எசேக்கியேல் 36:22-31
22
“ஆதலால், இஸ்ரயேல் குடும்பத்திற்கு நீ கூறவேண்டியதாவது: ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: இஸ்ரயேல் குடும்பத்தாரே! இக்காரியங்களை நான் செய்யப்போவது உங்கள் நிமித்தமல்ல, என் பரிசுத்த பெயரின் நிமித்தமே. என் பெயரையே நீங்கள் போன நாடுகளுக்குள் எல்லாம் அசுத்தப்படுத்தினீர்கள்.
23
நாடுகளின் மத்தியில் அசுத்தப்படுத்தப்பட்டதும், அவர்கள் மத்தியில் நீங்கள் அசுத்தப்படுத்தியதுமான என் மகத்துவமான பெயரின் பரிசுத்தத்தை நான் காண்பிப்பேன். அவர்கள் கண்களுக்கு முன்பாக, உங்கள் மூலமாக நான் என்னைப் பரிசுத்தராய்க் காண்பிப்பேன். அப்பொழுது நானே யெகோவா என்பதை நாடுகள் அறிந்துகொள்ளும் என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
24
“ ‘நான் உங்களை நாடுகளிலிருந்து வெளியே கொண்டுவருவேன். எல்லா நாடுகளிருந்தும் உங்களை நான் கூட்டிச்சேர்த்து, மீண்டும் உங்கள் சொந்த நாட்டுக்குக் கொண்டுவருவேன்.
25
சுத்தமான தண்ணீரை நான் உங்கள்மீது தெளிப்பேன். நீங்கள் சுத்தமடைவீர்கள். உங்கள் எல்லா அசுத்தங்களிலிருந்தும், உங்கள் சகல விக்கிரகங்களிலிருந்தும் நான் உங்களைச் சுத்தமாக்குவேன்.
26
நான் உங்களுக்குப் புதியதோர் இருதயத்தைக் கொடுப்பேன். ஒரு புதிய ஆவியையும் கொடுப்பேன். கல்லான உங்கள் இருதயத்தை நீக்கிவிட்டு, சதையான இருதயத்தைக் கொடுப்பேன்.
27
மேலும் நான் என் ஆவியானவரை உங்களுக்குள் இருக்கும்படி செய்து, நீங்கள் என் சட்டங்களைக் கைக்கொள்ளக் கவனமாயிருக்கவும், என் விதிமுறைகளைப் பின்பற்றவும் செய்வேன்.
28
உங்கள் முற்பிதாக்களுக்கு நான் கொடுத்த நாட்டில் நீங்கள் வசிப்பீர்கள். நீங்கள் என் மக்களாயிருப்பீர்கள், நான் உங்கள் இறைவனாயிருப்பேன்.
29
உங்களுடைய சகல அசுத்தங்களிலிருந்தும் உங்களை நான் விடுவிப்பேன். நான் தானியத்தை விளையச்செய்து, பெருகப்பண்ணி, உங்கள்மீது பஞ்சம் வராதிருக்கப்பண்ணுவேன்.
30
நீங்கள் நாடுகளின் மத்தியில் இனியொருபோதும் பஞ்சத்தினால் வாடும் அவமானத்திற்குள்ளாகாதபடி, மரங்களின் பழங்களையும், வயலின் விளைச்சல்களையும் பெருகப்பண்ணுவேன்.
31
அப்பொழுது நீங்கள் உங்கள் பழைய தீயவழிகளையும், கொடிய செயல்களையும் நினைவுகூர்ந்து, உங்கள் பாவங்களுக்காகவும் அருவருக்கத்தக்க செயல்களுக்காகவும் உங்களை வெறுப்பீர்கள்.
Settings