எசேக்கியேல் 31:3-9
3
அசீரியாவைப் பற்றிச் சிந்தித்துப்பார், அது ஒருகாலத்தில் லெபனோனின் கேதுரு மரத்தைப்போல் அழகிய கிளைகளுடன் காட்டுக்கு மேலாக உயர்ந்து வளர்ந்தது. செறிந்த தழைகளுக்கு மேலாய் அதன் நுனி இருந்தது.
4
தண்ணீர்கள் அதை செழிக்கச் செய்தன, ஆழமான நீரூற்றுக்கள் அதை உயரமாக வளரச் செய்தன; அதன் அடிமரங்களைச் சுற்றி நீரோடைகள் பாய்ந்தன; தண்ணீர்கள் தம் வாய்க்கால்களை வெளிமரங்கள் யாவற்றிற்கும் பரவவிட்டன.
5
அதனால் அது, வெளியின் மரங்கள் எல்லாவற்றையும்விட, உயர்ந்து நின்றது: தண்ணீர் நிறைவாக இருந்தபடியால், அதன் கொப்புகள் அதிகரித்தன: அதன் கிளைகள் நீண்டு, படர்ந்து, வளர்ந்தன.
6
ஆகாயத்துப் பறவைகள் அனைத்தும் அதின் கிளைகளில் கூடுகட்டின; வெளியின் மிருகங்களெல்லாம் அதன் கிளைகளின்கீழ் குட்டிகளை ஈன்றன. பெரிதான பல நாடுகளும் அதன் நிழலில் குடியிருந்தன.
7
படர்ந்திருந்த அதன் கொப்புகளினால் அது அழகில் மாட்சிமையடைந்திருந்தது. ஏனெனில், அதன் வேர்கள் கீழிறங்கி நிறைவான தண்ணீருக்குள் சென்றிருந்தன.
8
இறைவனின் தோட்டத்தின் கேதுருக்கள்கூட அதற்கு இணையாய் இருக்கமுடியவில்லை. தேவதாரு மரங்களும் அதின் கிளைகளுக்குச் சமானமாயிருக்க முடியவில்லை. அர்மோன் மரங்களையும் அதன் கொப்புகளுக்கு இணைகூற இயலாது. இறைவனின் தோட்டத்து எந்த மரமும் அழகில் அதற்கு நிகராகாது.
9
இறைவனின் தோட்டமான ஏதேனிலுள்ள எல்லா மரங்களும் அதன்மேல் பொறாமை கொள்ளத்தக்கதாக நிறைவான கொப்புகளால் அதை நான் அழகு செய்தேன்.
Settings