமத்துகிறீர்கள்? நீங்கள் எல்லோரும் எனக்கெதிராக கலகம் செய்தீர்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
30
“உன் மக்களை நான் வீணாய் தண்டித்தேன்; நான் அவர்களை திருத்தியபோது அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. பசிகொண்ட ஒரு சிங்கத்தைப்போல உங்களுடைய வாளே உங்கள் இறைவாக்கினரை இரையாக்கி விழுங்கியது.
31
“இந்தச் சந்ததியிலுள்ள நீங்கள் யெகோவாவின் வார்த்தையைக் கவனியுங்கள்: “நான் இஸ்ரயேலுக்கு ஒரு பாலைவனமாய் இருந்தேனோ? அவர்களுக்கு நான் காரிருள் நிறைந்த நாடாக இருந்தேனோ? ‘நாங்கள் சுற்றித்திரிய சுதந்திரமுடையவர்கள்; இனி ஒருபோதும் உம்மிடம் வரமாட்டோம்’ என்று ஏன் என்னுடைய மக்கள் சொல்கிறார்கள்?
32
ஒரு இளம்பெண் தன் நகைகளை மறந்துவிடுவாளோ, ஒரு மணமகள் தனது திருமண ஆடைகளை மறந்துவிடுவாளோ? ஆயினும் என் மக்களோ எண்ணற்ற நாட்களாய் என்னை மறந்தார்கள்.
33
நீ காதலர்களைத் தேடுவதில் எவ்வளவு கைதேர்ந்தவள்! பெண்களில் மிகவும் கேடானவர்களும் உன்னுடைய வழிகளிலிருந்து கற்றுக்கொள்ளலாம்.
34
உன் உடைகளிலே குற்றமற்ற ஏழைகளின் உயிர் இரத்தத்தை மனிதர் காண்கிறார்கள். இது, உன் வீட்டை அவர்கள் கன்னமிடும்போது சிந்தப்பட்ட இரத்தமல்ல. இப்படியெல்லாம் இருக்கும்போதும்,
35
நீ, ‘நான் குற்றமற்றவள்; அவரும் என்னுடன் கோபமாயிருக்கவில்லை’ என்று சொல்கிறாய். ஆனால், ‘நான் பாவம் செய்யவில்லை’ என்று நீ சொல்வதால் நான் உன்னை நியாயந்தீர்பேன்.
36
நீ உன் வழிகளை மாற்றிக்கொண்டு, அங்குமிங்குமாக ஏன் திரிகிறாய்? அசீரியாவினால் ஏமாற்றமடைந்ததுபோல, எகிப்தினாலும் ஏமாற்றமடைவாய்.
37
உன் தலையில் கைகளை வைத்துக்கொண்டு, அவ்விடத்தையும்விட்டுப் போவாய். ஏனெனில் நீ நம்பியிருக்கிறவர்களை யெகோவா புறக்கணித்துவிட்டார்; அவர்கள் உனக்கு ஒரு உதவியும் செய்யமாட்டார்கள்.
Settings