Skip to content
உபாகமம் 12:15-28

உபாகமம் 12:15-28

15
ஆனாலும் உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கும் ஆசீர்வாதத்தின்படியே, உங்கள் பட்டணங்களில் நீங்கள் உங்கள் வளர்ப்பு மிருகங்களைக் கொன்று, விரும்பிய அளவு இறைச்சியைச் சாப்பிடுங்கள். வெளிமானையும், கலைமானையும் அடித்துச் சாப்பிடுவதுபோல அடித்துச் சாப்பிடலாம். சம்பிரதாய முறைப்படி அசுத்தமாயிருக்கிறவர்களும், சுத்தமாயிருக்கிறவர்களும் அதைச் சாப்பிடலாம்.
16
ஆனால் இரத்தத்தை நீங்கள் சாப்பிடக்கூடாது. தண்ணீரை ஊற்றுவது போல் அதை நிலத்தில் ஊற்றுங்கள்.
17
நீங்கள் உங்கள் சொந்தப் பட்டணங்களில் உங்கள் தானியம், புதுத் திராட்சை இரசம், ஒலிவ எண்ணெய் ஆகியவற்றின் பத்திலொரு பங்கை சாப்பிடக்கூடாது. உங்கள் ஆடு, மாடு மந்தைகளின் தலையீற்றையோ அல்லது நீங்கள் நேர்ந்துகொண்ட எதையுமோ அல்லது உங்கள் சுயவிருப்பக் காணிக்கையையோ அல்லது விசேஷ கொடைகளையோ அங்கு சாப்பிடக்கூடாது.
18
பதிலாக நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவா முன்பாக, உங்கள் இறைவனாகிய யெகோவா தனக்கென்று தெரிந்துகொண்ட இடத்தில் இருந்தே சாப்பிடவேண்டும். அப்படியே நீங்களும், உங்கள் மகன்களும், மகள்களும், வேலைக்காரர்களும், வேலைக்காரிகளும் உங்கள் பட்டணங்களில் இருக்கும் லேவியர்களும் அந்த இடத்திலிருந்தே சாப்பிடவேண்டும். உங்கள் இறைவனாகிய யெகோவா முன்பாக நீங்கள் கையிட்டுச்செய்யும் எல்லாவற்றிற்காகவும் மகிழ்ச்சியடையவேண்டும்.
19
நீங்கள் உங்கள் நாட்டில் வாழும் காலமெல்லாம் லேவியரை கைவிடாதபடி கவனமாயிருங்கள்.
20
உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு வாக்குப்பண்ணியபடி, உங்கள் ஆட்சியின் எல்லையை விரிவாக்குவார். அப்பொழுது நீங்கள் இறைச்சியை விரும்பி, “எனக்கு இறைச்சி விருப்பமாயிருக்கிறது” என்று சொன்னால், நீங்கள் விரும்பிய அளவு சாப்பிடலாம்.
21
உங்கள் இறைவனாகிய யெகோவா தமது பெயர் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் இடம் உங்களுக்கு அதிக தூரமாயிருந்தால், நான் உங்களுக்குக் கட்டளையிட்டபடி யெகோவா உங்களுக்குக் கொடுக்கும் ஆட்டு மந்தைகளிலும், மாட்டு மந்தைகளிலும் உள்ள மிருகங்களைக் கொன்று, உங்கள் சொந்தப் பட்டணங்களில் நீங்கள் விரும்பிய அளவு அவற்றைச் சாப்பிடலாம்.
22
வெளிமானையோ, கலைமானையோ சாப்பிடுவதுபோல அதைச் சாப்பிடுங்கள். சம்பிரதாய முறைப்படி அசுத்தமானவர்களும், சுத்தமானவர்களும் அதைச் சாப்பிடலாம்.
23
ஆனால் இரத்தத்தைச் சாப்பிடாமல் இருக்கக் கவனமாயிருங்கள். ஏனெனில் இரத்தமே உயிர். நீங்கள் உயிரை இறைச்சியுடன் சாப்பிடக்கூடாது.
24
நீங்கள் இரத்தத்தைச் சாப்பிடக்கூடாது. அதை நிலத்திலே தண்ணீரைப்போல் ஊற்றுங்கள்.
25
அதைச் சாப்பிடாதீர்கள். அப்பொழுது நீங்களும், உங்கள் பிள்ளைகளும் நலமாயிருப்பீர்கள். ஏனெனில் யெகோவாவின் பார்வையில் எது சரியானதோ அதையே நீங்கள் செய்வீர்கள்.
26
ஆனால் அர்ப்பணிக்கப்பட்ட உங்கள் பொருட்களையும், கொடுப்பதற்காக நீங்கள் நேர்ந்துகொண்டதையும் எடுத்துக்கொண்டு யெகோவா தெரிந்துகொண்ட இடத்திற்குப் போங்கள்.
27
அங்கே உங்கள் இறைவனாகிய யெகோவாவின் பலிபீடத்தின்மேல் உங்கள் தகன காணிக்கைகளைச் செலுத்துங்கள். இறைச்சியும், இரத்தமுமான இரண்டையும் பலி செலுத்துங்கள். உங்கள் பலிகளின் இரத்தம் உங்கள் இறைவனாகிய யெகோவாவின் பலிபீடத்தின் அருகில் ஊற்றப்படவேண்டும். இறைச்சியை நீங்கள் சாப்பிடலாம்.
28
இன்று நான் உங்களுக்குக் கொடுக்கிற இந்த எல்லா நியமங்களுக்கும் கீழ்ப்படியக் கவனமாயிருங்கள். அப்பொழுது நீங்களும் உங்கள் பிள்ளைகளும் நலமாயிருப்பீர்கள். ஏனெனில் உங்கள் இறைவனாகிய யெகோவாவின் பார்வையில் நல்லதையும், சரியானதையும் செய்து கொண்டிருப்பீர்கள்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options