2 சாமுயேல் 19:9-15
9
இஸ்ரயேலின் எல்லா கோத்திரங்களிலுமுள்ள மக்கள் தங்களுக்கு வாக்குவாதம்பண்ணி, “அரசர் எங்களை எங்கள் பகைவரிடமிருந்து விடுவித்தார். எங்களைப் பெலிஸ்தியரிடமிருந்து தப்புவித்தவரும் அவரே. இப்போது அப்சலோமுக்குப் பயந்து, தான் தப்புவதற்காக நாட்டைவிட்டு ஓடினாரே.
10
நம்மை அரசாளும்படி நாங்கள் அபிஷேகம் செய்த அப்சலோமும் போரில் இறந்துவிட்டான்; எனவே மறுபடியும் அரசன் தாவீதை அழைத்து வருவதைப் பற்றி ஏன் ஒன்றும் பேசாமலிருக்கிறீர்கள்?” எனத் தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள்.
11
எனவே தாவீது அரசன், சாதோக், அபியத்தார் என்னும் ஆசாரியர்கள் இருவரிடமும் செய்தியை அனுப்பி, “நீங்கள் யூதாவின் முதியவர்களிடம்போய், ‘இஸ்ரயேல் முழுவதும் பேசிக்கொண்டவைகள் அரசனின் இருப்பிடத்திற்கு எட்டியது. அரசரை அரண்மனைக்கு அழைத்துவர ஏன் நீங்கள் தாமதிக்கிறீர்கள்?
12
நீங்கள் என் சகோதரர்; என் இரத்தமும், மாம்சமுமானவர்கள். எனவே நீங்கள் அரசனை மறுபடியும் அழைத்து வருவதற்குத் தயங்குவது ஏன்?’ எனக் கேளுங்கள்.
13
மேலும் நீங்கள் அமாசாவிடம், ‘நீ என் தசையும், இரத்தமுமானவனல்லவா? நான் உன்னை இன்றுமுதல் யோவாபுக்குப் பதிலாக என் படைகளுக்குத் தலைவனாக்காவிட்டால் இறைவன் எவ்வளவு அதிகமாகவும் தண்டிக்கட்டும்’ எனச் சொல்லுங்கள்” என்று தனக்காக சொல்லும்படி சொல்லி அனுப்பினான்.
14
இவ்விதமாக தாவீது அரசன் யூதா மனிதர் அனைவரின் மனதையும் கவர்ந்து அவர்களை ஒரே மனமாக இணங்கச்செய்தான். அதனால் அவர்கள் அரசனிடம் ஆளனுப்பி, “அரசரே! நீரும் உம்மோடிருக்கும் மக்களும் திரும்பிவாருங்கள்” என்றார்கள்.
15
எனவே அரசன் யோர்தான்வரை வந்தான். யூதா மக்கள் அரசனைச் சந்தித்து, அவனை யோர்தானைக் கடந்து அழைத்துவரும்படி கில்காலுக்கு வந்தார்கள்.
Settings