உபாகமம் 27:11-26
11
மேலும் அதே நாளில் மோசே மக்களுக்குக் கட்டளையிட்டதாவது:
12
நீங்கள் யோர்தான் நதியைக் கடந்தவுடன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், யோசேப்பு, பென்யமீன் ஆகிய கோத்திரங்கள் மக்களுக்கு ஆசீர்வாதத்தைக் கூறும்படி, கெரிசீம் மலையில் நிற்கவேண்டும்.
13
ரூபன், காத், ஆசேர், செபுலோன், தாண், நப்தலி ஆகிய கோத்திரங்கள் சாபங்களைக் கூறும்படி ஏபால் மலையில் நிற்கவேண்டும்.
14
அப்பொழுது லேவியர், இஸ்ரயேல் மக்கள் யாவருக்கும் உரத்த குரலில் கூறவேண்டியதாவது:
15
“யெகோவாவுக்கு அருவருப்பானதும், கைவினைக் கலைஞனின் வேலையுமான ஒரு உருவச்சிலையை செதுக்கி, ஒரு விக்கிரகத்தை வார்ப்பித்து, அதை மறைவிடத்தில் வைக்கிற மனிதன் சபிக்கப்பட்டவன்.” அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.
16
“தகப்பனையோ, தாயையோ கனம் பண்ணாதவன் சபிக்கப்பட்டவன்.” அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.
17
“அயலானின் எல்லைக்கல்லைத் தள்ளி நாட்டுகிறவன் சபிக்கப்பட்டவன்.” அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.
18
“குருடனை வீதியில் தவறாக வழிநடத்துகிறவன் சபிக்கப்பட்டவன்.” அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.
19
“அந்நியனுக்கும், தந்தையற்றவனுக்கும், விதவைக்கும் நீதி வழங்காதிருக்கிறவன் சபிக்கப்பட்டவன்.” அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.
20
“தகப்பனின் மறுமனைவியுடன் உடலுறவுகொள்பவன் தன் தகப்பனை அவமதித்தபடியால் அவன் சபிக்கப்பட்டவன்.” அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.
21
“எந்த மிருகத்துடனும் பாலுறவுகொள்பவன் சபிக்கப்பட்டவன்.” அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.
22
“தனது தகப்பனுக்காவது, தாய்க்காவது பிறந்த தன் சகோதரியுடன் உறவுகொள்பவன் சபிக்கப்பட்டவன்.” அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.
23
“தன் மனைவியின் தாயுடன் உறவுகொள்பவன் சபிக்கப்பட்டவன்.” அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.
24
“இரகசியமாக தன் அயலானைக் கொலைசெய்பவன் சபிக்கப்பட்டவன்.” அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.
25
“குற்றமில்லாதவனைக் கொலைசெய்வதற்குக் கைக்கூலி வாங்குபவன் சபிக்கப்பட்டவன்.” அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.
26
“இந்த சட்டங்களையெல்லாம் கைக்கொண்டு, அதன்படி நடக்காதவன் சபிக்கப்பட்டவன்.” அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.
Settings