Skip to content
2 சாமுயேல் 7:18-29

2 சாமுயேல் 7:18-29

18
பின்பு அரசன் தாவீது உள்ளே சென்று யெகோவாவுக்கு முன்பாக அமர்ந்து சொன்னதாவது: “யெகோவாவாகிய ஆண்டவரே, இதுவரைக்கும் நீர் என்னை வழிநடத்தி வந்ததற்கு நான் யார்? என் குடும்பமும் எம்மாத்திரம்?
19
யெகோவாவாகிய ஆண்டவரே, உமது பார்வைக்கு இதுவும் போதாதென்று நீர் உமது பணியாளனின் குடும்பத்தின் எதிர்காலத்தைக் குறித்தும் பேசியிருக்கிறீரே! யெகோவாவாகிய ஆண்டவரே, இப்படித்தான் நீர் மனிதருடன் நடந்துகொள்ளும் வழக்கமோ!
20
“இன்னும் மேலாக தாவீது உம்மிடம் எதைச் சொல்லமுடியும்? யெகோவாவாகிய ஆண்டவரே! உம்முடைய அடியானை நீர் அறிவீர்
21
உமது வாக்குத்தத்தத்தின் வார்த்தையின் நிமித்தமும், உமது திட்டத்தின்படியும், இப்பெரிய செயல்களைச் செய்து, அடியானுக்கு அதைத் தெரியப்படுத்தியிருக்கிறீர்.
22
“ஆண்டவராகிய யெகோவாவே! நீரே பெரியவர்; உம்மைப்போல் யாரும் இல்லை. எங்கள் காதுகளால் நாங்கள் கேள்விப்பட்டதுபோல் உம்மைத்தவிர வேறொரு இறைவனும் இல்லை.
23
உம்முடைய மக்களாகிய இஸ்ரயேலரைப்போல வேறு யாரும் உண்டோ? தமக்கு மக்களாயிருக்கும்படி, இறைவன் தாமே போய் மீட்டுக்கொண்ட பூமியிலுள்ள ஒரே இனம் அவர்களே. எகிப்தியரிடமிருந்து நீர் மீட்ட உமது மக்களுக்கு முன்பாக, பிற நாட்டு மக்களையும், அவர்களுடைய தெய்வங்களையும் துரத்தி, பெரிதும் பயங்கரமுமான அதிசய செயல்களைச் செய்து, மிகப்பெரிய பெயரை உமக்கு ஏற்படுத்தினீரே;
24
உம்முடைய மக்களாகிய இஸ்ரயேலரை என்றென்றைக்கும் உமக்குரியவர்களாயிருக்கும்படி நிலைநிறுத்தி, யெகோவாவே! நீரே அவர்களின் இறைவனானீர்.
25
“இப்பொழுதும் இறைவனாகிய யெகோவாவே, உம்முடைய அடியானையும், அவன் குடும்பத்தையும் குறித்து நீர் கொடுத்த வாக்குறுதியை என்றென்றைக்கும் நிலைப்படுத்தும். நீர் வாக்களித்தபடியே செய்யும்.
26
இதனால் உமது பெயர் என்றென்றும் பெரிதாயிருக்கும். அப்பொழுது, ‘சேனைகளின் யெகோவாவே இஸ்ரயேலின்மேல் இறைவன்’ என்று மனிதர் சொல்வார்கள். அப்பொழுது உமது அடியானாகிய தாவீதின் குடும்பம் உமக்கு முன்பாக நிலைநிறுத்தப்படும்.
27
“சேனைகளின் யெகோவாவே, இஸ்ரயேலின் இறைவனே, ‘நான் உன் குடும்பத்தை கட்டி எழுப்புவேன்’ என்று உமது அடியானுக்கு நீர் வெளிப்படுத்தினீர். எனவே இந்த மன்றாட்டை உம்மிடம் சமர்ப்பிக்க உமது அடியானுக்கு துணிவு கிடைத்தது.
28
ஆண்டவராகிய யெகோவாவே! நீரே இறைவன். உம்முடைய வார்த்தைகள் நம்பத்தகுந்தவை. நீர் இந்த நல்ல செயல்களை உமது அடியவனுக்கு வாக்காகக் கொடுத்திருக்கிறீர்.
29
எனவே இப்பொழுது உம்முடைய கண்களுக்கு முன்பாக உமது அடியானின் குடும்பம் எப்பொழுதும் நிலைத்திருக்கும்படி, அதை மனதார ஆசீர்வதியும். ஆண்டவராகிய யெகோவாவே, நீர் சொல்லியிருக்கிறீர். உமது ஆசீர்வாதத்தினால் உமது அடியானின் குடும்பம் என்றென்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்” என்றான்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options