Skip to content
யாத்திராகமம் 29:19-34

யாத்திராகமம் 29:19-34

19
“பின்பு மற்ற செம்மறியாட்டுக் கடாவையும் கொண்டுவர வேண்டும். ஆரோனும் அவன் மகன்களும் அதன்மேல் தங்கள் கைகளை வைக்கவேண்டும்.
20
அந்தக் கடாவையும் வெட்டிக்கொன்று, அதன் இரத்தத்தில் கொஞ்சத்தை ஆரோனுடைய, அவன் மகன்களுடைய வலது காது மடலிலும், வலது கையின் பெருவிரலிலும், வலது காலின் பெருவிரலிலும் பூசவேண்டும். பின்பு இரத்தத்தைப் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளிக்கவேண்டும்.
21
பலிபீடத்திலுள்ள இரத்தத்திலும், அபிஷேக எண்ணெயிலும் கொஞ்சம் எடுத்து, ஆரோன் மேலும் அவன் உடைகளின்மேலும், அவன் மகன்கள்மேலும், அவர்களுடைய உடைகள்மேலும் தெளிக்கவேண்டும். அதன்பின் அவனும், அவன் மகன்களும் அர்ப்பணிக்கப்படுவார்கள். அவர்களுடைய உடைகளும் அர்ப்பணிக்கப்படும்.
22
“அந்தச் செம்மறியாட்டின் கொழுப்பையும், அதன் கொழுத்த வாலையும், அதன் உள் உறுப்புகளை மூடியுள்ள கொழுப்பையும், ஈரலின் மேலுள்ள கொழுப்பையும், இரு சிறுநீரகங்களையும், அவற்றை மூடியுள்ள கொழுப்பையும், வலது தொடையையும் எடுக்கவேண்டும். இதுவே ஆரோனுடைய அவன் மகன்களுடைய அர்ப்பணிப்பிற்கான செம்மறியாட்டுக் கடா.
23
அவற்றுடன் யெகோவா முன்பாக வைக்கப்பட்டிருந்த புளிப்பில்லாத அப்பங்களுள்ள கூடையிலிருந்து ஒரு அப்பத்தையும், எண்ணெய் சேர்த்து சுடப்பட்ட ஒரு அடை அப்பத்தையும், ஒரு அதிரசத்தையும் எடுத்துக்கொள்ளவேண்டும்.
24
அவற்றையெல்லாம் ஆரோனுடைய, அவன் மகன்களுடைய கைகளில் கொடுத்து, அவற்றை யெகோவா முன்பாக அசைவாட்டும் காணிக்கையாக அசைவாட்டவேண்டும்.
25
பின்பு அவற்றை அவர்களின் கைகளிலிருந்து வாங்கி, பலிபீடத்தின் மேலுள்ள தகன காணிக்கைகளுடன் யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் மகிழ்ச்சியூட்டும் நறுமண காணிக்கையாக எரிக்கவேண்டும்.
26
ஆரோனின் அர்ப்பணிப்பிற்கான செம்மறியாட்டுக் கடாவின் நெஞ்சுப்பகுதியை எடுத்து, பின்பு அதை யெகோவா முன்னிலையில் அசைவாட்டும் காணிக்கையாக அசைவாட்டவேண்டும். இது உன் பங்காயிருக்கும்.
27
“ஆரோனுடைய, அவன் மகன்களுடைய அர்ப்பணிப்பிற்குரிய செம்மறியாட்டுக் கடாவின் பாகங்களாகிய அசைவாட்டப்பட்ட நெஞ்சுப்பகுதியையும், செலுத்தப்பட்ட தொடையையும் மிகவும் பரிசுத்தமான பங்காக வேறுபிரித்து வைக்கவேண்டும்.
28
இஸ்ரயேலர்கள் சமாதான காணிக்கைகளையும், நன்றியறிதல் காணிக்கைகளையும் யெகோவாவுக்குச் செலுத்தும் போதெல்லாம் இந்தப் பாகங்கள் ஆரோனுக்கும் அவன் மகன்களுக்கும் கொடுக்கப்படவேண்டிய பங்கு ஆகும்.
29
“ஆரோனின் பரிசுத்த உடைகள் அவனுடைய சந்ததிக்கு, அவர்கள் அவற்றை உடுத்தி அபிஷேகம் பண்ணப்பட்டு, அர்ப்பணிக்கப்படும்படி அவர்களுக்கே சொந்தமாகும்.
30
அவனுக்குப்பின் அவனுக்குரிய இடத்தில் ஆசாரியராக பரிசுத்த இடத்தில் ஊழியம் செய்வதற்கு சபைக் கூடாரத்திற்குள் வரும், அவனுடைய மகன் அந்த உடைகளை ஏழு நாட்கள் உடுத்தவேண்டும்.
31
“ஆசாரியரின் அர்ப்பணிப்பிற்கான செம்மறியாட்டுக் கடாவை எடுத்து, அதன் இறைச்சியைப் பரிசுத்த இடத்திலே சமைக்கவேண்டும்.
32
ஆரோனும் அவன் மகன்களும், அந்த இறைச்சியையும், கூடையிலுள்ள அப்பங்களையும் சபைக்கூடார வாசலில் சாப்பிடவேண்டும்.
33
பரிசுத்தப்படுத்துவதற்கும் அர்ப்பணிப்புக்கும் பாவநிவிர்த்தியாக செலுத்தப்பட்ட அக்காணிக்கைகளை அவர்களே சாப்பிடவேண்டும். அவைகளை வேறு யாரும் சாப்பிடக்கூடாது, ஏனெனில் அவைகள் பரிசுத்தமானவை.
34
அர்ப்பணிப்பிற்கான அந்த செம்மறியாட்டுக் கடாவின் இறைச்சியிலோ அல்லது அப்பங்களிலோ காலைவரை ஏதாவது மீதமிருந்தால், அவற்றை எரித்துவிடவேண்டும். ஏனெனில் அவை பரிசுத்தமானது, அவற்றைச் சாப்பிடக்கூடாது.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options