அப்போஸ்தலர் 5:17-42
17
அப்பொழுது பிரதான ஆசாரியனும், சதுசேயர் குழுவைச் சேர்ந்த அவனுடைய கூட்டாளிகள் அனைவரும் பொறாமையால் நிறைந்து,
18
அப்போஸ்தலரைக் கைதுசெய்து, பொதுச் சிறைச்சாலையில் அடைத்தார்கள்.
19
ஆனால் அந்த இரவில், கர்த்தருடைய தூதன் அந்தச் சிறைச்சாலையின் கதவுகளைத் திறந்து, அவர்களை வெளியே கொண்டுவந்தான்.
20
அவன் அவர்களிடம், “நீங்கள் போய் ஆலய முற்றத்தில் நின்று, இந்த ஜீவ வார்த்தைகள் எல்லாவற்றையும் மக்களுக்குச் சொல்லுங்கள்” என்றான்.
21
அதிகாலையிலேயே, அவர்கள் தங்களுக்குச் சொல்லப்பட்டபடியே, ஆலய முற்றத்திற்குள் போய் மக்களுக்குப் போதிக்கத் தொடங்கினார்கள். பிரதான ஆசாரியனும் அவனுடன் இருந்தவர்களும் அங்கே வந்து சேர்ந்தபோது, அவர்கள் ஆலோசனைச் சங்கத்தை, அதாவது இஸ்ரயேல் மக்களின் எல்லா யூதரின் தலைவர்களையும் ஒன்றுகூட்டி, சிறையிலிருந்து அப்போஸ்தலரைக் கொண்டுவரும்படி ஆட்களை அனுப்பினார்கள்.
22
ஆனால் ஆலயக்காவலர் அங்கே போனபோது, சிறைச்சாலையில் அப்போஸ்தலரைக் காணவில்லை. எனவே, அவர்கள் திரும்பிவந்து அதை அறிவித்தார்கள்.
23
திரும்பி வந்தவர்கள் அவர்களிடம், “சிறைச்சாலை பாதுகாப்பாகப் பூட்டப்பட்டிருப்பதையும் சிறைக்காவலர் வாசல்களில் நின்று கொண்டிருப்பதையும் நாங்கள் கண்டோம். ஆனால் சிறைச்சாலைக் கதவுகளை நாங்கள் திறந்தபோது, உள்ளே நாங்கள் ஒருவரையும் காணவில்லை” என்றார்கள்.
24
ஆலயக்காவலர் தலைவனும் தலைமை ஆசாரியர்களும் இந்த செய்தியைக் கேட்டபோது, அதனால் என்ன நடக்கப்போகிறதோ என நினைத்து, மனக்குழப்பமடைந்தார்கள்.
25
அப்பொழுது ஒருவன் வந்து, “இதோ, நீங்கள் சிறையில் அடைத்தவர்கள் ஆலய முற்றத்தில் நின்று மக்களுக்குப் போதிக்கிறார்கள்” என்று அறிவித்தான்.
26
அப்பொழுது, ஆலயக்காவலர் தலைவன் தனது ஆலயக்காவலருடன் போய், அப்போஸ்தலர்களைக் கொண்டுவந்தான். ஆனால், அவர்கள்மேல் வன்முறையைக் கையாளவில்லை. ஏனெனில் மக்கள் தங்கள்மேல் கல்லெறிவார்கள் என்று பயந்திருந்தார்கள்.
27
அவர்கள் அப்போஸ்தலர்களைக் கொண்டுவந்து, ஆலோசனைச் சங்கத்தின் முன்நிறுத்தினார்கள். பிரதான ஆசாரியன் கேள்விகளைக் கேட்டான்.
28
அவன் அவர்களிடம், “இந்தப் பெயரால் நீங்கள் போதிக்கக் கூடாது என்று நாங்கள் உங்களுக்குக் கடுமையாக உத்தரவிட்டிருந்தோம். ஆனால் நீங்கள் உங்கள் போதனையினாலே எருசலேமை நிரப்பிவிட்டீர்கள். அந்த மனிதனைக் கொன்ற இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தவே நீங்கள் உறுதிகொண்டிருக்கிறீர்கள்” என்றான்.
29
ஆனால், பேதுருவும் மற்ற அப்போஸ்தலரும் அவர்களிடம்: “மனிதனைவிட நாங்கள் இறைவனுக்கே கீழ்ப்படிய வேண்டும்!
30
நீங்கள் மரத்தில் தொங்கவிட்டுக் கொலைசெய்த இயேசுவை, நம்முடைய தந்தையரின் இறைவன் மரித்தோரிலிருந்து எழும்பச்செய்தார்.
31
இறைவனோ இயேசுவை அதிபதியாகவும், இரட்சகராகவும், தனது வலதுபக்கத்தில் இருக்கும்படி உயர்த்தி, இவர் இஸ்ரயேலுக்கு மனந்திரும்புதலையும், பாவங்களுக்கான மன்னிப்பையும் கொடுக்கும்படி செய்தார்.
32
இவற்றிற்கு நாங்கள் சாட்சிகளாய் இருக்கிறோம். தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்கு, இறைவன் கொடுத்திருக்கும் பரிசுத்த ஆவியானவரும் சாட்சியாய் இருக்கிறார்” என்றார்கள்.
33
அவர்கள் இதைக் கேட்டபோது, கடுங்கோபமடைந்து இவர்களைக் கொல்ல யோசித்தார்கள்.
34
ஆனால் அந்த ஆலோசனைச் சங்கத்தில், கமாலியேல் என்னும் பெயருடைய ஒரு பரிசேயன் இருந்தான். அவன் ஒரு மோசேயின் சட்ட ஆசிரியனாகவும், எல்லா மக்களுடைய மதிப்பைப் பெற்றவனாகவும் இருந்தான்; அவன் எழுந்து நின்று, சிறிது நேரத்திற்கு அப்போஸ்தலரை வெளியே கொண்டுபோகும்படி உத்தரவிட்டான்.
35
பின்பு கமாலியேல் அங்கிருந்தவர்களைப் பார்த்து: “இஸ்ரயேலரே, இவர்களுக்கு நீங்கள் செய்யப்போவதைக் கவனமாய் எண்ணிப்பாருங்கள்.
36
ஏனெனில் சிலகாலத்திற்கு முன்பு, தெயுதாஸ் என்பவன் முன்வந்து, தன்னை ஒரு பெரிய ஆளாக எல்லோருக்கும் காண்பித்தான், கிட்டத்தட்ட நானூறுபேர் அவனுடன் சேர்ந்துகொண்டார்கள். ஆனால் அவன் கொல்லப்பட்டான்; அவனைப் பின்பற்றிய அனைவரும் சிதறிப்போனார்கள். அந்தக் கூட்டத்தினர் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டனர்.
37
அவனுக்குப்பின்பு, குடிமதிப்பு எடுக்கப்பட்ட காலத்தில் கலிலேயனான யூதாஸ் என்பவன் முன்வந்து, அவனும் ஒரு மக்கள் குழுவை கலகத்திற்கு வழிநடத்தினான். ஆனால் அவனும் கொல்லப்பட்டான்; அவனைப் பின்பற்றியவர்களும் சிதறடிக்கப்பட்டார்கள்.
38
எனவே, இப்பொழுது இந்த விஷயத்திலும்கூட, நான் கூறும் ஆலோசனை இதுவே: இவர்களை விட்டுவிடுங்கள்! இவர்கள் போகட்டும்! ஏனெனில் இந்தத் திட்டமும், இந்த செயலும் மனிதரிடமிருந்து வந்ததானால், இது இல்லாமற்போகும்.
39
ஆனால் இது இறைவனிடமிருந்து வந்ததானால், உங்களால் இவர்களை நிறுத்தமுடியாது; அப்படி முயன்றால், நீங்கள் இறைவனுக்கு விரோதமாக யுத்தம் செய்கிறவர்களாய் இருப்பீர்களே” என்றான்.
40
அங்கிருந்தவர்கள் கமாலியேல் சொன்னதற்கு இணங்கினார்கள். அப்பொழுது அவர்கள் அப்போஸ்தலரை உள்ளே கூப்பிட்டு, அவர்களைச் சவுக்கினால் அடித்தார்கள். பின்பு அவர்கள், இயேசுவின் பெயரினால் பேசக்கூடாது என்று கட்டளையிட்டு, அவர்களைப் போகவிட்டார்கள்.
41
அப்போஸ்தலர் ஆலோசனைச் சங்கத்தைவிட்டுப் போனபின், இயேசுவின் பெயருக்காக தாங்கள் அவமானப்பட்டுத் துன்பம் அடைவதற்குத் தகுந்தவர்களாக கருதப்பட்டதால், பெருமகிழ்ச்சி அடைந்தார்கள்.
42
ஒவ்வொரு நாளும் அவர்கள் ஆலய முற்றத்திலும், வீடுகள்தோறும் இடைவிடாது போதித்து, இயேசுவே கிறிஸ்து என்று நற்செய்தியை அறிவித்துவந்தார்கள்.
Settings