2 இராஜாக்கள் 9:4-10
4
அப்படியே அந்த வாலிபனான இறைவாக்கினன் ராமோத் கீலேயாத்துக்குப் போனான்.
5
அவன் போய்ச் சேர்ந்தபோது இராணுவ உயர் அதிகாரிகள் ஒருமித்து இருந்ததைக் கண்டு, “தளபதியே உமக்கு ஒரு செய்தி உண்டு” என்றான். அப்போது யெகூ, “எங்களில் யாருக்கு?” என்று கேட்டான். அதற்கு அவன், “தளபதியே உமக்குத்தான்” என்றான்.
6
யெகூ எழுந்து வீட்டுக்குள் போனதும் இறைவாக்கினன், யெகூவுடைய தலையில் எண்ணெயை ஊற்றிச் சொன்னதாவது, “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: ‘நான் உன்னை யெகோவாவின் மக்களாகிய இஸ்ரயேலருக்கு அரசனாக அபிஷேகம் பண்ணுகிறேன்.
7
நீ உன் தலைவனான ஆகாப் அரசனின் முழுக் குடும்பத்தையும் அழித்துவிடவேண்டும். யேசபேலினால் சிந்தப்பட்ட யெகோவாவின் எல்லா ஊழியக்காரரின் இரத்தத்துக்காகவும், என்னுடைய அடியவரான எல்லா இறைவாக்கினரின் இரத்தத்துக்காகவும் பழிவாங்குவேன்.
8
அடிமையாயிருந்தாலென்ன, சுதந்திரவாளியாயிருந்தாலென்ன இஸ்ரயேலில் ஆகாபின் குடும்பத்தில் ஒருவரும் மீந்திராதபடி எல்லா ஆண்களையும் அழித்துப்போடுவேன்.
9
ஆகாபின் குடும்பத்தை நேபாத்தின் மகன் யெரொபெயாமின் குடும்பத்தைப்போலவும், அகியாவின் மகனான பாஷாவின் குடும்பத்தைப்போலவும் ஆக்குவேன்.
10
யேசபேலுக்கோ என்றால், யெஸ்ரயேலின் வெளிநிலத்தில் நாய்கள் அவளைத் தின்னும். ஒருவரும் அவளை அடக்கம்பண்ணமாட்டார்கள்.’ ” இதைச் சொன்னபின்பு அவன் கதவைத் திறந்துகொண்டு ஓடித் தப்பினான்.
Settings