ஆகாய் 1:1-11
1
பெர்சிய அரசன் தரியுவின் ஆட்சியின் இரண்டாம் வருடம், ஆறாம் மாதம் முதலாம் நாள், இறைவாக்கினன் ஆகாய் மூலம் இறைவாக்கு வந்தது. அது செயல்தியேலின் மகன் யூதாவின் ஆளுநர் செருபாபேலுக்கும், யோசதாக்கின் மகனான தலைமை ஆசாரியன் யோசுவாவுக்கும் வந்த யெகோவாவின் வார்த்தை:
2
சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “யெகோவாவின் ஆலயத்தை மறுபடியும் கட்டியெழுப்பும் காலம் இன்னும் வரவில்லை” என இந்த மக்கள் சொல்கிறார்கள்.
3
அப்பொழுது இறைவாக்கினன் ஆகாய் மூலம் யெகோவாவின் வார்த்தை வந்தது.
4
“என் ஆலயம் இடிபாடாய்க் கிடக்கையில் நீங்கள் மட்டும் உங்கள் அலங்காரமான வீடுகளில் வாழும் காலமா இது?”
5
இப்போதும் சேனைகளின் யெகோவா சொல்கிறதாவது: “உங்களுக்கு நடப்பதைப் பற்றி கவனமாய் யோசித்துப் பாருங்கள்.
6
நீங்கள் அதிகமாய் விதைத்திருக்கிறீர்கள், மிகக் கொஞ்சமாய் அறுவடை செய்கிறீர்கள்; நீங்கள் சாப்பிடுகிறீர்கள், ஆனால் ஒருபோதும் திருப்தியடைவதில்லை; நீங்கள் குடிக்கிறீர்கள், ஒருபோதும் உங்கள் தாகமோ தீருவதில்லை. உடைகளை உடுத்திக்கொள்கிறீர்கள், என்றாலும் குளிர் உங்களைவிட்டுப் போவதில்லை. நீங்கள் பணத்தைச் சம்பாதிக்கிறீர்கள், ஆனால் அதை ஓட்டையான பைகளிலேயே போடுகிறீர்கள்.”
7
சேனைகளின் யெகோவா சொல்கிறதாவது: “உங்கள் நடத்தையைப்பற்றி கவனமாய் யோசித்துப் பாருங்கள்.
8
மலைகளில் ஏறிப்போய் மரங்களை வெட்டிவந்து ஆலயத்தை கட்டுங்கள், அதில் நான் மகிழ்ந்து, நான் கனம்பண்ணப்படுவேன்” என்று யெகோவா சொல்கிறார்.
9
நீங்கள் எதிர்ப்பார்த்ததோ அதிகமான அறுவடை, ஆனால் அது மிகக் கொஞ்சமாக மாறிற்று. நீங்கள் வீட்டிற்கு கொண்டு வந்ததையும் நான் ஊதிவிட்டேன். ஏனென்றால் என் ஆலயம் பாழடைந்து கிடக்கையில் நீங்கள் உங்கள் வீடுகளைப் பற்றியே அதிக கருத்தாய் இருக்கிறீர்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்கிறார்.
10
ஆகவே உங்களின் அலட்சியத்தால் வானம் பனியைப் பெய்யாமலும், நிலம் விளைச்சலை கொடுக்காமலும் போயிற்று.
11
நான் வயலின்மேலும், மலைகளின்மேலும், தானியத்தின்மேலும், புதுத் திராட்சை இரசத்தின்மேலும், எண்ணெயின்மேலும், பூமியில் விளையும் எல்லாவற்றின்மேலும், மனிதர்மேலும், மந்தைகள்மேலும், உங்கள் கைகளின் முயற்சிகள்மேலும் வறட்சியை வருவித்தேன்.
Settings