1 இராஜாக்கள் 21:17-26
17
அப்பொழுது திஸ்பியனாகிய எலியாவுக்கு யெகோவாவினுடைய வார்த்தை வந்தது.
18
“சமாரியாவில் அரசாளுகிற இஸ்ரயேலின் அரசன் ஆகாபைச் சந்திக்கப் போ. அவன் இப்போது நாபோத்தினுடைய திராட்சைத் தோட்டத்தைத் தன் உரிமையாக்கிக்கொள்ளும்படி அங்கு போயிருக்கிறான்.
19
அவனிடம் நீ சொல்லவேண்டியதாவது, ‘யெகோவா கூறுவது இதுவே: நீ ஒரு மனிதனைக் கொலைசெய்து, அவனுடைய சொத்தை அபகரிக்கவில்லையா?’ என்று அவனிடம் கேள். மேலும் நீ அவனிடம், ‘யெகோவா கூறுவது இதுவே: நாபோத்தின் இரத்தத்தை நாய்கள் நக்கின அதே இடத்திலே உன் இரத்தத்தையும் நாய்கள் நக்கும்; ஆம் உன் இரத்தத்தையும் நாய்கள் நக்கும்’ ” என்றான்.
20
அப்பொழுது ஆகாப் எலியாவிடம், “என் பகைவனே என்னைக் கண்டுபிடித்துவிட்டாயா?” என்றான். எலியா அதற்குப் பதிலாக, “யெகோவாவின் பார்வையில் தீமைசெய்யும்படி நீ உன்னை விற்றுப்போட்டபடியினால், நான் உன்னைக் கண்டுபிடித்து விட்டேன்.
21
நான் உன்மீது பெரும் அழிவைக் கொண்டுவரப் போகிறேன். உன் சந்ததிகளை நான் அழித்துவிடுவேன். அடிமையோ, விடுதலையானவனோ இஸ்ரயேலில் ஆகாபுக்குச் சொந்தமான ஒரு ஆணும் உயிருடன் மீதியாக இருக்காதபடி அழித்துவிடுவேன்.
22
நீ எனக்குக் கோபமூட்டி முழு இஸ்ரயேல் மக்களையும் பாவம் செய்யப்பண்ணியபடியால், நான் உன் குடும்பத்தை நேபாத்தின் மகன் யெரொபெயாமின் குடும்பத்தைப்போலவும், அகியாவின் மகன் பாஷாவின் குடும்பத்தைப்போலவும் மாற்றுவேன்” என்று யெகோவா கூறுகிறார்.
23
“மேலும் யேசபேலைக் குறித்து யெகோவா, ‘யெஸ்ரயேலின் பட்டண மதிலின் அருகே அவளை நாய்கள் தின்னும்’ என்று சொல்கிறார்.
24
“பட்டணத்திற்குள் இறக்கிற ஆகாபின் குடும்பத்தினரை நாய்கள் தின்னும் என்றும் பட்டணத்திற்கு வெளியே இறக்கிறவர்களை ஆகாயத்துப் பறவைகள் தின்னும் என்றும் கூறுகிறார்” என்றான்.
25
தன் மனைவியாகிய யேசபேலினால் தூண்டப்பட்டு, யெகோவாவுக்குமுன் தீமைசெய்ய தன்னை விற்றுப்போட்ட ஆகாபைப் போல் வேறு யாரும் இருந்ததில்லை.
26
இஸ்ரயேலருக்கு முன்பாக யெகோவா துரத்திய எமோரியரைப்போலவே, அவனும் விக்கிரகங்களைப் பின்பற்றி, மிகவும் கீழ்த்தரமாக நடந்தான்.
Settings