Skip to content
ஏசாயா 49:14-23

ஏசாயா 49:14-23

14
ஆனால் சீயோனோ, “யெகோவா என்னைக் கைவிட்டுவிட்டார்; யெகோவா என்னை மறந்துவிட்டார்” என்கிறது.
15
“தான் பாலூட்டும் தன்னுடைய குழந்தையை எந்தத் தாயும் மறந்துபோவாளோ? கருவில் உருவான தனது பிள்ளைக்கு அவள் கருணை காட்டாதிருப்பாளோ? அப்படி அவள் மறந்தாலுங்கூட, நான் உன்னை மறப்பதில்லை.
16
இதோ, நான் என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்பொழுதும் என் கண்முன் இருக்கின்றன.
17
உனது பிள்ளைகள் விரைந்து திரும்புவார்கள், உன்னை அழித்தவர்கள் உன்னைவிட்டு விலகிப் போவார்கள்.
18
உன் கண்களை உயர்த்திச் சுற்றிலும் பார்; உனது பிள்ளைகள் யாவரும் ஒன்றுகூடி உன்னிடம் வருகிறார்கள். நான் வாழ்வது நிச்சயமாய் இருப்பதுபோலவே, நீ அவர்களையெல்லாம் நகைகளாய் அணிந்துகொள்வாய்; மணமகளைப்போல் அவர்களை அணிந்துகொள்வாய்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
19
“நீ அழிக்கப்பட்டு பாழாக்கப்பட்டாய், உனது நாடு பாழாய் விடப்பட்டது. ஆயினும் இப்பொழுதோ உன்னில் குடியிருக்கிறவர்கள் வாழ்வதற்கு இடம் போதாதபடி நீ சிறிதாய் இருப்பாய். உன்னை விழுங்கியவர்களும் உன்னைவிட்டுத் தூரமாய் போவார்கள்.
20
உன் இழப்பில் துயருற்ற நாட்களில் உனக்குப் பிறந்த பிள்ளைகள் உன்னைப் பார்த்து, ‘இந்த இடம் எங்களுக்கு மிகச் சிறிதாக இருக்கிறது; நாங்கள் வசிப்பதற்கு போதிய இடம் தாரும்’ என உன் செவிகள் கேட்கும்படி சொல்லுவார்கள்.
21
அப்பொழுது நீ உனது உள்ளத்தில் ‘எனக்கு இந்தப் பிள்ளைகளைக் கொடுத்தது யார்? நான் துயருற்றவளாகவும் மலடியாகவும் இருந்தேன்; நான் நாடுகடத்தப்பட்டவளாகவும், புறக்கணிக்கப்பட்டவளாகவும் இருந்தேன். யார் இந்தப் பிள்ளைகளை வளர்த்தெடுத்தார்கள்? இதோ நான் தனித்தவளாயிருந்தேனே! ஆனால் இவர்கள் எங்கிருந்து வந்தார்கள்?’ என்று சொல்லிக்கொள்வாய்.”
22
ஆண்டவராகிய யெகோவா சொல்வது இதுவே: “இதோ, நான் பிற நாட்டவர்களை கைகாட்டி அழைப்பேன், மக்கள் கூட்டங்களுக்கு எனது கொடியை ஏற்றுவேன். அவர்கள் உங்கள் மகன்களைத் தங்கள் கைகளில் கொண்டுவருவார்கள்; மகள்களையும் தங்கள் தோள்களில் சுமந்து கொண்டுவருவார்கள்.
23
அரசர்கள் உங்களுக்கு வளர்ப்புத் தந்தைகளாய் இருப்பார்கள்; அரசிகள் உங்களுக்கு வளர்ப்புத் தாய்களாய் இருப்பார்கள். அவர்கள் உங்களுக்கு முன்பாகத் தரையில் முகங்குப்புற விழுந்து வணங்குவார்கள்; அவர்கள் உங்கள் பாதங்களிலுள்ள புழுதியை நக்குவார்கள். அப்பொழுது நீங்கள், நானே யெகோவா என்பதை அறிந்துகொள்வீர்கள்; என்னை நம்பியிருப்பவர்கள் வெட்கப்பட்டு போகமாட்டார்கள்” என்கிறார்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options