எசேக்கியேல் 13:1-9
1
யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது:
2
“மனுபுத்திரனே, இஸ்ரயேலில் இப்பொழுது தீர்க்கதரிசனம் சொல்லும் தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாக நீ இறைவாக்கு உரை. தங்கள் சொந்தக் கற்பனையில் தீர்க்கதரிசனம் சொல்வோரிடம் நீ சொல்லவேண்டியதாவது: ‘யெகோவாவினுடைய வார்த்தையைக் கேளுங்கள்!
3
ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: ஒன்றையும் காணாமலிருந்தும் தங்களுடைய சுய ஆவியினாலே ஏவப்பட்டு நடக்கிற, மதிகேடான தீர்க்கதரிசிகளுக்கு ஐயோ கேடு.
4
இஸ்ரயேலே, உன் தீர்க்கதரிசிகள் வனாந்திரங்களிலுள்ள நரிகளைப் போன்றவர்கள்.
5
யெகோவாவினுடைய நாளின் யுத்தத்தில், இஸ்ரயேல் வீட்டார் உறுதியாய் நிற்கும்படி, சுவர் வெடிப்புகளைப் பழுதுபார்க்க அவர்கள் போகவில்லை.
6
அவர்களுடைய தரிசனங்கள் போலியானதும், அவர்களுடைய குறிசொல்லுதல் பொய்யானதுமாய் இருக்கின்றன. யெகோவா தங்களை அனுப்பாதிருந்தும் அவர்கள், “யெகோவா சொல்கிறார்” என்கிறார்கள். அப்படியிருந்தும் தங்களுடைய வார்த்தைகள் நிறைவேறும் என எதிர்பார்க்கிறார்கள்.
7
பொய் தரிசனங்களை நீங்கள் காணவில்லையோ? நான் பேசாதிருந்தும், “யெகோவா கூறுகிறார்” என பொய்க் குறிசொல்லவில்லையோ?
8
“ ‘ஆகையால் ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: உங்கள் உண்மையற்ற வார்த்தைகளினிமித்தமும், பொய்த் தரிசனங்களினிமித்தமும் நான் உங்களுக்கு விரோதமாயிருக்கிறேன் என்று ஆண்டவராகிய யெகோவா கூறுகிறார்
9
போலியான தரிசனங்களைக் கண்டு, பொய்யாகக் குறிசொல்லும் தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாய் என் கரம் இருக்கிறது. அவர்கள் என் மக்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாய் இருக்கமாட்டார்கள். இஸ்ரயேல் குடும்பத்தாரின் பதிவேட்டில் அவர்கள் எழுதப்படவும் மாட்டார்கள். இஸ்ரயேல் நாட்டிற்குள் அவர்கள் செல்லவும் மாட்டார்கள். அப்பொழுது ஆண்டவராகிய யெகோவா நானே என்று நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
Settings