ஏசாயா 16:6-12
6
மோவாபியரின் மேட்டிமையைக் குறித்து கேள்விப்பட்டோம். அவர்கள் ஆணவம் பெரிதே! அகந்தையும், பெருமையும், இறுமாப்பும் உடையவர்கள்; அவர்களுடைய தற்புகழ்ச்சிகள் எல்லாம் வெறுமையானவையே.
7
ஆகவே மோவாபியர் புலம்புகிறார்கள், அவர்கள் மோவாபுக்காக ஒன்றுசேர்ந்து புலம்புகிறார்கள். கீர்ஹேரேஸேத்தின் திராட்சை அடைகளுக்காகத் துக்கத்துடன் அழுது புலம்புகிறார்கள்.
8
எஸ்போன் வயல்களும் சிப்மாவின் திராட்சைக் கொடிகளும் வாடுகின்றன. நாடுகளின் ஆளுநர்கள் தெரிந்தெடுக்கப்பட்ட திராட்சைக் கொடிகளை மிதித்துப் போட்டார்கள். இவை ஒருகாலத்தில் யாசேர்வரை நீண்டு பாலைவனத்தை நோக்கிப் பரந்திருந்தன. அவைகளின் துளிர்கள் வெளியே படர்ந்து கடல்வரை சென்றிருந்தன.
9
சிப்மாவின் திராட்சைக் கொடிகளுக்காக யாசேர் அழுவதுபோல் நானும் அழுகிறேன். எஸ்போனே, எலெயாலேயே, நான் உன்னை என் கண்ணீரால் நனைக்கிறேன்! உனது பழங்கள் விளைந்து முதிரும் காலத்திலும், உனது அறுவடையின் காலத்திலும் இருக்கும் மகிழ்ச்சியின் சத்தம் அடங்கிற்று.
10
பழத்தோட்டங்களிலிருந்த சந்தோஷமும் மகிழ்ச்சியும் நீக்கப்பட்டு விட்டன; திராட்சைத் தோட்டங்களில் ஒருவரும் பாடுவதுமில்லை, சத்தமிடுவதுமில்லை; ஆலைகளில் இரசத்துக்காக பழங்களை மிதிப்பவர்களுமில்லை, ஏனெனில் நானே பழம் பிழிவோரின் பூரிப்பை ஓயப்பண்ணினேன்.
11
மோவாபுக்காக என் இருதயமும், கிர் ஹெரெஸிற்காக என் உள்ளமும் யாழின் தொனியைப்போல் புலம்புகின்றன.
12
மோவாப் தனது மேடையிலுள்ள தெய்வங்களிடம் சென்று களைப்புற்றும், கோயிலுக்குப்போய் மன்றாடியும் அவளுக்கு ஒரு பயனும் இல்லை.
Settings