2 நாளாகமம் 29:3-11
3
அவனுடைய ஆட்சியின் முதலாம் வருடம், முதல் மாதத்தில் அவன் யெகோவாவின் ஆலயத்தின் கதவுகளைத் திறந்து அவற்றைப் பழுதுபார்த்தான்.
4
அவன் ஆசாரியர்களையும், லேவியர்களையும் கொண்டுவந்து, கிழக்குப் பக்கத்திலுள்ள சதுக்கத்தில் அவர்களை ஒன்றுகூட்டினான்.
5
அவர்களிடம், “லேவியர்களே, எனக்கு செவிகொடுங்கள். நீங்கள் இப்பொழுது உங்களைப் பரிசுத்தப்படுத்துங்கள்; அத்துடன் உங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவின் ஆலயத்தையும் பரிசுத்தப்படுத்துங்கள். பரிசுத்த இடத்திலிருந்து எல்லா அசுத்தத்தையும் அகற்றிப்போடுங்கள்.
6
எனது முற்பிதாக்கள் உண்மையற்றவர்களாய் இருந்தார்கள். அவர்கள் எங்கள் இறைவனாகிய யெகோவாவின் பார்வையில் தீமையானதைச் செய்து, அவரைவிட்டு விலகினார்கள். அவர்கள் யெகோவாவின் உறைவிடத்திற்கு தங்கள் முகத்தை விலக்கி, அவருக்குத் தங்கள் முதுகைக் காட்டினார்கள்.
7
அத்துடன் அவர்கள் ஆலயத்தின் முன்மண்டபக் கதவுகளையும் பூட்டி, விளக்குகளை அணைத்துப் போட்டார்கள். அவர்கள் இஸ்ரயேலின் இறைவனின் பரிசுத்த இடத்தில் தூபங்காட்டவோ, தகன காணிக்கைகளைச் செலுத்தவோ இல்லை.
8
அதனால் யெகோவாவின் கோபம் யூதாவின்மேலும், எருசலேமின்மேலும் இறங்கியது. அவர் அவர்களைப் பயங்கரத்திற்கும், திகிலிற்கும், இகழ்ச்சிக்கும் உரிய பொருளாக வைத்திருக்கிறார். அதையே இன்று நீங்கள் உங்கள் சொந்தக் கண்களால் காண்கிறீர்கள்.
9
இதனாலேயே நமது தந்தையர்கள் வாளினால் மடிந்தார்கள்; நம்முடைய மகன்களும், மகள்களும், நம்முடைய மனைவிகளும் சிறைபிடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
10
இப்பொழுது நான் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுடன் ஒரு உடன்படிக்கையை செய்ய எண்ணியுள்ளேன். அப்பொழுதுதான் அவரது கோபம் நம்மைவிட்டுத் திரும்பும்.
11
என் மகன்களே, இப்பொழுது நீங்கள் அசட்டையாய் இராதீர்கள். ஏனெனில் அவர் முன்நின்று அவருக்குப் பணிசெய்வதற்கும் அவர் முன்னிலையில் ஊழியம் செய்து தூபங்காட்டுவதற்குமே யெகோவா உங்களைத் தெரிந்துகொண்டிருக்கிறார்” என்றான்.
Settings