எசேக்கியேல் 13:3-16
3
ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: ஒன்றையும் காணாமலிருந்தும் தங்களுடைய சுய ஆவியினாலே ஏவப்பட்டு நடக்கிற, மதிகேடான தீர்க்கதரிசிகளுக்கு ஐயோ கேடு.
4
இஸ்ரயேலே, உன் தீர்க்கதரிசிகள் வனாந்திரங்களிலுள்ள நரிகளைப் போன்றவர்கள்.
5
யெகோவாவினுடைய நாளின் யுத்தத்தில், இஸ்ரயேல் வீட்டார் உறுதியாய் நிற்கும்படி, சுவர் வெடிப்புகளைப் பழுதுபார்க்க அவர்கள் போகவில்லை.
6
அவர்களுடைய தரிசனங்கள் போலியானதும், அவர்களுடைய குறிசொல்லுதல் பொய்யானதுமாய் இருக்கின்றன. யெகோவா தங்களை அனுப்பாதிருந்தும் அவர்கள், “யெகோவா சொல்கிறார்” என்கிறார்கள். அப்படியிருந்தும் தங்களுடைய வார்த்தைகள் நிறைவேறும் என எதிர்பார்க்கிறார்கள்.
7
பொய் தரிசனங்களை நீங்கள் காணவில்லையோ? நான் பேசாதிருந்தும், “யெகோவா கூறுகிறார்” என பொய்க் குறிசொல்லவில்லையோ?
8
“ ‘ஆகையால் ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: உங்கள் உண்மையற்ற வார்த்தைகளினிமித்தமும், பொய்த் தரிசனங்களினிமித்தமும் நான் உங்களுக்கு விரோதமாயிருக்கிறேன் என்று ஆண்டவராகிய யெகோவா கூறுகிறார்
9
போலியான தரிசனங்களைக் கண்டு, பொய்யாகக் குறிசொல்லும் தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாய் என் கரம் இருக்கிறது. அவர்கள் என் மக்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாய் இருக்கமாட்டார்கள். இஸ்ரயேல் குடும்பத்தாரின் பதிவேட்டில் அவர்கள் எழுதப்படவும் மாட்டார்கள். இஸ்ரயேல் நாட்டிற்குள் அவர்கள் செல்லவும் மாட்டார்கள். அப்பொழுது ஆண்டவராகிய யெகோவா நானே என்று நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
10
“ ‘ஏனெனில், சமாதானம் இல்லாதிருக்கும்போது, “சமாதானம்” என்று சொல்லி அவர்கள் என் மக்களைத் தவறாக வழிநடத்துகிறார்கள். உறுதியற்ற சுவர் கட்டப்படும்போது, அவர்கள் அதை மறைத்து வெள்ளையடிக்கிறார்கள்.
11
ஆகையால் அதை அப்படி மறைத்து வெள்ளையடிப்போரிடம், அது விழப்போகிறது என்று சொல். அடைமழை பெய்யும், நான் பனிக்கட்டியை மழையாய் விழப்பண்ணுவேன். கடுங்காற்று பயங்கரமாய் வீசும்.
12
சுவர் இடிந்து விழும்போது, “நீங்கள் வெள்ளையடித்து மூடினீர்களே! அது எங்கே? என மக்கள் உங்களைக் கேட்கமாட்டார்களோ?”
13
“ ‘ஆகவே ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. என் கடுங்கோபத்திலே, பெரும் புயல்காற்றை வீசப்பண்ணுவேன். என் கோபத்திலே பனிக்கட்டி மழையும், அடைமழையும் பெருஞ் சீற்றத்துடன் பெய்யும்.
14
நீங்கள் வெள்ளையடித்து மூடிய சுவரை நான் இடித்து வீழ்த்துவேன். அஸ்திபாரம் வெளிப்படும்படி அதைத் தரைமட்டமாக்குவேன். அது விழும்போது நீங்களும் அதற்குள் அழிவீர்கள். அப்பொழுது நானே யெகோவா என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
15
இவ்விதமாய் சுவருக்கும், சுவரை வெள்ளையடித்து மூடியவர்களுக்கும் விரோதமாய் நான் என் கோபத்தைத் தீர்த்துக்கொள்வேன். நான் உங்களிடம், “உங்களுக்குச் சுவரும் இல்லை. அதற்கு வெள்ளையடித்தவர்களும் இல்லை.
16
இஸ்ரயேலின் தீர்க்கதரிசிகளான இவர்கள் எருசலேமுக்குத் தீர்க்கதரிசனம் கூறினார்கள். அவர்களோ சமாதானம் இல்லாதிருந்தும், அவளுக்குச் சமாதானம் எனத் தரிசனம் கண்டோம் எனச் சொன்னார்கள் என்று சொல்வேன் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்” ’ என்று சொல்.
Settings