Skip to content
எசேக்கியேல் 14:13-23

எசேக்கியேல் 14:13-23

13
“மனுபுத்திரனே, ஒரு நாடு எனக்கெதிராய் பாவம் செய்து உண்மையற்றதாய் இருந்தால், நான் அதற்கு விரோதமாக என் கரத்தை நீட்டுவேன். அதற்கு உணவளிப்பதை நிறுத்தி, பஞ்சத்தை அனுப்பி அதன் மக்களையும் அவர்களுடைய மிருகங்களையும் கொல்லுவேன்.
14
அப்பொழுது அங்கே நோவா, தானியேல், யோபு ஆகிய மூவரும் இருந்தாலுங்கூட, அவர்கள் தங்கள் நீதியின் நிமித்தம் தங்களை மட்டுமே தப்புவித்துக்கொள்ளக்கூடும் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
15
“அல்லது, நான் காட்டு மிருகங்களை அந்த நாட்டின் வழியாக அனுப்பினால், அவை அந்த நாட்டிலுள்ளவர்களைப் பிள்ளையற்றவர்களாக்கும். ஒருவரும் அந்த நாட்டின் வழியாகப்போக இயலாதபடி, அது மிருகங்களின் நிமித்தம் பாழாய்ப்போகும்.
16
நான் வாழ்வது நிச்சயம்போலவே, அங்கு அவ்வேளையில் இவர்கள் மூவரும் இருந்தாலுங்கூட, அவர்களால் தம் சொந்த மகன்களையோ மகள்களையோ தப்புவிக்கவும் முடியாது. அவர்கள் மாத்திரமே தப்புவார்கள். ஆனால் நாடோ பாழாய்ப்போகும் என்பதும் நிச்சயம் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
17
“இல்லையெனில், நான் அந்நாட்டிற்கு எதிராக வாளை வரச்செய்து, ‘வாள் நாட்டை ஊடுருவிச் செல்லட்டும்’ என்று சொல்வேனாகில், நான் அங்குள்ள மக்களையும் அவர்களுடைய மிருகங்களையும் கொல்லுவேன்.
18
நான் வாழ்வது நிச்சயம்போலவே, நான் அப்படிச் செய்தால், இந்த மூவரும் அங்கு இருந்தாலுங்கூட அவர்களால் தங்கள் சொந்த மகன்களையோ, மகள்களையோ தப்புவிக்கவும் முடியாது. அவர்கள் மாத்திரமே தப்புவார்கள் என்பதும் நிச்சயம் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
19
“இல்லையெனில், நான் அந்நாட்டில் கொள்ளைநோயை அனுப்பி, நான் எனது கோபத்தினால் இரத்தம் சிந்தப்பண்ணி, அங்குள்ள மனிதரையும், அவர்களுடைய மிருகங்களையும் கொலைசெய்வேனாகில்,
20
நான் வாழ்வது நிச்சயம்போலவே, நோவா, தானியேல், யோபு ஆகிய அந்த மூவரும் அங்கிருந்தாலுங்கூட, அவர்களால் தங்கள் மகனையோ மகளையோ தப்புவிக்கவும் முடியாது. தங்கள் நீதியினால் அவர்கள் மட்டுமே தப்புவார்கள் என்பதும் நிச்சயம் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
21
“ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. நான் எருசலேமுக்கு விரோதமாக மனிதரையும் அவர்களுடைய மிருகங்களையும் கொல்லுவதற்கு வாள், பஞ்சம், காட்டுமிருகம், கொள்ளைநோய் ஆகிய நான்கு பயங்கரத் தீர்ப்புகளையும் அனுப்பும்போது, அவைகளிலும் இது எவ்வளவு அதிக கொடியதாயிருக்கும்!
22
அப்படியிருந்தும், அங்கிருந்து தப்பிப்பிழைத்த சில மகன்களும், மகள்களும், வெளியே கொண்டுவரப்படுவார்கள். அவர்கள் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டு உங்களிடத்திற்கே வருவார்கள். அவர்களுடைய ஒழுக்கக்கேட்டையும் அவர்களுடைய நடத்தையையும் நீங்கள் காணும்போது எருசலேமின்மீது நான் வரப்பண்ணின தீங்கையும், அதன்மீது வரப்பண்ணின ஒவ்வொரு அழிவையும் குறித்து ஆறுதல் அடைவீர்கள்.
23
நீங்கள் அவர்களுடைய ஒழுக்கக்கேட்டையும் நடத்தையையும் காணும்போது, நான் காரணமில்லாமால் ஒன்றும் செய்யவில்லை என்று அறிவீர்கள். அப்பொழுது நீங்கள் ஆறுதல் அடைவீர்கள் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.”
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options